உணரட்டுமா என்றான் அவன்

>> Tuesday, October 19, 2010

உணரட்டுமா என்றான் அவன்

(உணரட்டுமா என்றான் அவன்
எவ்வளவு என்றாள் அவள்
நிறைய என்றான் அவன்)
ஏன் கூடாது என்றாள் அவள்

(வாயேன் என்றான் அவன்
ரொம்ப தூரம் வேண்டாம் என்றாள் அவள்
எது ரொம்ப என்றான் அவன்
நீ இருக்குமிடம் என்றாள் அவள்)

இருக்கட்டுமா என்றான் அவன்
(எப்படி என்றாள் அவள்
இதைப்போலத்தான் என்றான் அவன்
நீ முத்தமிட்டால் என்றாள் அவள்

நகரட்டுமா என்றான் அவன்
இது காதலேதான் என்றாள் அவள்)
நீ விரும்பினால்தான் என்றான் அவன்
(ஆனால் என்னைக் கொல்கிறாய் என்றாள் அவள்

என்றாலும் இது வாழ்க்கை என்றான் அவன்
ஆனாலும் உன் மனைவி என்றாள் அவள்
இப்போதே என்றான் அவன்)
ஒ..ஓ என்றாள் அவள்

(டிப்...டாப்...இது அவன்
நின்றுவிடாதே இது அவள்
இல்லை இது அவன்)
மெதுவாக இது அவள்

(வர...வா? என்றான் அவன்
உம்...ம் என்றாள் அவள்
அருமையடி நீ என்றான் அவன்
என்னுடையவன் நீ என்றாள் அவள்)

தமிழில் : பெருந்தேவி


may i feel said he by E. E. Cummings

may i feel said he
(i'll squeal said she
just once said he)
it's fun said she

(may i touch said he
how much said she
a lot said he)
why not said she

(let's go said he
not too far said she
what's too far said he
where you are said she)

may i stay said he
(which way said she
like this said he
if you kiss said she

may i move said he
is it love said she)
if you're willing said he
(but you're killing said she

but it's life said he
but your wife said she
now said he)
ow said she

(tiptop said he
don't stop said she
oh no said he)
go slow said she

(cccome?said he
ummm said she)
you're divine!said he
(you are Mine said she)

Read more...

சலவை - குழூர் வில்சன்

>> Monday, September 27, 2010

வளர்ந்து வரும் இளம் மலையாளக் கவிஞர்களில் குழூர் வில்சன் மிக முக்கியமானவர். மலையாள - தமிழ்க்கவிஞர்கள் சந்தித்துக் கவிதை பற்றி உரையாட குற்றாலத்தில் கூடியபோது கேரளத்தில் இருந்து கலந்து கொண்டார் இவர்.தமிழ்க்கவிதைகளை மிக விரும்பி வாசிப்பவர். மனுஷ்யபுத்திரன், கல்யாண்ஜி என்று மிகச் சில கவிஞர்களையே வாசித்திருக்கும் குழூருக்கு தமிழ்க்கவிதைகளை தொடர்ந்து பரவலாக வாசிக்க முடியவில்லையே என்ற வருத்தமும் உண்டு

கொச்சியைச் சேர்ந்த குழூரின் தகப்பனார் அவரின் மொழியிலேயே சொல்வதானல் ‘கெடா வெட்டுக்காரன்’ எனவே மலையாள மொழிசார்ந்த கிராமியப்பாடல்களில் நல்ல தேர்ச்சியும் அது குறித்த தெளிவான பார்வையும் குழூரின் எழுத்துக்களில் தென்படும்

ஏசியாநெட்டில் செய்திப்பிரிவில் பணியாற்றிய வில்ஸன் தற்போது அமீரகத்தில் அஜ்மானில் இயங்கும் பண்பலை ஒன்றின் செய்திப்பிரிவுக்கு தலைமையேற்றிருக்கிறார். அன்றாடச் செய்திகளின் நெருக்கடிகளுக்கிடையிலும் புனைவுக்காகவும் தனது சொந்த மண்ணின் கலை இலக்கியம் சார்ந்த பின்புலங்களுக்காகவும் இயங்கும் எளிய மனது இவருக்குண்டு

***********************

சலவை


சட்டையாகவோ
ஜட்டியாகவோ
இருந்திருந்தால்
அந்த மூலையை நோக்கி
எடுத்தெறிந்திருக்கலாம்

இது
உடம்பு

குளியல் அறையில்
சாதாரணமாய் கழுவினால் போதாது

மிக மோசமான
துணிகளை
சலவைக்காரரிடம்
வெளுக்கக்
கொடுப்பது போல

ஆற்றிற்கோ
கடலுக்கோ சலவைக்குக்
கொடுக்க வேண்டும்

ஒருவேளை
திரும்பத் தந்தாலும்
தரக்கூடும் அது.

*********************************************

பயமாயிருக்கிறது எனக்கு
பணமில்லாத என்னை

வட்டிக்காரனின்
'உள்ளாடைகளற்ற' வசை

கஞ்சி பரிமாறும்
அம்மாவின் கஞ்சத்தனம்

தேய்ந்த செறுப்பின் மீது
அந்தப் பெண்ணின் பார்வை

பிச்சைக்காரனின்
ஏளனச் சிரிப்பு

பேருந்துக்கு பணம் கொடுக்கும்
நண்பனின் நகைச்சுவை

தேநீர்கடை
குமாரன் அண்ணாச்சியின் துர்முகம்

பயமாயிருக்கிறது எனக்கு
பணம் வைத்திருக்கும் உன்னை


தமிழில் : ஆசிப் மீரான்

Read more...

முன்கை பற்றி நடத்தி!

>> Thursday, September 23, 2010

ஐயோ! எனின் யான் புலி அஞ் சுவலே;

அணைத்தனன் கொளினே, அகன்மார்புஎடுக்கல்லேன்!

என்போல் பெருவிதிர்ப்பு உறுக, நின்னை

இன்னாது உற்ற அறனில் கூற்றே!

திரைவளை முன்கை பற்றி

வரைநிழல் சேர்கம்- நடந்திசின் சிறிதே!


புறநானூறு - 255

பாடியவர்: வன்பரணர்

திணை: பொதுவியல்

துறை: முதுபாலை

விளக்கம் :  http://angumingum.wordpress.com/2008/04/14/words_puram/


***************************************

I am afraid to shout

I am afraid to shout for help
in this tiger infested place.
If I try to lift you by myself-
I can’t hold your broad chest in my arms.

O may unrighteous Death
who has approached you cruelly
feel embarrassed like me.
Dear one, just hold my wrist
and try to walk a little,
We shall try at least to reach
the shade of the hill beyond.

- Vanparanar

Purananuru – 255


Book : Love Stands Alone (Selections from Tamil Sangam Poetry)

Translated By : M.L.Thangappa - நேர்காணல்



Love Stands Alone - நூல் குறிப்புகள் :

http://sharanyamanivannan.wordpress.com/2010/06/27/review-a-r-venkatachalapathys-love-stands-alone/

http://httpdevamaindhan.blogspot.com/2010_02_01_archive.html

http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=6099

Read more...

என் கனவு

>> Tuesday, September 21, 2010

பல நாட்கள் ஆகிப் போனது
என் கனவை நான் மறந்தே போனேன்
ஆனால் அப்போது அங்கிருந்தது அது
என் முன்னால்
சூரியன் போல பிரகாசமாய்
என் கனவு

அப்புறம் அந்த சுவர் எழுந்தது
மெள்ள எழுந்தது
மெள்ளவே
எனக்கும் என் கனவிற்கும் நடுவே
எழுந்து கொண்டே இருந்தது
வானம் தட்டும் மட்டும்
அந்த சுவர்

நிழல்
நான் கருப்பாக இருக்கிறேன்
நான் அந்த நிழலுள் உறைந்துக் கிடக்கிறேன்
என் கனவின் வெளிச்சம்
இனி என்முன் இல்லை
என் மேல்
வெறும் தடிச்சுவர்
வெறும் நிழல்

என் கைகளே
என் கரிய கைகளே
சுவரை உடைத்து வெளியேறுங்கள்
என் கனவை கண்டெடுங்கள்
உதவுங்கள்
இந்த இருட்டை சிதைக்க
இந்த இரவை நொறுக்க
இந்த நிழலை உடைக்க
ஓராயிரம் சூரிய வெளிச்சங்களாக
சுழலும் ஓராயிரம் சூரியக் கனவுகளாக

தமிழில் : பூங்குழலி



********************************************

It was a long time ago
By Langston Hughes

It was a long time ago.
I have almost forgotten my dream.
But it was there then,
In front of me,
Bright like a sun--
My dream.
And then the wall rose,
Rose slowly,
Slowly,
Between me and my dream.
Rose until it touched the sky--
The wall.Shadow.
I am black.
I lie down in the shadow.
No longer the light of my dream before me,
Above me.
Only the thick wall.
Only the shadow.
My hands!
My dark hands!
Break through the wall!
Find my dream!
Help me to shatter this darkness,
To smash this night,
To break this shadow
Into a thousand lights of sun,
Into a thousand whirling dreams Of sun!

Read more...

சங்கப் பாடல்கள் - Love Stands Alone

>> Tuesday, August 31, 2010

நல்லந்துவனார் அருளிய


நெய்தற்கலி (கலித்தொகை 119)

அகன் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாயாகப்
பகல் நுங்கியது போலப் படு சுடர் கல் சேர,
இகல் மிகு நேமியான் நிறம் போல இருள் இவர,
நிலவுக் காண்பது போல அணி மதி ஏர்தர,
கண் பாயல் பெற்ற போல் கணைக் கால மலர் கூம்ப,

தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச,
முறுவல் கொள்பவை போல முகை அவிழ்பு புதல் நந்த,
சிறு வெதிர்ங் குழல் போலச் சுரும்பு இமிர்ந்து இம்மென,
பறவை தம் பார்ப்பு உள்ள, கறவை தம் பதிவயின்
கன்று அமர் விருப்பொடு மன்று நிறை புகுதர,

மா வதி சேர, மாலை வாள் கொள,
அந்தி அந்தணர் எதிர்கொள, அயர்ந்து
செந் தீச் செவ்அழல் தொடங்க வந்ததை
வால் இழை மகளிர் உயிர் பொதி அவிழ்க்கும்
காலை ஆவது அறியார்,

மாலை என்மனார், மயங்கியோரே.


The Cruelest Hour

The sun descends into the caverns of the
darkening western hills
drawing the day into his mouth of receding rays
with which he lit up heaven and earth in the morning
Darkness overhangs and waits
Like the black complexioned god of the deadly battle wheel.
As the beautiful moon begins to climb the vault of blue,
Lotus petals begin to close like eyelids drooping in slumber.
Trees with their bending boughs appear like worthy men
Who hang their heads in modesty on hearing praise.
Pearly buds unfold in the dark green foliage,
looking as though the bushes are grinning.
The humming notes of the honey bees flow to match
the music of the cowherds’ flutes.
The birds come flying to their roosts.
The cows are hurrying back from pasture, longing for their calves.
And all other animals reach their habitations.
The priests welcome the evening with the chanting of hymns.
Torch in hand, graceful maidens light the lamps in their homes.
Thus comes the twilight hour
which the naïve call evening.
But it is really the cruelest hour that has come
to torment lovesick girls in their loneliness.

(what the girl told her friend)

Neidal

- Nallanduvanar

KALITHOKAI   119

Book : Love Stands Alone (Selections from Tamil Sangam Poetry)

Translated By : M.L.Thangappa    -     நேர்காணல்

Love Stands Alone - நூல் குறிப்புகள் :

http://sharanyamanivannan.wordpress.com/2010/06/27/review-a-r-venkatachalapathys-love-stands-alone/

http://httpdevamaindhan.blogspot.com/2010_02_01_archive.html
 
http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=6099

Read more...

பாப்லோ நெரூதா கவிதைகள் - 12 - சுகுமாரன்

>> Monday, August 16, 2010

மச்சுபிச்சுவின் சிகரங்கள்


பன்னிரண்டு
@
என்னுடன் உயிர்தெழுந்து வா, என் சகோதரா.

உனது துயரங்களால் புதைக்கப்பட்ட ஆழத்திலிருந்து
உனது கைகளை நீட்டு.
இறுகிய கல்லறைகளிலிருந்து நீ திரும்பப்போவதில்லை
புதையுண்ட காலத்திலிருந்து நீ எழப்போவதில்லை
உனது கனத்த குரலோ
கண்குழியிலிருந்து தோண்டப்பட்ட உனது விழிகளோ
மீண்டும் வரப்போவதில்லை.

பூமியின் அடியாழத்திலிருந்து என்னைப் பார்.
நிலங்களை உழுபவனே,
நெசவாளியே,
வாய் திறவாத மேய்ப்பனே,
குலச்சின்னத்தின் சந்ததியே,
வஞ்சிக்கும் சாரத்தின்மேல் நிற்கும் கொத்தனே,
நசுங்கிய விரல்களுள்ள பொற்கொல்லனே,
நாற்றுகளை நினைத்துப் பதறும் உழவனே,
களிமண்ணுக்கிடையே விரயமாகும் குயவனே,
உனது
புதையுண்ட புராதன துக்கங்களை
புதுவாழ்வின் குவளைக்குள் கொண்டுவா.

உனது இரத்தத்தையும் உனது தழும்பையும்
என்னிடம் காட்டு.
பிறகு
வைரம் ஒளிமங்கிப்போனதாலோ
சோளக்கதிரையோ கல்லையோ
காலத்திற் தராமல் நிலம் பொய்த்ததாலோ
சவுக்கடி பட்டது இங்கேதான் என்று
என்னிடம் சொல்.
நீ இடறிவிழுந்த பாறையும்
உனது உடலை சிலுவையேற்ற
அவர்கள் தறித்த அந்த மரத்தையும்
என்னிடம் காட்டு.

புராதன விளக்குகளையேற்ற
சிக்கிமுக்கிக் கற்களை உரசு.
நூற்றாண்டுகளாக
உனது காயங்களில் ஒட்டியிருக்கும்
சவுக்குகளைக் கொளுத்து.
உனது இரத்தத்துடன் ஒளிரும்
கோடரிகளைக் கொளுத்து.

உனது இறந்த உதடுகளுக்காகப் பேசவந்திருக்கிறேன் நான்.

பூமிமுழுவதிலும்
இறந்த உதடுகள் ஒன்றிணையட்டும்.
ஆழங்களிலிருந்து
இந்த நீண்ட இரவை எனக்காக நெய்துகொடு.
உன்னோடு இங்கே நிலைப்பேன்.

சங்கிலி சங்கிலியாக
கண்ணி கண்ணியாக
படிப்படியாக
எல்லாவற்றையும் என்னிடம் சொல்.
நீ ஒளித்துவைத்திருக்கும் கத்திகளைக் கூராக்கு.
சூரியச் சீற்றத்தின் பெருக்காக
புதையுண்ட சிறுத்தைகளின் அமேசான் நதியாக
அந்தக் கத்திகளை
என் மார்பில் பாய்ச்சு.
மணிக்கணக்காக
நாட்கணக்காக
ஆண்டுக்கணக்காக
இருண்ட யுகங்களாக
நட்சத்திர நூற்றாண்டுகளாக
என்னை அழவிடு.

எனக்கு மௌனத்தைக்கொடு, எனக்கு நீரைக்கொடு,
நம்பிக்கையையும்.

எனக்கு போராட்டத்தையும் இரும்பையும்
எரிமலைகளையும் கொடு.

காந்தங்கள்போல என் உடலோடு தொற்றட்டும் உடல்கள்.

எனது நாளங்களுக்குள்ளும் எனது நாவுக்குள்ளும்
விரைந்து வா.

எனது குரலினூடே எனது இரத்தத்தினூடே பேசு.
@

- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)



நன்றி : சுகுமாரன்

Read more...

பாப்லோ நெரூதா கவிதைகள் - 11 - சுகுமாரன்

>> Monday, August 9, 2010

மாச்சுபிச்சுவின் சிகரங்கள்


பதினொன்று
@

குலைந்த அழகினூடே
இரவு உருவாக்கிய கல்லினூடே
என் கைகளை ஆழ்த்தினேன்.
ஆயிரமாண்டுகளாகச் சிறைப்பட்ட பறவைபோல,
பழைய, நினைக்கப்படாத மனித இதயம்போல
என்னுள் துடித்தது அது.

இன்று
இந்த மகிழ்ச்சியை மறக்க விடு.
எல்லாக் கடல்களையும்விடப் பரந்தது
ஏனெனில்
எல்லாக் கடல்களையும்விட
கடலின் கழுத்துநகையான தீவுகளைவிட
மனிதன் பரந்தவன்.
ஒரு கிணற்றில் விழுவதுபோல
நாம் அவனுக்குள் விழவேண்டும்.
மர்ம நீரின் கிளைகளுடனும்
மூழ்கிப்போன உண்மைகளுடனும்
மேலேறி வரவேண்டும்.

கல்லின் சுற்றளவை,
வலுவான பரிமாணங்களை,
எல்லைதாண்டிய நீட்சியை,
தேன்கூட்டின் அடித்தளங்களை
மறந்துவிட என்னை அனுமதி.
ஒரு செங்கோணத்தின் கிடைக்கோடாக
கம்பளிச் சட்டைக்கும்
கரிப்பு ரத்தத்துக்கும் அடியில் நகர
என் கைக்கு அனுமதி கொடு.

குதிரை லாடம்போன்ற துருப்பிடித்த சிறகுகளுடன் பறந்து
என் நெற்றிப்பொட்டில் கொத்துகிறது வெறிக்கழுகு.
அதன்
பிணந்தின்னிச் சிறகுகளின் சூறாவளி
சாய்வான படிக்கட்டுகளில்
இருட்புழுதியை வாரியிறைக்கிறது.
அந்தப் பறவையின் வேகத்தையோ
அதன்
நகங்களின் குருட்டு அரிவாள்களையோ
நான் பார்க்கவில்லை.

புராதன மனிதனை, அடிமையை,
வயலில் கிடந்துறங்குபவனை
நான் பார்க்கிறேன்.
ஓர் உடலை
ஓர் ஆயிரம் உடல்களை
ஓர் ஆணை
ஓர் ஆயிரம் பெண்களை
இரவாலும் மழையாலும் பொசுக்கப்பட்டு,
இருண்ட காற்றால்
இறுகிய கற்கள்போலக் கறுத்தவர்களை
நான் பார்க்கிறேன்:
விராகோச்சாவின் மைந்தன் யுவான் ஸ்ப்ளிட்ஸ்டோன்ஸ்
பச்சை நட்சத்திரத்தின் வாரிசு யுவான் கோல்டுபெல்லி
மரகதத்தின் பேரன் யுவான் பேர்·புட்
என்னுடன் உயிர்தெழுகிறார்கள்,
எனது சகோதரர்களாக!
@


குறிப்பு:-
யுவான் ஸ்ப்ளிட்ஸ்டோன்ஸ் (Juan Splitstones) கல்வெட்டுபவன்
யுவான் கோல்டுபெல்லி (Juan Coldbelly) ஆறிய உணவை உண்பவன்
யுவான் பேர்·புட் (Juan Barefoot) வெறுங்காலில் நடப்பவன்

- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)



நன்றி : சுகுமாரன்

Read more...

பாப்லோ நெரூதா கவிதைகள் - 10 - சுகுமாரன்

>> Monday, August 2, 2010

மாச்சுபிச்சுவின் சிகரங்கள்




பத்து
@

கல்லுக்குள் கல், மனிதன், எங்கிருந்தான் அவன்?
காற்றுக்குள் காற்று, மனிதன், எங்கிருந்தான் அவன்?
காலத்துக்குள் காலம், மனிதன், எங்கிருந்தான் அவன்?
நீயும் நிச்சயமின்மையின் நொறுங்கிய துண்டுதானா?
இன்றைய தெருக்கள்வழியே,
பழைய தடங்களில்,
இலையுதிர்காலச் சருகுக்குவியல்களினூடே,
ஆண்மையைக் கல்லறைகளில் மோதிச் சிதறும்
வெற்றுக்கூடான கழுகின் நொறுங்கிய துண்டுதானா நீயும்?
பாவம் கைகள், பாவம் கால்கள், பாவம் அருமையான உயிர்.
விழாக்காலத்தில்
காளைச்சண்டைக்காரர்களின் குத்தீட்டிகள்மேல் பெய்யும் மழைபோல
உன்னில் வந்துவிழும் ஒளியின் நாட்கள்.
அவை தமது இருண்ட உணவை
பசித்த வாயில்
ஒவ்வொரு இதழாகப் புகட்டியதோ?
பஞ்சம், மனிதகுலத்தின் பவளம், பசி, ரகசியத்தாவரம், விறகுவெட்டிகளின் வேர்,
வழுக்குச் சுவர்களுள்ள இந்த கோபுரங்களிலேறி
உனது சங்கிலிப்பாறைகளையும் பஞ்சம் துளைத்ததோ?

நெடுஞ்சாலைகளின் உப்பே,
ஒரு கொல்லக்கரண்டியைக் கேட்கிறேன்.
கட்டிடமே,
கல்லால் ஆன மகரந்தக் கேசரத்தை
ஒரு சிறு சுள்ளியால் குடைய அனுமதி,
காற்றின் பறவைகளனைத்தையும் ஏறிக்கடந்து
வெறுமைக்குள் நுழைய அனுமதி,
மனிதனைத் தீண்டும்வரை உன் குடல்களைச் சுரண்ட அனுமதி.
மாச்சுபிச்சு,
கந்தையான அஸ்திவாரத்தின்மேல்
கல்லின்மேல் கல்லாக எழும்பினாயா நீ?
நிலக்கரிமேல் நிலக்கரி அடர்ந்து அதன் ஆழத்தில் கண்ணீரா?
நெருப்பின்பொன்மகுடம், அதற்குள்ளே
இரத்தத்தின் வீக்கமா?

நீ இங்கே புதைத்த அடிமையை என்னிடம் திரும்பக்கொடு.
இந்த நிலங்களின் ஏழைகளது வறண்டரொட்டியைப் பிடுங்கி வீசு.
அந்த அடிமைக்குடிலின் சன்னலை,
அவன் உடுத்திருந்த கந்தலை எனக்குக் காட்டு.
உயிரோடிருந்தபோது அவன் உறங்கியதெப்படி என்று சொல்லிக்கொடு,
தளர்ச்சியால் அவன் உராய்ந்து சுவரில் தோன்றிய
கறுத்த தழும்புபோல வாய்பிளந்திருக்கக்
குறட்டைவிட்டு அவன் உறங்கியதெப்படி என்று சொல்லிக்கொடு.
அந்தச் சுவர், அந்தச் சுவர்.
ஒவ்வொரு கல்லும் தளர்ந்து
அவனது உறக்கத்தின்மேல் அழுத்தியிருக்குமோ?
நிலவுக்குக் கீழே உறங்குவதுபோல அவன் அகப்பட்டிருப்பானோ?

புராதன அமெரிக்கா, கடலின் முகத்திரையணிந்த மணமகளே,
வெளிச்சமும் ஆராதனையும் கலந்த திருமணத் தோரணங்களின் கீழே
முரசுகளிலும் ஈட்டிகளிலும் தெறிக்கும் இடிமுழக்கத்துடன் இணைந்த
உன் விரல்கள்
கானகத்தின் விளிம்பிலிருந்து
கடவுளரின் அசாதாரண பீடங்கள்வரை நீளும்போது
அமிழ்ந்துபோயின.
மனதில் ரோஜாவையும் குளிரின் மயிரிழையையும்கொண்டிருந்த
உன் விரல்கள்,
புது தானியத்தின் இரத்தம்படிந்த நெஞ்சை
ஒளிரும் பொருளாக மாற்றிய உன் விரல்களும்
திட்டமான வெறுமையில் அமிழ்ந்தன.
அவற்றோடு, அவற்றோடு புதைந்துபோன அமெரிக்கா!
உனது குமட்டும்குடலுக்குள்
பருந்துப்பசியை ரகசியமாக வைத்திருந்தாயா?
@

- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)



நன்றி : சுகுமாரன்

Read more...

பாப்லோ நெரூதா கவிதைகள் - 9 - சுகுமாரன்

>> Monday, July 26, 2010

மாச்சுபிச்சுவின் சிகரங்கள்


ஒன்பது
@

நட்சத்திரங்களால் சூழப்பட்ட கழுகு, மூடுபனியில் திராட்சைத் தோட்டம்.

கைவிடப்பட்ட பிரகாரம், குருட்டுக் கொலைவாள்.

நட்சத்திர ஒட்டியாணம், பரிசுத்த அப்பம்.

பாய்ந்திறங்கும் படிக்கட்டுகள், அளக்கமுடியாத கண்ணிமை.

முக்கோணமான உள்ளாடை, கல்லின் மகரந்தம்.

கருங்கல் விளக்கு, கல் அப்பம்.

உலோகப்பாம்பு, கல் ரோஜா.

புதைந்த கப்பல், கல் ஆதாரம்.

நிலவில் குதிரை, கல் வெளிச்சம்.

இரவு பகல் பிரியும் கால்வட்டம், கல்லின் ஆவி.

இறுதியான வடிவகணிதம், கல்லின் புத்தகம்.

காற்றின் சீறலுக்கிடையில் செதுக்கப்பட்ட பனிமலை.

மூழ்கிப்போன காலத்தின் பவளப்புற்று.

விரல்கள் தேய்த்து மென்மையாக்கிய கொத்தளம்.

சிறகுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட கூரை.

கண்ணாடிக் கற்றைகள், புயற்காற்றின் அடித்தளங்கள்.

படரும் திராட்சைக்கொடிகளால் சிதைந்த சிம்மாசனங்கள்.

மலைச்சரிவில் நிலைத்து நிற்கும் புயற்காற்று.

நிச்சலனமான மரகத அருவி.

உறங்கியவர்களின் பாரம்பரிய மணியோசை.

கீழ்ப்படுத்தப்பட்ட பனித்திரளின் கைவிலங்கு.

சிலைகளில் நிமிரும் இரும்பு.

அடையமுடியாத மூடப்பட்ட புயல்.

சிறுத்தைப் பாதங்கள், இரத்தக்கல்.

உயரும் நிழல், பனியின் விவாத அரங்கு.

விரல்களிலும் வேர்களிலும் கொடியுயர்த்திய இரவு.

மூடுபனியின் ஜன்னல், இதயமற்ற புறா.

இரவின் தளிர்ப்படர்ப்பு, இடிமுழக்கத்தின் பிம்பம்.

மலைத்தொடரின் முதுகெலும்பு, கடலின் கூரை.

வழிதவறிய கழுகுகளின் கட்டிடவடிவம்.

ஆகாயத்தின் கயிறு, ஹ¥ங்காரத்தின் உச்சம்,

இரத்த அளவு,செயற்கை நட்சத்திரம்.

உலோகக் குமிழ், ஸ்படிகத்தின் நிலவு.

ஆண்டீயப்பாம்பு, வாடாமல்லியின் நெற்றி.

மௌனத்தின் மாடம், களங்கமில்லா வீடு.

கடலின் மணமகள், தேவாலயத்தின் மரம்.

உப்பின் கிளை, கருஞ்சிறகுள்ள செர்ரி மரம்.

பனிமூடிய பற்கள், குளிர்ந்த இடி,

பயந்த நிலவு, பயமுறுத்தும் கல்.

குளிரின் சிகை, காற்றின் உராய்வு.

கைகளின் எரிமலை, இருண்ட அருவி.

வெள்ளி அலை, காலம் சேருமிடம்.
@
- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)




நன்றி : சுகுமாரன்

Read more...

பாப்லோ நெரூதா கவிதைகள் - 8 - சுகுமாரன்

>> Monday, July 19, 2010

மாச்சுபிச்சுவின் சிகரங்கள்


எட்டு
@

என்னுடன் வா, அமெரிக்கக் காதலியே!

என்னோடிணைந்து இந்த மர்மக்கற்களை முத்தமிடு.
உருபம்பா நதியின் வெள்ளிநீரோட்டம்
மகரந்தத்தை அதன் தங்கக்கிண்ணத்தில் பறந்துவிழச் செய்கிறது.
குருட்டுக்கொடிகளின் புதர்,
உறைந்த தாவரம்,கட்டறுபடாத பூமாலை - எல்லாமும்
இந்தப் பெட்டகத்தின் மௌனத்திலிருந்து
உயரப் பறந்துபோகின்றன.
பூமியின் சிறகுகளுக்கிடையில்
குறைபட்ட வாழ்வே வா,
அறையும் காற்றில் செதுக்கப்பட்ட ஸ்படிகமே,
கானக நீரே,
படையெடுப்புக்காக அணிவகுத்து நிற்கும்
மரகதங்களைப் பிளந்து
பனியின் விளிம்பிலிருந்து விழு.

ஆண்டீஸ் மலையின் நெருப்புக் கற்களிலிருந்து
இரவு சரிந்து
விடியலின் பாதம் தொடும்வரை
காதல்செய், காதல்செய்.
பிறகு வெளியே வந்து
பாடிக்கொண்டிருக்கும்
பனியின் குருட்டுச் சந்ததியைப் பற்றிச் சிந்தனைசெய்.

ஒலிக்கும் தறிகளின் வில்கமயுவே,
காயம்பட்ட பனிப்படலத்தின் வெண்நுரையில்
உனக்கு பிதுரார்ஜிதமாகக் கிடைத்த
இடிகள் முழங்கும்போது,
உனது தென்திசைக் காற்று
பனிமலை சரிவதுபோல உறுமி
ஆகாயத்தை எழுப்ப உயரும்போது,
உனது ஆண்டியன் சதுப்பிலிருந்து
ஒரு கணம் விடுபட்ட சொல்லை
என்ன மொழியில் உச்சரிப்பாய் நீ?

குளிரின் மின்னலைக் கைப்பற்றியதும்,
கைவிட்டதும்,
மலைச்சிகரங்களில் அதைக் கட்டியிட்டதும்,
உறைந்த கண்ணீருக்கிடையில்
அதைக் கைக்கொண்டதும் யார்?
மெல்லிய வாள்களின்மேல் அது சுழல்கிறது
அதன் பதமான சூலகங்களில் தாக்கப்படுகிறது
போர் வீரனின் படுக்கையறைக்கு இட்டுச்செல்லப்படுகிறது
அவனது
பாறைபோல இறுகிய முடிவுகளுடன் வேட்டையாடப்படுகிறது.

உனது மின்னல் வெட்டுக்கள்
கிசுகிசுப்பதென்ன?
உனது ரகசியக்ககலமான மின்னல் வீச்சு
சொற்கள் நிரம்பிப் பயணம் செய்திருந்ததா?
மிஞ்சியிருக்கும் உனது நுட்பமான நீரில்
அரைபடும் உறைந்த சொற்களாக,
கறுத்த மொழிகளாக, பொன்னிழைத் தோரணங்களாக,
அடியாழமில்லாத உதடுகளாக,
ஒடுக்கப்பட்ட அலறல்களாக
அலைவது யார்?

தொலைதூர பூமியிலிருந்து நம்மைக் காணவரும்
பூக்களின் இமைகளை வெட்டியெறிவது யார்?
நிலக்கரியின் பரப்பில் அவர்கள் சிதைந்து மடிய
அருவியாகத் துள்ளும் உனது கைகளிலிருந்து
இறந்த விதைகளைத் தட்டிச் சிதறச் செய்வது யார்?

இந்தச் சங்கிலிகளின் கிளைகளைத்
தொங்கவிட்டது யார்?
நமது விரகத்தை மீண்டும் புதைத்தது யார்?


அன்பே, அன்பே,
விளிம்புகளுக்கு அருகில் வராதே!
புதையுண்ட தலையை வழிபடாதே!
தீர்மானங்களை முறிக்கும் தனது உறைவிடத்திலிருந்து
எல்லா செயல்களையும் காலம் தீர்க்கட்டும்.
இங்கே
மலைச்சரிவுகளுக்கும் பெருக்கெடுத்தோடும் நீருக்குமிடையில்
இந்தக் கணவாய்களுக்கு மத்தியில்,
ஒளி ஊடுருவும் படிமமாக வீசும் காற்றை
உயர்ந்த மலைகளைக் குடைந்தோடும் நீரோடையை
கசப்பு வாழ்த்துக்கள்கொண்ட பனித்துளியை
உள்வாங்கி
ஒவ்வொரு மலராக
அடர்ந்த வனத்தினூடே
படர்ந்திருக்கும் சாத்தானியக் கொடியை
மிதித்து விலக்கி மேலே ஏறி வா!

கல்லும் கானகமும்
பச்சைநிற நட்சத்திரத் துகள்கள்
தெளிந்த ஆகாயம்...
உயிருள்ள தடாகம்போலவோ
மௌனத்தின் புதிய தளம்போலவோ
மாண்டூர் பள்ளத்தாக்கு பிளந்து திறக்கிறது.

எனது வாழ்க்கைக்கு வா,
எனது விடியலுக்கு வா,
எனது தனிமையின் உச்சங்கலுக்கு வா.

வீழ்ந்த பேரரசு
இப்போதும் பிழைத்திருக்கிறது.
இந்தக் கற்தளத்தின் மேல்
சூறையாடப்போகும் கொள்ளைக்கப்பல்போல
கழுகின் நிழல் விரைகிறது.

- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)




நன்றி : சுகுமாரன்

Read more...

பாப்லோ நெரூதா கவிதைகள் - 7 - சுகுமாரன்

>> Monday, July 12, 2010

மாச்சு பிச்சுவின் சிகரங்கள்
ஏழு
@

ஒரே இருட்குழியில் மடிந்தவர்களே,
ஒரே மலையிடுக்கின் ஆழத்து நிழல்களே,
உங்களது மகத்துவம் நோக்கி
உண்மையான, சகலத்தையும் விழுங்கும் மரணம்
இப்படித்தான்
துளைவிழுந்த பாறைகளிலிருந்து,
செந்நிற சுவர்ப்புடைப்புகளிலிருந்து,
அருவியாகப் பெருகும் வாய்க்கால்களிலிருந்து வந்தது.
ஓர் இலையுதிர்காலம்போல
நீங்கள் தடுமாறி ஒற்றை மரணத்துக்குள் விழுந்தீர்கள்.
இன்று, வெறும் காற்று
உங்களுக்காகத் துக்கப்படுவதில்லை.
உங்களது களிமண் கால்களை உணர்வதில்லை.
மின்னலின் கத்திகள் வானத்தை வெட்டியபோதும்
வலுவான மரம் காற்றால் வீழ்த்தப்பட்டு
பனியால் விழுங்கப்பட்டபோதும்
ஆகாயத்தை வடிகட்டிய
உங்கள் பாத்திரங்களை நினைக்கவில்லை.

அது உயர்த்திய கை சட்டென்று
சிகரங்களிலிருந்து காலத்தின் ஆழத்தில் எறியப்பட்டது.
நீங்கள் இப்போது இல்லை.
சிலந்தி விரல்கள், மெல்லிய இழைகள், பின்னப்பட்ட துணி...
நீங்கள்
என்னென்னவாக இருந்தீர்களோ, அவையெல்லாம்-
சடங்குகள், சிதிலமான சொற்கள்,
கண்கூசச் செய்யும் வெளிச்சத்தின் முகமூடிகள்...அவையெல்லாம்
உதிர்ந்து போயின.

எனினும்
கல்லிலும் மொழியிலும் நிரந்தரமாயிற்று ஒன்று.
உயிருள்ளதும் இறந்ததும் விறைத்ததுமான
ஒவ்வொரு கையும்
ஒரு குவளைபோல அந்த நகரத்தை உயர்த்தின.
ஏராளமான மரணங்களால்
தாங்கி நிறுத்தப்பட்ட அந்த மதில்,
ஏராளமான வாழ்வுகளால்
உராயப்பட்ட நெருப்புக்கற்களின் இதழ்கள்,
வாடாத ரோஜா, நமது வீடு, ஆண்டீஸ் மலைத்தொடர்கள்,
அதன் பனிபடர்ந்த எல்லைகள்.

களிமண் நிறக் கை
முழுவதும் களிமண்ணாக மாறியபோது,
தாக்கப்பட்ட சுவர்கள்மீதும்
கொத்தளங்கள் மீதும்
குறுகிய இமைகள் மூடியபோது,
நம்முள்ளிருந்த எல்லாரும்
மறுபடியும் வளைக்குள் ஒடுங்கியபோது,
மானுட விடியலின் சிகரங்களின்மேல்
கலையாத துல்லியமாக மிஞ்சியது:
எப்போதும் நமது மௌனத்தை நிறைத்துவைத்திருக்கும்
இந்த நீண்ட குவளை.
ஏராளமான வாழ்க்கைகளைக் கடந்த
இந்தக் கல்லின் வாழ்வு.
@

- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)


நன்றி : சுகுமாரன்

Read more...

பாப்லோ நெரூதா கவிதைகள் - 6 - சுகுமாரன்

>> Monday, July 5, 2010

மாச்சுபிச்சுவின் சிகரங்கள்


ஆறு
@

பூமியின் ஏணியிலேறி
முள்நிறைந்த காட்டுப்புதர்கள் வழியாக
உன்னை வந்தடைந்தேன், மாச்சு பிச்சு!

வெட்டுப்பட்ட படிகளால் உயர்ந்த நகரம்
பூமி அதன் இரவு உடைக்குள்
ஒருபோதும் ஒளித்துவைக்காத கடைசிப் புகலிடம்.
உன்னுள்
இணையாகப் போகும் இருவேறு மரபுகள் சந்திக்கின்றன.
அங்கே
மனிதனையும் வெளிச்சத்தையும்
தொட்டிலாட்டும் முட்களின் காற்று.

கல்லின் தாய், கழுகுகளின் விந்து.

மனித உதயத்தின் பாறைத்தொடர்.

ஆதிமணலில் புதைந்த மண்வெட்டி.

இதுதான் அந்த வாழ்நிலம்;
இதுதான் அந்த இடம்.
இங்கேதான்
செழித்த சோளப்பயிர்கள் நிமிர்ந்து வளர்ந்தன...
சிவந்த வந்தனம்போல மறுபடியும் தாழ்ந்துகுனிய.

மனிதர்களின் ஆசைக்கும்
அவர்களது கல்லறைகளுக்கும்
அன்னையருக்கும் அரசனுக்கும் வழிபாடுகளுக்கும் போர்வீரர்களுக்கும்
உடையணிவிக்க
செம்மறியாடுகளின் தங்கரோமம்
கத்தரிக்கப்பட்டது

இங்கேதான் இரவில்
மாமிசம்திணித்த கூட்டிலிருக்கும் கழுகுகளின் நகங்களும்
மனிதர்களின் கால்களும்
அருகருகே இளைப்பாறின.
விடியலில்
இடிமுழங்கும் காலடிகளுடன்
கலையும்பனிமூட்டத்தில் நடந்து
மண்ணையும் கல்லையும் தொட்டறிந்தார்கள்.
வரவிருக்கும் இரவையும்
வரவிருக்கும் மரணத்தையும்
அந்தத் தீண்டலில் அவர்கள் புரிந்துகொண்டிருக்கலாம்.

உடைகளையும் கைகளையும்
வெறித்துப் பார்க்கிறேன் நான்.
ததும்பி நிறையும் தொட்டிநீரின் சுவடுகளையும்
இதே கண்களால் பார்க்கிறேன் நான்.
பூமியின் கம்பளம்போலச் சரியும் பரப்பைப்
பார்த்து நின்ற ஒரு முகத்தின் ஸ்பரிசத்தால்
தேய்ந்துதேய்ந்து மென்மையான சுவரையும் பார்க்கிறேன்.
எனது இதே கைகளால்
எண்ணெய் பூசி மெருகிடப்பட்ட மரப்பலகைகள்
உடைகள், தோல், பாத்திரங்கள், சொற்கள், மது, ரொட்டித்துண்டுகள்...
எல்லாம் மறைந்துவிட்டன
மண்ணுக்குள் விழுந்துவிட்டன.

காற்று
எலுமிச்சை மலர்களின் விரல்களுடன்
உறங்கும் முகங்களைத் தொடவந்தது.
காற்றின் ஆயிரமாண்டுகள்
காற்றின் வாரங்கள்
காற்றின் மாதங்கள்
நீலக் காற்றின் இரும்புத்தொடர்களின் ஆயிரமாண்டுகள்
தனிமையில் நிற்கும் கற்களைக் கழுவ
மெல்லிய காலடிகளுடன்வரும் புயலின் ஓராயிரமாண்டுகள்.
@
- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)

நன்றி : சுகுமாரன்

Read more...

பாப்லோ நெரூதா கவிதைகள் - 5 - சுகுமாரன்

>> Monday, June 28, 2010

மாச்சுபிச்சுவின் சிகரங்கள்


ஐந்து
@

அந்த அறையிலிருந்த ஏழை
உள்ளீடற்ற சருமத்துக்கடியிலும்
அவசரமாக விழுங்கிய உணவுகளுக்கிடையிலும்
ஏற்றுக்கொண்டிருந்தது,
கடின இதயமுள்ள மரணமே,
இரும்புச் சிறகுள்ள பறவையே,
உன்னையல்ல.
ஒரு பழங்கயிற்றின் சுருண்ட இழையை
துணிவுடன் முன்வராத ஓர் அணுவை
ஒருபோதும் வியர்வையாக மாறாத ஒரு பனித்துளியை.
ஒருபோதும் அது மறுபடிப் பிறக்கவில்லை
இரங்கற்பாடல் பெறாத மரணத்தின் துகள், வெறும் எலும்பு,
உள்ளுக்குள்ளேயே நொறுங்கிப்போன ஒரு தேவாலயமணி.

அயோடின் நாறும் இந்தக் கட்டுகளை அவிழ்த்து
மரணத்தை மென்மையாக்கிய நோவுகளுக்குள்
என் கைகளை நுழைத்தேன்.
ஆன்மாவின் இடைவெளிகளைச் சில்லிடச்செய்யும்படி வீசும்
காற்றைத்தவிர
வேறு எதையும் அந்தக் காயத்தில் நான் சந்திக்கவில்லை.
@

- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)


நன்றி : சுகுமாரன்

Read more...

பாப்லோ நெரூதா கவிதைகள் - 4 - சுகுமாரன்

>> Monday, June 21, 2010

மாச்சுபிச்சுவின் சிகரங்கள்


நான்கு
@

தவிர்க்க முடியாத மரணம் என்னை அழைத்திருக்கிறது பலமுறை:
அலைகளில் கரைந்திருக்கும் உப்பைப்போன்றது அது.
அதன் அரூப வாசனை,
சிதிலங்களையும் உயரங்களையும்
அல்லது
காற்றின் பரந்த வடிவங்களையும் பனிப்பொழிவையும் உணர்த்தியது.


கத்தியின் விளிம்பை
காற்றின் இடுங்கிய வழியை
வயலும் கல்லுமான சவப்போர்வையை
இறுதிப்படிகளின் நட்சத்திரவெறுமையை
அச்சந்தரும் சுழல்வழியை
வந்தடைந்தேன் நான்.
எனினும்
மரணத்தின் பெருங்கடலே,
அலையலையாக அல்ல...
அந்திவெளிச்சத்தின் பாய்ச்சலாக
இருளின் முழுமையானகணக்காக
எங்களை வந்தடைகிறாய்.

எங்கள் பைகளைத்துளாவ ஒருபோதும் நீ வந்ததில்லை,
சிவந்த ஆடையில்லாமலோ,
மௌனத்தில் பொதிந்த கம்பளத்தை ரகசியமாக்காமலோ
இங்கே புதைக்கப்பட்ட அல்லது நிர்மாணிக்கப்பட்ட
கண்ணீரின் மரபு இல்லாமலோ
எங்களை ஒருபோதும் நீ சந்திததில்லை.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்
தனது மிஞ்சிய இலையுதிர்காலங்களை முதுகில்சுமந்து நிற்கும்
ஒரு மரத்தை (ஆயிரக்கணக்கில் உதிர்ந்துகொண்டிருக்கின்றன
இலைகள்) என்னால் நேசிக்கமுடியாது.
மண்ணில்லாத இந்தப் போலிமரணங்களை,
ஆழமில்லாத புத்துயிர்ப்புகளை
என்னால் நேசிக்கமுடியாது.
மிகச் செழிப்பான வாழ்நிலங்களில்
பரந்த கழிமுகங்களில் நீந்த விரும்பினேன்.

தனது காயம்பட்ட வாழ்வை
எனது உயிர்ப்புள்ள விரல்களால் தொடமுடியாமல்
தனது வாசல்களையும் வழிகளையும் அடைத்து
மனிதன் என்னை நிராகரித்துக்கொண்டிருந்தபோது,
வேறு வழிகளில்
தெருக்களினூடே
நதியிலிருந்து நதிக்கு
நகரத்திலிருந்து நகரத்துக்கு
ஒரு படுக்கையிலிருந்து இன்னொரு படுக்கைக்கு வந்தேன் நான்.
கானகத்தினூடே
என் உப்புச்சாயலை இழுத்துக்கொண்டு
கடைசிக் குடிசைகளுக்கு வந்தேன்.
வெளிச்சமும் நெருப்புமில்லாமல்
உணவில்லாமல்,
கல்லும் மௌனமுமில்லாமல்
எனது சொந்த மரணத்தை இறந்தபடி
தனியே நடந்தேன் கடைசியில்.
@

- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)


நன்றி : சுகுமாரன்

Read more...

பாப்லோ நெரூதா கவிதைகள் - 3 - சுகுமாரன்

>> Monday, June 14, 2010

மாச்சுபிச்சுவின் சிகரங்கள்


மூன்று
@

நிரப்ப முடியாத களஞ்சியத்துக்குள் விழும்
சோள மணிகள்போல
கடந்துபோன செயல்களுக்குள்ளும்
அலுப்பூட்டும் நிகழ்வுகளுக்குள்ளும்
ஒன்பது முதல் ஐந்துமணிவரை விழும் மனித வாழ்வு.
ஒவ்வொருவர்க்கும் மரணம் ஒருமுறையல்ல, பலமுறை.
ஒவ்வொரு நாளும் ஒரு மரணம்.
புழுதி, புழு, நகரவிளிம்புகளின் சகதியில் அலையும் வெளிச்சம்.
பருமனான சிறகுகளுடன் ஒரு குறுகிய மரணம்
ஒரு குறுவாள்போல
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நுழைகிறது.

மேய்ப்பர்கள்மீதும்
துறைமுக மைந்தர்கள்மீதும்
கறுத்த ஏர் ஓட்டிகள்மீதும்
இடுங்கிய தெருக்களில் எலிகளாக அலைபவர்கள்மீதும்
ரொட்டியாலும் கத்திகளாலும் ஆக்கிரமிக்கிறது.

எல்லோரும் அவரவரது
சுருக்கமான அன்றாடச் சாவுக்காகக் காத்திருந்து
வலுவிழந்துபோனார்கள்.
ஒவ்வொரு நாளும்
அவர்களது சகிக்கமுடியாத் துயரம்
நடுங்கும் கைகளால் அவர்கள் காலிசெய்த
கறுப்புக்குவளை போலிருந்தது.


- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)


நன்றி : சுகுமாரன்

Read more...

பாப்லோ நெரூதா கவிதைகள் - 2 - சுகுமாரன்

>> Monday, June 7, 2010

மாச்சுபிச்சுவின் சிகரங்கள்
*******************************
இரண்டு
மலர் மலருக்காகத்
தனது விதைகளைப் பரப்புகிறது.
பாறை, தனது மலர்ச்சியை
வைரம், மணலின் கசங்கிய ஆடையில் தூவிப் பராமரிக்கிறது.
எனினும், மனிதன்
கடலின் நிச்சயிக்கப்படாத ஆழத்திலிருந்து
தானே கடைந்தெடுத்த ஒளியின் இதழைக்
கசக்கியெறிகிறான்.
தனது கைகளில் துடிக்கும்
உலோகத்தைத் துளையிடுகிறான்.
துணிகளுக்கும் புகைப்படலத்துக்குமிடையில்
சீக்கிரமே அகப்பட்டு
கசங்கிய மூட்டைபோல ஆன்மா சிறுத்து
மூழ்கிப்போன தரைமீது கிடக்கிறான்.
படிகமாக, உறக்கமின்மையாக, கடலின் கண்ணீராக,
குளிர்ந்த தடாகங்களாக ஆகிறான்.
எனினும் இது போதவில்லை:
கொல்கிறான், அதை
வெறுப்புடன் தாளில் ஒப்புக்கொள்கிறான்,
பழக்கத்தின் போர்வையில் மூடிமறைக்கிறான்,
துவேஷமுள்ளாடையால் அதைக்
கிழித்துத் துண்டாடுகிறான்.

இல்லை:
தாழ்வாரங்களிலும், காற்றிலும், கடலிலும், நிலத்திலும்
சிவந்த பாப்பி மலர்கள்போலப் பாதுகாப்பில்லாமலிருக்கும்
அவனது இரத்தநாளங்களைக்
காப்பாற்றுவது யார்?
உயிர்களை விற்பவனின் இருண்ட சரக்குகளிலிருந்து
சீற்றம் இப்போது
இரத்தமாகப் பீறிடும்போது,
பிளம் மரத்தின் உச்சியில் காத்திருக்கும் சிறுகிளையில்
பனித்துளி
நூற்றாண்டுகளாக மறையாதிருக்கும்
தனது நிலப்படத்தைப் பதித்துப் போகிறது.
இதயமே,
இலையுதிர்காலத்தின் பள்ளங்களுக்கிடையில்
நசுங்கிச் சிறிதான முகமே!


எத்தனைமுறை
குளிர்கால நகரத்தெருக்களில்
அல்லது பேருந்தில்
அந்தியில் ஒரு படகில்
அல்லது நிழல்களிலும் மணியோசையிலும் மூழ்கிய
விழாக்கால இரவுகளின் இறுக்கமான தனிமையில் தயங்கி
மனித மகிழ்வின் உறைவிடத்தில்
தங்கியிருக்க விரும்பினேன்.
முன்பு,
ஒரு கல்லிலிருந்தோ
அல்லது
ஒரு முத்தத்தின் மின்வெட்டிலிருந்தோ
நான் தொட்டுணர்ந்த
நித்தியமானதும் அளந்தறிய முடியாததுமான
உண்மையின் இழையைத் தேடினேன்.

(அது
சிறிய திரண்ட முலைகளின் மஞ்சள் வரலாறுபோல
முடிவற்று வளர்ந்து பெருகும் கோதுமையில்
என்றும் மென்மையாகத் தொடரும் காலக்கணக்கு.
என்றும் ஒரேபோல தந்த நிறமாகமாற உமியைக் களைகிறது.
என்றும் ஒளி ஊடுருவும் நீரில் தென்படும் வீட்டின் நிழல்.
தனித்திருக்கும் பனிப்படலம்முதல்
இந்த இரத்த அலைகள்வரை என்றும் தனித்திருக்கும் மணியோசை.)

திருஷ்டிப்பொம்மையின் உடைகள்போன்ற முகக்குவியல்களையும்
அல்லது
உள்ளீடற்ற பொன்வளையங்கள்போன்ற அவிழ்த்தெறியப்பட்ட முகமூடிகளையும்
திகைப்படைந்து நின்ற இனங்களின்
பட்டமரங்களை உலுக்கும் இலையுதிர்காலத்தின் புதல்வியரையும்தான்
என்னால் வசப்படுத்த முடிந்தது.

எனது கைகளுக்கு இளைப்பாற இடமில்லை.
தடுக்கப்பட்ட நீர்போலப் பாயவோ
நிலக்கரிபோல வெம்மையாகவோ
ஸ்படிகம்போல குளிர்ச்சியாகவோ
எனது திறந்த கைகளுக்கு எதிர்வினையில்லை.

என்னவாக இருந்தான் மனிதன்?
அவனது உரத்த உரையாடலின் அடுக்குகளில் எங்கே
கடைகளுக்கும் சங்கொலிக்குமிடையில்
அவனது உலோக அசைவுகளில் எதில்
அழிவற்று வாழ்கிறது உயிரின் இயல்பு?

- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)


நன்றி : சுகுமாரன்

Read more...

பாப்லோ நெரூதா கவிதைகள் - சுகுமாரன்

>> Wednesday, May 26, 2010

மாச்சு பிச்சுவின் சிகரங்கள் - ஒரு முன் குறிப்பு
- சுகுமாரன்

நெரூதாவின் 'கான்டோ ஜெனரல்' (Canto General - பொதுக் காண்டம்) தொகுப்பில் இடம்பெறும் நீள் கவிதையான 'மாச்சு பிச்சுவின் சிகரங்களின் மையம் - வரலாறு. புதையுண்டுபோன ஒரு நகரத்தின் இறந்த காலத்தை நிகழ்கால அனுபவமாக மீட்டுருவாக்கம் செய்கிறார் நெரூதா.

இன்கா இனத்தவரின் அழிந்துபோன நகரம் மாச்சு பிச்சு. ஆண்டீஸ் மலைத்தொடரில் உருபம்பா ஆற்றங்கரையில் மாச்சு பிச்சு, ஹ¤வாய்னா பிச்சு ஆகிய இரட்டை மலைகளுக்கிடையில் உருவான புராதன நகரம். கலைத் தேர்ச்சியுடனும் நீர்நிலைகளும் வழிபாட்டுத் தலங்களும் சதுக்கங்களும் வீடுகளும் வாயில்களும் படித்துறைகளுமாக நுட்பமான தொழில் திறனுடன் நகரம் நிர்மாணிக்கப்பட்டதாக வரலாறு சான்றளிக்கிறது.
  
காலத்தின் மறதிக்குள் புதையுண்டிருந்த இந்த மலைநகரமும் கோட்டை கொத்தளங்களும் 1910 ஆம் ஆண்டு அகழ்வாராய்ச்சியில் மீட்டெடுக்கப்பட்டது. காற்றின் உராய்வுக்கும் நீரின் அரிப்புக்கும் ஈடு கொடுத்து நின்ற நகரம், தொன்மைச் சின்னமாக இன்று பராமரிக்கப்பட்டு
வருகிறது. 1943 இல் நெரூதா இந்த நகரத்தைச் சென்று பார்வையிட்டார். மனித வாழ்வின் ஊற்றைத் தேடிய புனிதப் பயணம் என்று தனது அனுபவத்தைக் குறிப்பிடவும் செய்தார்.

ஸ்பானிய ஆக்கிரமிப்பால் இன்கா நாகரிகமும் மாச்சு பிச்சு நகரமும் அழிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. எனினும் அங்கு வாழ்ந்த மக்களினத்தின் மறைவு ஒரு புதிர். இந்தப் புதிரின் உண்மையை அறிய ஒரு கவிதைமனம் மேற்கொள்ளும் சாகசமான பன்முகப் பயணம் -'மாச்சு பிச்சுவின் சிகரங்கள்'.

மாச்சு பிச்சுவின் சிகரங்கள்
---------------------------------
ஒன்று

காற்றிலிருந்து காற்றுக்கு இழுபடும் வெற்றுவலைபோல
குளிர்காலத்தின் உச்சத்தில்
நாணயத்தாள்களாக இலைகள் உதிரும்போது
கட்டற்ற நேசம் கையுறையிலிருந்து கழன்று
நிலவின் நீண்ட விரல்களாக நம்மைத் தொடுகையில்
வசந்தத்துக்கும் கோதுமைக்கதிர்களுக்கும் இடையில்
இசைவான சூழ்நிலையில்
தெருக்களில் இழுபட்டு வந்தேன் நான்.

(ஒத்திசைவு இல்லாத பொருட்களில் உயிர்ப்பு ஒளிரும் நாட்கள்;
மௌனத்தின் அமிலத்தில் கரையும் இரும்பு
கடைசித் துகள்களாகக் கலையும் இரவுகள்
காதல் பிரதேசத்தில் குலைந்த மகரந்தகேசரங்கள்)

வயலின்களுக்கு இடையில் எனக்காக காத்திருந்த எவரோ,
இறுகிய கந்தக இலைகளுக்கடியில் தன்னைச் சுழற்றித் துளைத்துப்
புதைத்துக்கொண்ட கோபுரம்போன்ற ஓர் உலகைக் கண்டடைந்தார்.
வால் நட்சத்திரங்களின் உறையில் பாய்ச்சிய
விசையுள்ள வாளைப்போல
பூமியின் பொன் நாளங்களுக்குள்
அதன் மர்ம உறுப்புகளுக்குள்
எனது மென்மையான கையை நுழைத்தேன்.

ஆழம் காணமுடியாத அலைகளுக்குள் தலைசாய்த்து
கந்தகத்தின் உறக்கத்தில் ஒரு துளியாகச் சுருங்கினேன்.
ஒரு குருடனைப்போல
நமது களைத்துப்போன மனித வசந்தத்தின்
மல்லிகை மணத்தை மறுபடியும் கண்டடைந்தேன்.

-  பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)

நன்றி :  சுகுமாரன்

Read more...

இயற்கையும் மனிதனும்

>> Monday, May 24, 2010

இயற்கையும் மனிதனும்

-  பாவண்ணன்

கனவுகள் - தமிழாக்கப் பாடல்கள்
மொழியாக்கம் - தங்கப்பா
வானகப் பதிப்பகம்

எல்லா மொழிகளிலும் உள்ள பெரிய படைப்பாளிகள் அனைவரும் தம் படைப்பு முயற்சிகளோடு கூடவே தமக்குப் பிடித்த படைப்புகளைப் பிறமொழிகளிலிருந்து மொழிபெயர்ப்பதில் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். தமிழில் பாரதியார் முதல் புதுமைப்பித்தன் வரை இத்தகு முயற்சிகளில் ஈடுபட்டவர்களே. நாற்பதாண்டுகளுக்கும் மேலாகத் தம் வாழ்வனுபவத்தைக் கலையுணர்வோடு மரபுக்கவிதை வடிவில் முன்வைத்துவரும் ம.இலெ.தங்கப்பா தம் இளமைக்காலம் முதல் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்த கவிதைகள் 'கனவுகள் ' என்கிற பெயரில் வெளியாகியுள்ளன.


இத்தொகுப்பில் 60 கவிதைகள் உள்ளன. வோர்ட்ஸ்வொர்த், தாமஸ் ஹார்டி, தாமஸ் க்ரே, ஷெல்லி, டென்னிசன், ஆலிவர் கோல்ட்ஸ்மித், கீட்ஸ் ஆகிய ஆங்கிலக் கவிஞர்களின் கவிதைகளும் சில ஆப்பிரிக்கக் கவிதைகளும் ரசூல் கம்சுதேவின் ரஷ்யமொழிக் கவிதைகளும் தாகூரின் கவிதைகளும் இவற்றில் அடங்கும். சுவையும் பொருளும் குன்றாத வகையில் மிக அழகிய தமிழல் இக்கவிதைகளைத் தமிழாக்கியுள்ளார் தங்கப்பா. இவை அனைத்தையும் இனிய மரபுக்கவிதை வடிவில் செய்திருப்பது மேலுமொரு சிறப்பாகும். மொழிபெயர்ப்பு என்னும் குறிப்பு இல்லாவிடில் இக்கவிதைகள் அனைத்தும் தமிழிலேயே புனையப்பட்டவை என்று சொல்வதில் யாருக்கும் தடையிருக்காது. தங்கப்பாவின் சொல் தேர்வும் பொருத்தமாக அவற்றைக் கையாளும் விதமும் கவிதைகளுக்கு அழகைச் சேர்க்கின்றன. எளிமையும் தெளிவும் அழகும் இவரது சொந்தக் கவிதைகளுக்கு எப்போதும் பெரும் வலிமையாக இருப்பவை. மொழிபெயர்ப்புகளுக்கும் இவையே வலிமையாகத் திகழ்கின்றன.


மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கவிஞர்கள் அனைவரும் நவீன யுகத்துக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவர்கள். அழகின் வழியே இயற்கையையும் இயற்கையின் வழியே இறைவனையும் தரிசிக்கும் ஆசையும் ஆற்றலும் மிகுந்தவர்கள் அவர்கள். அழகான ஒரு மலரைப் பாடினாலும் தும்பியைப் பாடினாலும் இயற்கையின் தரிசனத்தை மானுடர்க்கு நுட்பமாகச் சுட்டிக்காட்டும் புள்ளிகளாக அவற்றை மாற்றிவிடும் வலிமை மிகுந்தவர்கள் . அக்கவிதைகளின் மூல வடிவத்தில் படிந்திருந்த அதே பரவசத்தோடும் துடிப்போடும் எழுச்சியோடும் தமிழிலும் முன்வைத்திருக்கும் தங்கப்பாவின் சொல்லாட்சித் திறமை பாராட்டுக்குரிய ஒன்றாகும்.


இம்மொழிபெயர்ப்புத் தொகுதியில் இடம்பெற்றுள்ள தாமஸ் ஹார்டியின் 'வாலாட்டிக்குருவியும் குழந்தையும் ' என்ற கவிதை மிக முக்கியமான ஒன்றாகும். மொத்தத் தொகுப்பின் தொனிப்பொருளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கவிதையாக இதைக்கொள்வதில் தவறில்லை. மிக எளிய சித்தரிப்புத்தன்மையை உடைய இக்கவிதை முடியும் போது உருவாகும் மனஅலைகள் எளிதில் அடங்குவதில்லை. கவிதையில் ஒரு வாய்க்கால் இடம்பெறுகிறது. ஒருபுறம் ஒரு குழந்தை வேடிக்கை பார்க்கிறது. மறுபுறம் வாலாட்டிக்குருவியொன்று உட்கார்ந்திருக்கிறது. முதலில் அந்த வாய்க்கால் வழியாக ஒரு முரட்டுக்காளை செல்கிறது. காட்சியில் எந்தவிதமான சலனமும் இல்லை. இரண்டாவதாக அவ்வாய்க்கால் வழியாக ஒரு குதிரை செல்கிறது. அப்போதும் காட்சியில் எவ்விதமான சலனமும் இல்லை. மூன்றாவதாக நாயொன்று வருகிறது. அப்போதும் அக்காட்சியில் எவ்விதமான மாற்றமும் நேர்வதில்லை. இறுதியாக ஒரு மனிதன் வருகிறான். சட்டென காட்சியில் சலனமெழுகிறது. பயத்துடனும் பதற்றத்துடனும் குருவி பறந்து விடுகிறது. இவ்வளவுதான் விவரணை. இவ்விவரங்கள் வழியாக உருவாகும் மனச்சித்திரத்தில் கவிதை உன்னதம் எய்துகிறது. விலங்குகள் இயற்கையோடும் காற்றோடும் சேற்றோடும் பயிர்பச்சைகளோடும் மாறாத உறவுகொண்டு நடமாடுகின்றன. ஒன்றின் வரவை மற்றொன்று அறிந்தாலும் அச்சம் கொள்வதில்லை. அவற்றிடையே இயங்கும் சமன்பாட்டில் எந்தவிதமான குழப்பமும் இல்லை. குழந்தையைக்கூட அவை மனத்தளவில் எவ்விதமான வேறுபாடும் பாராட்டாமல் ஏற்றுக்கொள்கின்றன. ஆனால் அவை ஏற்கத்தயங்கி அஞ்சி ஒதுங்குவது மனிதர்களை மட்டுமே.


இயற்கையின் படைப்பில் மனிதர்களும் விலங்குகளும் குழந்தைகளே. ஆனால் ஒரு குழந்தையைக் கண்டு மற்றொரு குழந்தை ஏன் அஞ்சவேண்டும் ? அதுதான் நம் துயரங்கள் அனைத்துக்குமான காரணப்புள்ளி. மனிதன் தன்னைச்சுற்றியுள்ள எல்லாவற்றைக் காட்டிலும் மேலானவனாகவும் வலிமையானவனாகவும் தன்னை நினைத்துக் கொள்கிறான். அன்போடும் அனுசரணையோடும் அணுகவேண்டிய இயற்கையை வென்றெடுக்க வேண்டிய ஒரு கோட்டையாக எண்ணி விடுகிறான். வெற்றிக்கொடி நாட்டி எல்லாவற்றையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டுவர எண்ணுகிறான். அரவணைத்தல் அல்ல, அடிமைப்படுத்துவதே அவன் இயல்பாகிறது. முதலில் இயற்கையை நுகர்கிறவனாக இருக்கிற மனிதன், ஆசையின் காரணமாக அதை அடிமைப்படுத்துகிறான். பின்னர் பேராசையின் காரணமாக அதை நாசப்படுத்திச் சிதைக்கிறான். உச்சியில் தன் வெற்றிக்கொடி பட்டொளிவிசிப் பறக்கவேண்டும் என்கிற வெறியில் காலடி மணணையும் சிதைத்துப் பள்ளமாக்குகிறான். தன் தாயின் இதயத்தையே அறுத்து எடுக்கிற வெறிகொண்ட பிள்ளையைப்போல இயற்கையைக் குலைக்கவும் தயங்காதவனாகிறான். தாயின் இதயகீதத்தைக் கேட்க அவனுக்குக் காதுகளில்லை. அவள் கண்களில் ஒளிரும் தரிசனக்காட்சியைக் காணக் கண்களுமில்லை. மாறாக, எல்லாமே வெற்றிகொள்ளத்தக்க கோட்டைகளாகவே தென்படுகின்றன. தன் மீட்சிக்கான பாதை மிக அருகிலேயே இருந்தும் அதைக் காணவியலாத மனிதன் தன் அழிவுப்பாதையைத் தானே தேடிக்கொள்கிறான் என்பதே இயற்கையுகக் கவிஞர்கள் அனைவருடைய ஒட்டுமொத்தச் செய்தி. தங்கப்பாவின் சொந்தக் கவிதைகளின் உள்ளடக்கத்தைப்போலவே அவர் தேர்ந்தெடுத்திருக்கும் மொழிபெயர்ப்புக் கவிதைகளும் அமைந்திருப்பதைச் சிறப்பான ஒற்றுமையாகச் சொல்லவேண்டும்.


இத்தொகுப்பின் முக்கியமான இன்னொரு பகுதி தாகூரின் கதையொன்றை அடிப்படையாகக்கொண்டு தங்கப்பா யாத்துள்ள 'வெற்றிஓசை ' என்கிற கவிதைநாடகப் பிரதியாகும். அங்கதச் சுவை மிகுந்த இந்த நாடகம் அரசு எந்திரத்தின் அபத்தமான திட்டமுறைகளைக் கிண்டல்களுடன் முன்வைக்கிறது. கிளிக்கும் பாடக் கற்றுக்கொடுக்கும் முயற்சி படிக்கக் கற்பிக்கும் முயற்சியாக மாறுவதும் பிறகு நுால்களைக் கரைத்துக் குடிப்பாட்டும் முயற்சியாக மாறுவதும் நகைச்சுவை ததும்ப எழுதப்பட்டுள்ளன. இறுதியில் தொண்டை அடைத்த கிளியைக் காட்டி அறிவின் ஆழ்ந்த அமைதிநிலை என்று அதிகாரிகள் உரைத்து முழக்கமிடும் போது கிண்டல் உச்சம் பெறுகிறது. நுண்ணுணர்வில்லாத ஆட்சியில் நடைபெறும் அபத்தக் கோலங்களை உணரும் விதத்தில் ஒவ்வொரு வரியும் அமைந்திருக்கிறது.

நன்றி :  திண்ணை

Read more...

வெள்ளிநிலவு

>> Monday, May 17, 2010

வெள்ளிநிலவு

சத்தங்கள் இல்லை அவசரம் இல்லை
வெள்ளிக் காலெடுத்து நிலவும்
இரவைக் கடக்கிறாள்

அங்கும் இங்கும் அவள் பார்வை பட்டதும்
அடவெள்ளி மரங்களில் விளைந்தன வெள்ளிக்கனிகள்

கூரைகள் மேல் அவள் தொட்டுப் பார்த்து
ஓலைக் கீற்றிலும் வெள்ளிகள்
வேய்ந்து போனாள்

காவலின் களைப்பில் உறங்கும் நாய்க்கும்
அசைவற்ற உறக்கத்தில் நீளும்
வெள்ளிக் கால்கள்

இருளில் ஒளித்த கூட்டில் தெரியும்
வெள்ளி இறகுகள் சுமந்துறங்கும்
வெள்ளை புறாக்கள்

வயலில் திரியும் குட்டி எலிக்கும்
இருட்டில் மிளிரும்
வெள்ளிக் காலும் கண்ணும்

நிலவில் குளித்த
வெள்ளி ஓடையில் மின்னும்
வெள்ளி நாணல்கலுள் வெள்ளி மீன்களும்

தமிழில் :  பூங்குழலி

Silver by Walter de la Mare

Slowly, silently, now the moon
Walks the night in her silver shoon;
This way, and that, she peers, and sees
Silver fruit upon silver trees;
One by one the casements catch
Her beams beneath the silvery thatch;
Couched in his kennel, like a log,
With paws of silver sleeps the dog;
From their shadowy cote the white breasts peep
Of doves in silver feathered sleep
A harvest mouse goes scampering by,
With silver claws, and silver eye;
And moveless fish in the water gleam,
By silver reeds in a silver stream

Read more...

மலையாளக் கவிதைகள் - எஸ். ஜோஸப்

>> Wednesday, May 12, 2010

மலையாளக் கவிதைகள் -  எஸ். ஜோஸப்


தமிழில் : சுகுமாரன



அக்காவின் பைபிள்

அக்காவின் பைபிளில் இருப்பவை:

தையல் விட்ட ரேஷன் கார்டு

கடனுதவி பெறுவதற்கான விண்ணப்பங்கள்

கந்துவட்டிக்காரர்களின் அட்டை

திருவிழா, பண்டிகை நோட்டீசுகள்

அண்ணன் குழந்தையின் போட்டோ

குட்டித் தொப்பிக்கான தையல் குறிப்பெழுதிய காகிதம்

ஒரு நூறு ரூபாய் நோட்டு

எஸ்எஸ்எல்சி புத்தகம்.



அக்காவின் பைபிளில் இல்லாதவை:

முன்னுரை

பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு

நிலப்படங்கள்

சிவப்பு மேலட்டை.


மீன்காரன் / பக். 20/ 2003

****

காதலிக்கும்போது...


ஒருத்தியை மட்டுமாகக் காதலிக்கக் கூடாது

அவளுடைய மணம்,

நிறம், சிரிப்பையெல்லாம்

வெறுமே நினைத்துக்கொண்டு நடக்கக் கூடாது

எப்போதும்



அவளுடைய பவுடர்

சுவர்க்கண்ணாடியில் அசையும் மரக்கிளை

அவள் பத்திரப்படுத்திய பழைய பாட்டுகள்

கதைப் புத்தகங்கள்

அவுன்சு குப்பியில் நிரப்பிய மணல்



வெளியில் ரோஜா

பலரகமானவை.



ஜன்னலினூடே இருளும் அந்தியை

வெறுமே அவள் பார்த்தபடியிருப்பதையெல்லாம்

மனதில் நினைத்துக்கொண்டு நடக்கக் கூடாது

எப்போதும்



அவள் எப்போதும் இறந்துபோகலாம்

அவள் இல்லாத ஒரு பெரும் உலகம்

இங்கிருக்கும் எப்போதும் இதுபோலவே.



அவளில்லாமலும் வழிகள் நீளும்

திறந்திருக்கிறது ஒப்பனைப் பொருள்

சுவர்க்கண்ணாடியில் மரமசைகிறது

வழக்கம்போல இதோ

பறவைகள் வந்து

செடிகளுக்கு மேலே

சலசலத்து நிற்கின்றன



அப்படியே இருக்கையில் பொழுதும் இருளும்



ஒருத்தியை மட்டுமாகக் காதலிக்கக் கூடாது

அவளை நினைத்து அவன் தலை குனிந்து

நசிந்தவனைப் போல நடக்க நேரும்



இருட்டுக்குள் அவன் ஜன்னலாவானே

அவளை எப்போதும் கனவில் காண்பானே

கனவினூடவன்

அவளையும் தேடி

மரணத்தை நோக்கி

நடந்து போவானே.


மீன்காரன் / பக். 47 / 2003

**

படகைப் பற்றி ஒரு கவிதை



புத்தகத்தில் ஒரு கவிதை எழுதிவைத்தேன்

எடைக்கு விற்ற காகிதங்களில் அதுவும் இருந்தது.



கடைக்காரன் மிளகாயமோ வெங்காயமோ பொட்டலம் கட்டியிருப்பானோ?

குடிசையிலே குழந்தைக்கு அது கிடைத்திருக்குமோ?

அவனால் எழுத்துக் கூட்டிப் படிக்க முடிந்திருக்காதே?

அவன் தங்கைக்குப் படகு செய்து கொடுத்திருப்பானோ?

தோணியில் அவர்கள் எங்கே போக?



ஏனென்றால்

ஏராளமான கவிதைகள் அங்கும் இங்கும்

எழுதிப் போட்டிருக்கிறேன்

கடையிலிருந்து மிளகாயும் வெங்காயமும்

பொட்டலம் கட்டிய காகிதங்கள் வாசித்திருக்கிறேன்

எழுத்துக் கூட்டிப் படிப்பது சில வேளைகளில் கடினந்தான்

தங்கைகளுக்குப் படகு செய்து கொடுத்திருக்கிறேன்

தோணியில் அவர்கள் ஏறியதுமில்லை.



புத்தகத்தில் எழுதிவைத்த கவிதை

எதைப் பற்றியதாக இருந்தது?

எதைப் பற்றியதாக இருக்க வேண்டும்?

படகைப் பற்றி.

சரி, அது படகைப் பற்றியதுதான்.


மீன்காரன் / பக். 37 / 2003

**



மீன்காரன்

கொஞ்சமே நீரோட்டமுள்ள வாய்க்காலில்

மீன்காரன் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தான்.



தாழைகள் தென்படவில்லை

வாய்க்கால் நேராகப் போய் முட்டித் திரும்பும் இடம்

ஒரு ஒர்க்ஷாப்பாக இருந்தது.

அதன் கற்சுவரும் தெரியவில்லை.



வாய்க்காலுக்கு இணையாக

தெற்கும் வடக்குமாக

எம்.சி.ரோடு பாய்ந்து போனது.



நாங்கள், குழந்தைகள்தாம் பார்த்தோம்

அரையடிகூட உயரமில்லாத நீரில்

கவிழ்ந்து கிடக்கும் மீன்காரனின் உடல்

பாத்திரம், தராசும் படிக்கல்லும்.



இவனை வலிப்பு சுழற்றிப்போட்டிருக்கிறது

தலையில் தண்ணீர் விளையாடுகிறது

தண்ணீரில் தாழை மடல்

குத்திக் கிழித்து விளையாடுகிறது.



வாய்க்காலின் ஓய்ந்துபோன மூலையில்

நீர்ப்பூச்சி சுழல்கிறது.



இப்போது அதே இடத்தையடையும்போது

தெரிபவை:



ஒரு கோழிக்கடை

சிமெண்ட் பூசிய ஒர்க்ஷாப்

மண்கொட்டி உயர்த்திய வயல்



மீன்காரனைப் பார்க்கவே முடிவதில்லை.


மீன்காரன் / பக். 54 / 2003


**

இந்த வரிகளுக்கிடையில்


இந்த வரிகளுக்கிடையில்

சில சமயம் நானும் சிலசமயம் நீங்களும்

இல்லாமற் போகலாம்.

நமக்கிடையில் அறிமுகமில்லை.

பட்டணத்திலோ கடற்கரையிலோ பார்த்திருக்கலாம்

பாலத்தின் கைப்பிடிச் சுவரைப் பற்றிக்கொண்டு

கீழே ஒருவன் தூண்டில்போடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தது

நீங்களாக இருக்கலாம்

அல்லது

இறைச்சியோ மருந்தோ வாங்கப்

போகும்போது பார்த்திருக்கலாம்

நாமெல்லாம் எத்தனை சாதாரணர்கள், இல்லையா?

அசாதாரணமான காரியங்கள் செய்ய முயல்கிறோம்

நீங்கள் ஒரு வண்டி ஓட்டுகிறீர்கள்

அல்லது லோன் வாங்கி ஒரு கடை தொடங்குகிறீர்கள்

பரீட்சையில் தேறுகிறீர்கள் பாட்டுப் பாடுகிறீர்கள்

நான் கவிதைகள் எழுத முயல்கிறேன்

நமது செயல்கள் நம்மைத்தாண்டி நீண்டு நிற்கலாம்

எழுத்துக்களுக்கிடையில் நான் இல்லாமற் போகலாம்

வாசிப்புக்கிடையில் நீங்களும்.


ஐடென்டிட்டி கார்ட் / பக். 21 / 2005

**


ஐடென்டிட்டி கார்டு


படித்துக்கொண்டிருந்த காலத்தில்

ஒரு பெண் சிரித்துக்கொண்டு வந்தாள்



அவளுடைய சோற்றுக்கும் சூரைமீன் கறிக்கும் மேலாக

எங்களுடைய கைகள் குழைந்தன



நாங்கள் ஒரே பெஞ்சில்

இந்து கிறித்துவக் குடும்பமானோம்



நான் நெரூதாவின் கவிதைகள் வாசித்து நடந்தேன்

அதற்கிடையில் என் ஐடென்டிட்டி கார்டு காணாமற் போனது



நான் பார்த்தேன். கார்டைக் கொடுத்தவள் சொன்னாள்:

சிவப்புப் பேனாவால் குறித்திருக்கிறதே

ஸ்டைபெண்ட் வாங்கிய கணக்கு.



இந்தக் காலத்தில் ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் உட்கார்ந்து

தம்மை மறப்பதைப் பார்ப்பதேயில்லை

சற்றுக் கழிந்து அவர்கள் பிரிந்து போவார்கள்

இனி அவர்கள் சேர்ந்தாலும் வியப்பில்லை

அவர்களுடைய ஐடென்டிட்டி கார்டுகளில் செந்நிறக் குறிகள் இருக்காது.



ஐடென்டிட்டி கார்டு / பக். 28 / 2005

***


நிலவை நேசித்த பெண்


வீடுவாசல் பெருக்கி, செருப்பணிந்த

கோழிக்குத் தீனிவைத்து, சிரிக்கின்ற

பூனைக்குப் பால்வார்த்து, காலையுணவுண்டு

நேசம் பரிமாறி நிலவை நேசித்து

இரவுக்குப் பயந்து நீ உறங்குகிறாயோ?



சோஃபீ, பிஞ்சுமனமே, உனக்கானவை என்

கவிதைக் குருவிகள் எல்லாமும்.



நிலவை நேசித்த குழந்தாய், தனிமையால்

உருவாக்கப்பட்டாயோ நீ, பள்ளியின்

வாசலில் கூட்டாளிகள் ஓடியாட

பேசாமல் பார்த்து நிற்கிறாய் சோஃபியா, நீ,

பேசாதிருப்பதேன் பசித்ததோ?



கூட்டாளிகளில்லாத பெண்ணே, ஒருமுறை நீ

பாட்டுப் பாடக் கேட்டேன், உன் நீள்முடி

காற்றிலவிழ்த்து வட்டமிட்டு நீ

விழுந்து சிரிப்பதைப் பார்த்தேன், வழிகளில்

தனக்குத்தானே மெதுவாகப் பேசி

மெல்ல நடந்து நீ போவதைப் பார்த்தேன்.



வீட்டருகில் ஒருமுறை காணாமற்போக

வாய்க்கால் கரைவரை தேடித் திரும்பிய

நீ வளர்க்கும் நாய், குரைத்தபடி

கேட்டதென்ன? பதிலுக்கு என்ன சொன்னாய் நீ?

ஆந்தைகள் முனகும் இரவில்

பெட்டைப் பூனையும் நீயும் உறங்குகிறீர்கள்

பிரார்த்தனைபோல குறுக்கும் நெடுக்குமாய்.



குட்டிச் சிறுத்தைகள்போல வெய்யில்

துள்ளி விளையாடிக் களிக்கும் புலரியில்

வீட்டின் கதவை விரியத் திறந்து நீ

சிந்தும் புன்னகை வாழ்வின் நீர்.



தாயிழந்த குழந்தாய், உனக்கு நான்

என்ன கொடுக்க, பசிக்கும், நேசத்துக்கும்?

என் கை வெறுமை, இதயம் விஷமயம்

இல்லை, சேற்றில் மலர்கிறது பவளமல்லி.



என் கவிதை காட்டு நாவல் பழம்

என் கவிதை தாயின் உதடுகள்

என் கவிதையின் ஞானஸ்நானத்தால்

உன்னைச் சகோதரியாக்குகிறேன் நான்.



துக்கங்களையெல்லாம் கவிதைகளாக்க

துக்கமே, நீ என்னுடனே இருக்க வேண்டும்.


கறுத்த கல் / பக். 16 / 2000

***
கறுத்த கல்


கறுத்த கல்லின் மேலமர்ந்து

சிறுவயதில் விளையாடியதை நினைக்கிறேன்.

எனக்கு முன்பே பிறந்த கல்லிது

கறுத்தவன் என் கடுமையுள்ள கல்

வெய்யிலிலும் கொடும் மழையிலும்

ஒரு வருத்தமுமில்லாமல்

உணர்ச்சியில்லாமல் கிடந்திருந்த கல்

அதன் யானைமுதுகிலமர்ந்து

சடசடவென்று மண்ணப்பம் சுட்டு விளையாடியதை நினைக்கிறேன்.



அரண்ட காற்றின் சன்னலில்

அம்மா வருவதைப் பார்த்து

கறுத்த கல்லின் தாழ்வாரத்தில்

தனித்திருந்தேன்

மகர வயல்கள் கடந்து பணியிடங்களிலிருந்தோ

தலையில் ரேஷனும் பயிறுமாக

தூரத்து நாற்சந்தியிலிருந்தோ

அம்மா வருகிறாள்.



பசிக்கு மேலாகச் சாரல் மழை.



இருள் மூடிய விளைநிலங்கள்

இருட்டில் பாடும் மலைப் பறவை

இருட்டினூடே வரும் அண்டை வீட்டான்

ஓரினச் சேர்க்கையாளனுக்கு நிறமில்லை.



இவையெல்லாம் பால்யத்தின் குப்பைக்கூடை

இவையெல்லாம் மொத்தமாய் எறிந்து தொலைவில் போகிறேன்

எனினும்

ஆய்வகத்தைக் குடைந்து போயின பிரவாகங்கள்.



கறுத்த பாதைகள்

கறுத்த வேசிகள்

கறுத்த குழந்தைகள்

கறுத்த புத்தகத்தைத் திறக்கையில் காலாட்படைகள்

கறுப்புக்கு என் கறுப்புக்கு

நான் திரும்பி வருகிறேன்.

கருங்கல் உடைத்து எனக்கு

உணவு தந்த தகப்பனை

மரணத்திலிருந்து அழுகையால்

நாங்கள் மீட்ட அன்னையை

சிரட்டை எரித்து

உடைகளைத் தேய்த்துத் தந்த சகோதரிகளை

மறந்தாலும் உன்னை மறவேன் நான்.



போதாது எனக்கு, கருங்கல்லே,

உன் உள்ளம் குடைந்து போகணும் நான்

தூர வனங்களில்

இறந்த நண்பர்கள் கிடக்கும் கல்லறையின்

மூடி திறந்து பார்க்கணும் நான்

தெருவிலலையும் நாடோடிக்கு இசைந்தவன் ஆகணும்

அவளுடன் சேர்ந்து மழையில் நனையணும்

வானில் ஒரு புலியை

விழிகளால் தோண்டி வரையணும்.



கடும் குளிரில் கறுத்த வெறுமை

அதற்குள்ளிருக்கிறது கல்

கதவு மூடாத மௌனத்துக்குள்ளே

மறு வாக்கு இல்லாமல் உறங்குகிறதோ?

கருங்கல் முன்பு ஆழத்திலிருந்து எழுந்து வந்ததோ?

முடிவின்மைக்குள்ளே உருண்டு போகுமோ?


கறுத்த கல் / பக்.36 / 2000


எஸ். ஜோசப் என்ற செபாஸ்டியன் ஜோசப் 1965ஆம் ஆண்டு கோட்டயம் மாவட்டம் பட்டித்தானத்தில் பிறந்தார். பதினாறாவது வயது முதல் கவிதை எழுதி வருகிறார். இப்போது எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரியில் மலையாள விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். கோட்டயத்தில் வசிக்கிறார்.


தொண்ணூறுகளில் வாசக கவனத்துக்கு வந்த புதிய தலைமுறையின் நம்பிக்கைக்குரிய கவிஞர்களில் ஜோசப்பும் ஒருவர். இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. அவை - கறுத்த கல் (2000), மீன்காரன் (2003), ஐடண்டிட்டி கார்டு (2005), உப்பன்டெ கூவல் வரைக்குன்னு (2009). இதில் ‘கறுத்த கல்’ தொகுதி கேரள சாகித்திய அக்காதெமியின் கனகஸ்ரீ விருதும் ‘உப்பன்டெ கூவல் வரைக்குன்னு’ தொகுதி திருவனந்தபுரம் புத்தக் கண்காட்சி விருதும் பெற்றவை. ‘புலரியியிலெ மூந்நு தெங்ஙுகள்’ என்ற நாவலும் எழுதியிருக்கிறார். இங்கே இடம் பெறும் கவிதைகள் ஜோசப்பின் மேற்குறிப்பிட்ட தொகுதிகளிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. 2008 மே மாதம் ஜெயமோகன் உதகை நாராயண குருகுலத்தில் நடத்திய தமிழ் மலையாளக் கவிஞர்கள் சந்திப்பில் விவாதிப்பதற்காக இவற்றுள் பெரும்பான்மையும் தமிழாக்கம் செய்யப்பட்டன.
 
நன்றி : சுகுமாரன் & காலச்சுவடு
 

Read more...

ஜாவேத் அக்தர் கவிதைகள்

>> Tuesday, May 4, 2010

எனது முற்றமும், எனது மரமும்


விரிந்து பரந்திருந்தது
முற்றம்

அதில்தான் அத்தனை
விளையாட்டுகளும்

முற்றத்தின் முன்னேயிருந்தது
அந்த மரம்
என்னைவிட உயரமாயிருந்தது

நான் பெரியவனானதும்
அதன் உச்சியை தொடுவேன்
என்ற நம்பிக்கையிருந்தது

வருடங்கள் கழிந்து
வீடு திரும்பினேன்

முற்றம் சின்னதாயிருந்தது
மரம் முன்னைவிட உயரமாயிருந்தது



கஜல் - 1 -

நம் விருப்பத்தின் சோதனை தானிது
அடி எடுத்தோம் இலக்கு பாதையானது

பிரிவின் அச்சில் சர-சரவென சுழன்றவன்
மானுக்கு அதன் கஸ்தூரியே தண்டனையானது

ஆசையாயிருந்தது கை கூடியது-ஆனால்
தொலைந்து போனதே அது என்னவாயிருந்தது

மழலையில் பொம்மைகளை உடைத்திருக்கிறேன்
துயர முடிவுகளுக்கு அது ஆரம்பமாயிருந்தது

காதல் செத்துவிட்டதால் கவலைதான் எனக்கும்
அதுவே நல்ல காலத்திற்கான மாற்றமாயிருந்தது

தொடுவதெல்லாம் பொன்னாக வேண்டுமென்றிருந்தேன்
உன்னைப் பார்த்தப்பின்னதை சாபமாக உணர்ந்தேன்

கனவெனும் நோய்க்கினி விடுதலை தான்
உலகமொரு கசப்பான மருந்தாய் இருந்தது.



கஜல் - 2 -


மழலைப் பருவத்தில் நாளும் தனித்திருந்தேன்
மனதின் முடுக்கில் மட்டுமே விளையாடித் திரிந்தேன்

ஒருபுறம் இமைகளின் பாதுகாப்பு போராட்டம்
மறுபுறம் வழியும் கண்ணீரின் நீரோட்டம்

வாழ்க்கை சந்தை மாறுபட்ட மருட்கையானது
அங்காடியில் ஆசைகள் அடுக்கப்பட்ட அலங்காரமானது

வலிகளுக்கு நிவாரணம் கொடுப்பது தற்கொலையாகுமா
மரணத்தின் பேரிடரும் பெருங்குழப்பமும் நீங்குமா

வலியையும் பிணியையும் உணர்ந்திருக்கிறோம்
மனமும் இதயமும் சாகிறது இன்று பசியால்



குழப்பம்

கோடி முகங்கள்
அதன் பின்னே
கோடி முகங்கள்
இவை பாதையா
முட்களின் கூடா
பூமி மூடப் பட்டிருக்கிறது
உடல்களால்
எள் வைக்கவே இடமில்லை
எங்கே வைப்பது காலை
இதைப் பார்க்கும் போது
நிற்குமிடத்திலேயே
வேரூன்றி விடலாமென
எண்ணுகிறேன்
என்ன செய்ய முடியும்?
எனக்குத் தெரியும்
இங்கேயே நின்று விட்டாலும்
பின்னாலிருக்கும் பெருங்கூட்டம்
பாய்ந்து வந்து, அதன் பாதங்களால்
என்னை பசையாக்கிவிடுமென்று
அதனால், நடக்கிறேன்
என் பாதத்தின் அடியிலிருக்கும்
பரப்பில் மட்டும்

யாரோ ஒருவரின் மார்பில்
யாரோ ஒருவரின் புஜத்தில்
யாரோ ஒருவரின் முகத்தில்
நடந்தால் பிறரை
மிதிக்கிறேன்
நின்றால்
மிதிக்கப் படுகிறேன்

ஏ மனமே,
பெருமைப்பட்டுக் கொள்வாயே
உன் முடிவுகளுக்காய்
அப்படியானால் சொல்:
என்ன முடிவெடுத்துள்ளாய் இன்று


- ஜாவேத் அக்தர்


தமிழில் : மதியழகன் சுப்பையா
தொகுப்பு : அம்பறாத்தூணி
 நன்றி : வார்ப்பு

Read more...

அழைப்பு – ஓ. வி. விஜயன்

>> Wednesday, April 28, 2010

அவனது நினைவுகள் அந்த அழைப்பில் இருந்தே தொடங்கின, “போதவிரதா!”
அவன் பதில் கூறினான், “இதோ நான் வந்துவிட்டேன்!”

“போதவிரதா!”

தாய் அழைத்தார், தந்தை அழைத்தார், ஆசிரியர் அழைத்தார், தோழர்கள் அழைத்தனர். அப்போதெல்லாம் அவன் பதில் கூறினான், “இதோ வந்துவிட்டேன்!”

மனைவி அழைத்தாள், மகன் அழைத்தான், மகள் அழைத்தாள், அவருடைய மக்கள் அழைத்தனர். அந்த அழைப்புக்களனைத்தும் போதவிரதனின் அறிவை மேலும் பலப்படுத்தின – நான்!

ஒவ்வோர் இரவும் உறக்கத்திற்கு முன்பான கடைசி சிந்தையாக இது இருந்தது. இதுவே நான்.

இரவினைப் பகலும் பகலினை இரவும் பின்தொடர்ந்தன. நாட்கள் செல்லச்செல்ல இந்த சிந்தை போதவிரதனுக்கு பழக்கமான ஒன்றாக மாறியது.

இறுதியில் ஓர் இரவு மற்ற இரவுகளினின்று வேறுபட்டதென போதவிரதன் அறிந்தான். வெளியே புதரில் இருந்து அசாதாரணமான ஓர் குரல் அழைத்தது.

“போதவிரதா!”

போதவிரதன் பதிலேதும் கொடுக்கவில்லை.

இவ்விரவு விடியாதா என காத்திருந்தான். இரவு விடியவில்லை. புதரிடையே இருந்து அந்தக் குரல் மீண்டும் அழைத்தது.

சிலந்தி வலையினை போன்ற பட்டு நூல் போதவிரதனை சுற்றியது. அறுத்தெரிய முயன்று தோற்றான். புதரில் இருந்த அந்த அறிமுகமற்ற மனிதன் நூலினைப் பற்றி இழுக்க, தடுக்க வழியின்றி போதவிரதனும் புதரினுள் நுழைந்தான்.

நடுக்கத்துடம் போதவிரதன் அவனிடம் கூறினான் “இது நான் இல்லை”

அம்மனிதன் கனிவோடு சிரித்தான்.

“அதை புரியவைக்கவே உன்னை இங்கு அழைத்தேன்.”

**********

தமிழில் : சித்தார்த்

Read more...

சஷ்மலிற்கான வினோத இரவு – சத்யஜித்ரே

>> Monday, April 26, 2010

சாய்வு நாற்காலியில் அமர்ந்து நிம்மதிப் பெருமூச்செறிந்தார் சஷ்மல்.

மிகவும் உகந்த இடமான வடக்கு பீஹாரில் இருக்கும் காட்டு பங்களாவை தேர்வுசெய்திருந்தார். வேறு எந்த இடமும் அத்தனை நிம்மதியாய் அமைதியாய் பாதுகாப்பாய் இருந்திருக்க முடியாது. அறையும் கூட வெகு திருப்திகரமாய் இருந்தது. ராஜா காலத்து பழைய திடமான வீட்டுச்சாமான்களால் ஈர்க்கும்விதத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பெரிய கட்டிலில் தூய்மையான, துளியும் கறைகளில்லாத படுக்கை விரிப்புகள் சீராக விரிக்கப்பட்டிருந்தன. குளியலறையும் வசதியாகவும் சுத்தமாகவும் இருந்தது. திறந்திருந்த ஜன்னல் வழியாக குளிர் காற்று மென்மையாய் வீசியது, அதனுடன் சில்வண்டின் ரீங்காரமும் சேர்ந்துக்கொண்டது. மின்சாரம் தடைபட்டிருந்தும் கூட அஃதொரு பெரிய குறையாகத் தெரியவில்லை. கல்கத்தாவில் அடிக்கடி தடைபடும் மின்சாரம் மண்ணெண்ணெய் விளக்குகளின் அருகில் அமர்ந்து வாசிக்க அவருக்கு கற்றுத்தந்திருந்தது. அவர் அப்படி வாசிப்பதற்கு மிகவும் பழகிவிட்டிருந்தார். பங்களாவில் இருக்கும் விளக்குகள் சாதாரண கண்ணாடிகளை கொண்டிருந்தாலோ என்னமோ அவருக்கு தன் வீட்டிலுள்ள விளக்குகளை விட அது அதிக வெளிச்சம் தருவதைப்போலிருந்தது. மிகவும் பிடித்தமான துப்பறியும் நாவல்களை தன்னுடன் நிறைய கொண்டுவந்திருந்தார்.

அப்பங்களாவில் ஒரே ஒரு பணியாளைத் தவிர வேறு யாருமில்லை. யாரையும் சந்திக்கவோ பேசவோ அவசியமிருக்காதென்பதால் இதுவும் அவருக்கு மிகவும் உகந்ததாகவே இருந்தது. பத்து நாட்களுக்கு முன்பு கல்கத்தாவிலுள்ள ஒரு சுற்றுலாத்துறை அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்திருந்தார். நான்கு நாட்களுக்கு முன்பு அவர்களிடமிருந்து வந்த ஓர் கடிதம் பதிவை உறுதி செய்தது. அங்கிருந்து வேறெங்கேனும் மாற்றலாக வேண்டுமெனில் குறைந்தது மூன்று நாட்களேனும் அங்கு தங்கியிருக்கவேண்டும். தாராளமாக ஒருமாதம் தங்குமளவிற்கு தேவையான பணம் அவரிடமிருந்தது. கல்கத்தாவிலிருந்து 550 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் இவ்விடத்திற்கு தன் சொந்த காரில் தானே காரோட்டிக்கொண்டு வந்து சேர்ந்தார்.

சப்பாத்தி, தால் மற்றும் சில காய்கறிகளுடன் கோழிக்கறியும் கொண்ட இரவு உணவை சொன்னபடியே ஒன்பதரை மணிக்கு பணியாள் பரிமாறினார். உணவறை ராஜா காலத்து அம்சங்கள் நிறைந்ததாகவும் உணவு மேஜை, நாற்காலிகள், வேலைப்பாடுகள் மிகுந்த அலமாரிகள் அனைத்தும் ஆங்கிலேயர் காலத்தவையாகவும் தோன்றின.

இங்கு கொசுக்கள் உண்டா? என்று சஷ்மல் சாப்பிடும் போது வினவினார். கல்கத்தாவில் அவர் வசிக்குமிடத்தில் கொசுக்கள் அறவே கிடையாது. கடந்த பத்து ஆண்டுகளில் கொசுவலையை பயன்படுத்தும் அவசியமும் ஏற்படவில்லை. இங்கும் கொசுவலை பயன்படுத்தவேண்டிய அவசியம் இருக்காதெனில் அவருடைய ஆனந்தம் முழுமையடையும்.

குளிர் காலத்தில் கொசுக்கள் உண்டெனவும் இது ஏப்ரல் மாதமாதலால் கொசுத்தொல்லை இருக்காதென்றார் பணியாள். மேலும் தனக்கு கொசு வலை வைத்திருக்கும் இடம் தெரியுமென்றும் அவசியம் ஏற்பட்டால் எடுத்து இடுவதாகவும் கூறினார். காட்டுக்கு நடுவில் தாங்கள் இருப்பதால் கதவுகள் திறந்திருந்தால் நரியோ அல்லது வேறு விலங்குகளோ உள்நுழையக்கூடும் அபாயம் உள்ளதால் இரவில் கதைவுகளை சாத்திவிட்டு உறங்குவது நல்லதென்றார். உறங்கப்போவதற்கு முன்பு கதவுகளை மூடிவிடுவதென ஏற்கெனவே தீர்மானித்திருந்த சஷ்மல் சரியென்றார்.

சாப்பிட்டு முடித்த பின்னர் உணவறைக்கு வெளியிலிருந்த வராந்தாவிற்கு கையிலொரு டார்சுடன் வந்தார். காட்டை நோக்கி டார்ச் வெளிச்சத்தை அடித்தபோது அது ஷால் மரத்தின் அடிப்பாகத்தில் விழுந்தது. சுற்றிமுற்றி எதாவது விலங்கு தென்படுகின்றதாவென பார்த்தும் ஒன்றும் காணக்கிடைக்கவில்லை. ஓயாமல் ரீங்கரித்துக்கொண்டிருக்கும் சில்வண்டை தவிர முழு காடும் அமைதியில் மூழ்கி இருந்தது.

உணவறைக்கு திரும்பியவுடன் இப்பங்களாவில் பேய்கள் இல்லையென நம்புகிறேன் என்றார் சஷ்மல் சாதாரணமாக. பணியாள் மேஜையை சுத்தம் செய்துக்கொண்டிருந்தார். கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக அங்கு பணிபுரிவதாகவும் ஏராளமான நபர்கள் அக்காலக்கட்டங்களில் வந்து தங்கியிருந்ததாகவும் யாரும் இதுவரை பேயை பார்த்ததில்லையெனவும் சமயலறைக்கும் செல்லும் வழியில் நின்று புன்னகைத்தபடியே கூறினார். சஷ்மலின் மனதை இப்பதில் லேசாக்கியது.

உணவறையிலிருந்து இரண்டாவது அறை அவருடையது. சாப்பிட வரும்முன்னர் அறைகதவை மூடிவிட்டு வரவேண்டுமென அவருக்கு தோன்றவில்லை. திரும்பி வந்தப்பின்னர் திறந்து வைத்துவிட்டு வந்திருக்கக்கூடாதென தோன்றியது. மெலிதான வெள்ளை உடலில் ப்ரௌன் புள்ளிகளை கொண்ட ஒரு தெருநாய் எப்படியோ உள் நுழைந்துவிட்டிருந்தது.

ஏ வெளியே போ…ஷூ ஹூ வெளியே போ என கத்தினார். அறையின் ஓர் மூலையில் நகராமல் அவ்விரவை அங்கு கழிப்பதற்கான முடிவோடு அது பார்த்துக்கொண்டிருந்தது.

வெளியே போன்றேன்

இம்முறை நாய் தன் கோரப்பற்களை காட்டியது. சஷ்மல் பின்நகர்ந்தார். சிறுவனாக இருந்தபோது அவரின் பக்கத்து வீட்டுக்காரரின் மகன் வெறிநாயால் கடிக்கப்பட்டான். நாய்க்கடி நோயிலிருந்து அவனைக் காப்பாற்ற முடியவில்லை. சஷ்மலுக்கு அச்சிறுவன் துயறுற்றுத் தவித்த ஒவ்வொரு பயங்கர சம்பவமும் ஞாபகத்திலிருந்தது. உறுமும் நாயை எதிர்க்கொள்ள அவருக்குத் தைரியமில்லை. பக்கவாட்டில் அதை பார்த்தபடியே மீண்டும் வராண்டாவிற்கு வந்தார்.

பணியாளை அழைத்தார்.

‘சொல்லுங்க ஐயா’

‘ஒருநிமிடம் இங்கு வரியா?’

கையை துண்டால் துடைத்தபடியே வந்தார்.

‘என்னறையில் ஒரு நாய் உள்ளது, அதை வெளியில் துரத்துகிறாயா?’

‘நாயா? பணியாள் ஆச்சரியத்தில் வினவினார் .’

“ஆமாம். ஏன், இப்பகுதியில் ஒரு நாய் கூட இல்லையென்கிறாயா? இதில் இவ்வளவு ஆச்சரியப்பட என்ன இருக்கின்றது. என்னுடன் வா காண்பிக்கின்றேன்.”

பணியாள் சஷ்மலை சந்தேகமாக பார்த்துக்கொண்டே அறையில் நுழைந்தார். ‘எங்க ஐயா நாய்?’ சஷ்மல் அவரை தொடர்ந்து உள்நுழைந்தார். நாய் இருப்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை. பணியாளை அழைக்கச்சென்ற சில நிமிடங்களில் அது சென்றுவிட்டிருக்கின்றது. இருந்தும் உறுதிசெய்துக்கொள்ள பணியாள் கட்டிலிற்கடியில் பார்த்தார், குளியலறையையும் சோதித்தார்.

‘இல்லை ஐயா, நாய் எதுவும் இங்கில்லை’

‘இப்போது இல்லாமலிருக்கலாம், ஆனால் சில நிமிடங்களுக்கு முன்பு இருந்தது.’

சஷ்மலால் கொஞ்சம் அசட்டுத்தனமாக உணராமல் இருக்கமுடியவில்லை. பணியாளை அனுப்பிவிட்டு மீண்டும் சாய்வு நாற்காலியில் அமர்ந்தார். சிகரெட்டை புகைத்து முடித்த பின்னர் ஜன்னல் வழியாக மிச்சமிருந்த துண்டை எரிந்துவிட்டு கைகளை உயர்த்தி சோம்பல் முறிக்கும் போது நாய் சென்றிருக்கவில்லை என்பதை கவனித்தார். அல்லது சென்றிருந்தாலும் மீண்டும் வந்து அதே மூலையில் நின்றுக்கொண்டிருக்கின்றது.

அவருக்கு எரிச்சலூட்டியது. அதை அங்கு தங்க அனுமதித்தால் இரவில் அவர் பாட்டாவில் வாங்கிய புதிய செருப்பை மென்று தூள்தூளாக்கிவிடும். உபயோகிக்கப்படாத செருப்பிற்கு நாய் கொண்டிருக்கும் மோகத்தை பற்றி நன்கு அறிவார் சஷ்மல். தரையிலிருந்த செருப்பை எடுத்து மேஜையில் வைத்தார்.

இப்போது அறையில் அவருடன் இன்னொரு உயிரினமும் சேர்ந்தாயிற்று. பரவாயில்லை தற்சமயம் இருந்துவிட்டு போகட்டும். அவர் படுக்கச்செல்லுமுன் மீண்டும் அதை வெளியில் துரத்த முயற்சிக்கலாம்.

மேஜையில் வைத்திருந்த இந்தியவிமானப்பையிலிருந்து நாவலை எடுத்து மடக்கிய பக்கத்திலிருந்து மீண்டும் வாசிக்க புத்தகத்தை திறந்தபோது நாய் இருந்த எதிர் மூலையில் தற்செயலாக சஷ்மலின் பார்வை சென்றது. அவருக்கு தெரியாமல் மற்றொரு உயிரினமும் அறையில் நுழைந்துவிட்டிருக்கின்றது.

புலியை போன்றே உடல் முழுவதும் கோடுகள் கொண்ட பூனை அது. ஒரு பந்தைப்போன்று சுருண்டு மங்கிய மஞ்சள் கண்களுடன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தது. இதே போன்றதொரு பூனையை வேறு எங்கு பார்த்திருக்கின்றார்?

ஆம்!. பக்கத்து வீட்டிலிருந்த குதூஸ் வளர்த்த ஏழு பூனைகளில் ஒன்று இதைபோன்றே இருக்கும். அவ்விரவில் எல்லாம் வேகமாக நினைவிற்கு வந்தது சஷ்மலிற்கு.

ஆறு மாதத்திற்கு முன்பு தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்த பூனையின் பெரும் ஓலத்தால் எழுப்பப்பட்ட அன்று ஏற்கெனவே அவரின் தொழில் துணைவர் அதீருடன் வாக்குவாதம் முற்றியதால் பயங்கர கடுப்பில் இருந்தார். இவரின் செயல்களை அம்பலப்படுத்த காவல்துறையிடன் செல்லப்போவதாக அதீர் பயமுறுத்தவே அது பெரும் சண்டையாகிவிட்டிருந்தது. அதனால் சஷ்மலுக்கு அன்றிரவு நிம்மதியாக உறங்கமுடியவில்லை. பூனையும் ஓலமிட்டுக்கொண்டடிருந்தது. அரைமணிநேர சகிப்பிற்கு பின்பு தன் பொறுமையை இழந்ததால் காகித கனத்தை மேஜையிலிருந்து எடுத்து சத்தம் வந்த திசை நோக்கி ஜன்னல் வழியாக வீசி எறிந்தார். சத்தம் அடங்கியது.

அடுத்தநாள் காலை குதூஸின் வீட்டிலிருந்த அனைவரும் கூச்சலிட்டனர். யாரோ அவர்களிடமிருந்த உடலில் வரிகள் கொண்ட ஆண் பூனை ஒன்றை கொடூரமான முறையில் கொலை செய்து விட்டார்கள் என்று சொல்லப்பட்டது. பூனையின் கொலையா? சஷ்மலுக்கு வேடிக்கையாக இருந்தது. இதை கொலை என்று சொன்னால் பிறகு தினம்தினம்தான் மக்கள் கொலை செய்து கொண்டுள்ளனர் அதை பற்றிய பிரக்ஞையே இல்லாமல். பலவருடங்களுக்கு முன் நடந்த வேறொரு சம்பவத்தின் நினைவும் வந்தது. அப்போது அவர் கல்லூரியின் விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்தார். ஒரு நாள் அவரின் அறைச்சுவரில் எறும்புகள் நீண்ட வரிசையில் ஊர்ந்துக்கொண்டிருந்தன. சஷ்மல் செய்திதாளை எடுத்து ஒரு முனையில் பற்றவைத்து அதை அப்படியே எறும்புகளின் வரிசையின் மேல் இழுத்தார். பார்த்துக்கொண்டிருக்கும்போதே அச்சிறு எறும்புகள் கருகி தரையில் விழுமுன்னரே மடிந்தன. அதை கொலை என்று சொல்லிவிடமுடியுமா?

சஷ்மல் கைகடிகாரத்தை பார்த்தார். பத்துமணியாவதற்கு பத்து நிமிடங்கள் இருந்தன. கடந்த ஒருமாதமாகவே தொடர்ந்து ஏற்பட்ட தலைவலி இப்போது இல்லாமல் போயிருந்தது. எப்போதுமே உடல் உஷ்ணமாக உணர்ந்ததால் ஒருநாளிற்கு மூன்று முறை குளித்துக்கொண்டிருந்தார். அவ்வுணர்வும் இப்போது காணமால் போயிருந்தது.

புத்தகத்தை பிரித்து வாசிக்க ஆரம்பித்தார். இரண்டு வரி வாசிப்பதற்குள்ளாகவே அவரின் பார்வை மீண்டும் பூனையின் மேல் விழுந்தது. எதனால் அவரை அது அத்தனை தீவிரமாக முறைத்துக்கொண்டிருக்கின்றது?

அவருடைய இஷ்டம்போல் அவ்விரவை கழிக்க இயலாதென புரிந்தது. ஒரே நல்ல விஷயம் அவருடன் தங்கியிருக்கும் மற்ற இரண்டு ஜீவன்களும் மனிதர்கள் அல்ல. அவை சத்தம் போடாமல் ஒழுங்காக நடந்துக்கொண்டால் அமைதியான உறக்கம் வாய்க்காமல் போவதற்கான சாத்தியங்களில்லை. உறக்கம் அவருக்கு மிக முக்கியமான ஒன்று. பல காரணங்களால் கடந்த சில நாட்களாக அவர் சரியாக உறங்கியிருக்கவில்லை. நவீன முறைகளான தூக்கமாத்திரைகளை விழுங்கும் பழக்கத்தில் சஷ்மலுக்கு நாட்டமில்லை.

விளக்கை எடுத்து கட்டிலிற்கு அருகிலிருந்த சிறிய மேஜையில் வைத்தார். சட்டையை கழட்டி மாட்டிவிட்டு கொஞ்சம் தண்ணீர் அருந்திவிட்டு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டே படுக்கச்சென்றார். கட்டிலின் காலுக்கருகில் அமர்ந்திருந்த நாய் இப்போது எழுந்து நின்றது. அதன் கண்கள் சஷ்மலை பார்த்தபடியே இருந்தன.

நாயின் கொலையா?

சஷ்மலின் இதயம் ஒரு துடிப்பை தவரியது. ஆமாம் ஒருவகையில் கொலைதான். அச்சம்பவம் அவருக்கு நன்றாக நினைவிலிருந்தது. 1973ஆம் ஆண்டு காரை வாங்கி சில நாட்களே ஆகியிருந்தன. எப்போதுமே அவர் ஒரு முரட்டுத்தனமான வேகத்துடன் காரோட்டுபவர். கல்கத்தாவில் மக்கள் அதிகமாக இருக்கும் நெரிசலான சாலைகளில் வேகமாக கார் ஓட்ட முடியாததால் புறநகர் பகுதிக்கு சென்றுவிடுவார். வேக மானியின் முள் தானாக உயரும். மணிக்கு எழுபது மைல் வேகத்திலேனும் செல்லாவிட்டால் அவருக்கு திருப்தியாக இருக்காது. கோலகாட் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அன்றும் அதே வேகத்தில் சென்றுக்கொண்டிருந்தபோது ஒரு நாய் அவர் காரின் இடையில் சிக்கியது. அது வெண்ணிற உடலில் பரௌன் புள்ளிகளை கொண்ட சாதாரண தெருநாய்.

என்ன நிகழ்ந்ததென்று அறிந்தும் அதை சிறிதும் பொருட்படுத்தாமல் சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து அச்சம்பவம் நினைவில் உறுத்திக்கொண்டிருந்தது. அதனால் என்ன பரவாயில்லையென்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டார். அது ஒரு தெரு நாய் தானே. எலும்புகளை எண்ணிவிடுமளவுக்கு ஒல்லியாக இருந்தது. அது உயிரோடு இருந்துதான் என்ன பயன்? யாருக்கு என்ன நன்மை செய்திருக்கபோகிறது? தன்னிலிருந்த சிறு குற்ற உணர்வையும் அழித்துவிட அப்போது நினைத்துக்கொண்டதையெல்லாம் இப்போது ஞாபகப்படுத்திக்கொண்டார். அப்போது அவரால் அதிலிருந்து தப்பிக்க முடிந்தது. ஆனால் இன்றிரவு எல்லாம் தீடீரென்று நினைவிற்கு வந்து அவரின் மன அமைதியை முழுவதுமாக குலைத்தது.

இதுவரை எத்தனை விலங்குகளை அவர் வாழ்நாளில் கொன்றிருக்கிறார்? அவை அனைத்தும் இங்கு வந்து விடப்போகின்றதா? அப்படியானால் ஒரு வினோத பெயர் தெரியாத கருப்புப் பறவையை சிறுவயதில் தன் முதல் விளையாட்டுத்துப்பாக்கியால் கொன்றது? அப்பறவையின் பெயர் கூட அவருக்கு தெரியாது. பிறகு அவரின் மாமா வீட்டிற்கு சென்றபோது ஒரு பெரிய கல்லை பயன்படுத்தவில்லையா? ஆமாம் அதுவும் அங்கு ஆஜராகியிருக்கின்றது.

ஜன்னல் பக்கமாக தன் பார்வையை செலுத்திய போது சஷ்மல் பாம்பை கண்டார். மென்மையான வளைந்து நெளியும் உடல் கொண்ட எட்டடி நீளமுள்ள நாகப் பாம்பு ஜன்னல் வழியாக உள் நுழைந்து சுவரை ஒட்டிப் போடப்பட்டிருந்த மேஜையின் மேல் ஏறிக்கொண்டிருந்தது. சாதாரணமாக பாம்புகள் ஏப்ரல் மாதத்தில் தென்படாதெனினும் இது வந்திருக்கின்றது. மூன்றில் இரண்டு பகுதி மேஜையில் சுருண்டும் ஒரு பகுதி தலை தூக்கி படமெடுத்தது. விளக்கின் வெளிச்சத்தில் அதன் நிலையான கொடுங்கண்கள் பிரகாசித்தன.

ஜார்கிரமிலிருந்த அவரின் மாமா வீட்டில் சஷ்மல் இதுபோன்றதொரு பாம்பின் தலையில் கல்லைப் போட்டு கொன்றிருக்கிறார். யாருக்கும் எவ்வித கெடுதலும் செய்யாத பாம்பு அக்குடும்பத்தினர் அனைவரும் நன்கு அறிந்த மூத்த உறுப்பினராக இருந்தது.

தன் நாக்கு உலர்ந்துவிட்டிருந்ததை உணர்ந்தார் சஷ்மல். பணியாளை அழைக்கக்கூட நா எழவில்லை.

வெளியில் சில்வண்டுகளின் ரீங்காரம் அடங்கிவிட்டிருந்தது. எங்கும் அச்சுறுத்தும் அமைதி சூழ்ந்திருந்தது. கைகடிகாரத்தின் முற்கள் அமைதியாக நகர்ந்துக்கொண்டிருந்தன அல்லது அதன் ஓசையையும் அவர் கேட்டிருக்கக் கூடும். ஒருநிமிடம் கனவு காண்கிறோமோவென நினைத்தார். அவருக்கு சமீபகாலமாக இப்படி தோன்றுகின்றது. படுக்கையில் படுத்துக் கொண்டிருந்த போதிலும் வேறு எங்கோ அறியாத மொழியில் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் அந்நிய மக்களுக்கு மத்தியில் இருப்பதை போல் உணரந்தார். இதுவரை அந்த வினோத எண்ணங்கள் சில நொடிகளுக்கு மேல் நீடித்ததில்லை. ஒருவர் உறங்கச்செல்வதற்கு முன் இதுபோன்ற நிகழ்வுகளையெல்லாம் கற்பனை செய்துக்கொண்டால் அதற்கான சாத்தியங்கள் உண்டு.

ஆனால் இன்று காண்பது கனவில்லை. நிச்சயமாக அவர் முழித்துக்கொண்டிருப்பதை முன்நிமிடத்தில்தான் தன்னை கிள்ளிப்பார்த்து உறுதிபடுத்திக்கொண்டார். என்னவெல்லாம் இப்போது நடக்கின்றதோ அவையெல்லாம் நிஜமாகவும் காரணத்தோடும் தான் நடக்கின்றன. இவையெல்லாம் அவருக்கு மட்டுமே உரித்தானது.

அசையாமல் ஒரு மணி நேரம் படுக்கையில் அப்படியே படுத்திருந்தார். சில கொசுக்கள் வீட்டினுள் பிரவேசித்தன. அவரை கடிக்காமல் கட்டிலைச் சுற்றி மொய்த்துக்கொண்டிருந்தன. எத்தனைக் கொசுகளைத் தன் வாழ்நாளில் கொன்றிருப்பார். எவ்வளவென்று யாரால் சொல்ல முடியும்?

ஒரு மணி நேரத்திற்கு பிறகு எந்த விலங்கும் எவ்வித அபாயத்தையும் விளைவிக்கும் அறிகுறி இல்லாததால் சஷ்மல் இளைப்பாற ஆரம்பித்தார். இப்போது அவர் தூங்க முயற்சிக்க கூடும்.

விளக்கின் திரியை சிறிதாக்க கையை நீட்டிய போது சத்தம் கேட்டது. நுழைவாயிலிலிருந்து வராந்தாவிற்கு வரும் படிகள்வரையுள்ள பாதையில் கூழாங்கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. அந்த வழியாக யாரோ நடந்து வருகிறார்கள். இம்முறை நான்கு கால்கள் கொண்ட விலங்கில்லை. மாறாக இரண்டு கால்களைக் கொண்டது.

இப்போது சஷ்மல் தனக்கு பயங்கரமாக வேர்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தார். இதயம் வேகமாக துடிப்பதையும் கேட்க முடிந்தது.

நாயும் பூனையும் அவரையே பார்த்துக்கொண்டிருந்தன. கொசுவும் மொய்ப்பதை நிறுத்தவில்லை. விழிபுலனுக்கு புலப்படாத செவிபுலனுக்கும் எட்டாத பாம்பாட்டியின் மகுடிக்கு மயங்கி ஆடுவதைப்போன்று பாம்பும் படமெடுத்து ஆடிக்கொண்டிருந்தது.

காலடி ஓசை வராண்டாவை அடைந்தது. அருகில் வந்துவிட்டனர். சிறிய கருப்புப்பறவை ஜன்னலின் வழியாக உள்நுழைந்து மேஜையில் அமர்ந்தது. அன்று துப்பாக்கியால் சுட்ட போது, அமர்ந்திருந்த சுவரின் அருகிலிருந்த பூங்காவின் தரையில் விழுந்து இறந்த அதே பறவைதான் இது.

அறைக்கு வெளியில் காலடி ஓசை வந்தடங்கியது. அது யாரென்று சஷ்மலுக்கு தெரியும். அதீர். அவரின் தொழில் துணைவர் அதீர் சக்கரவர்த்தி. ஒருகாலத்தில் நண்பர்களாக இருந்தவர்கள் சமீபகாலமாக ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதைக்கூட நிறுத்திக்கொண்டனர். நேர்மையற்ற வழிகளில் சஷ்மல் தொழில் நடத்தும் முறைகள் அதீருக்கு பிடிக்கவில்லை. காவல் துறைக்கு புகார் கொடுத்துவிடப்போவதாக மிரட்டினார். தொழிலில் நேர்மையாக நடந்துக்கொள்வது பைத்தியக்காரத்தனம் என்றார் சஷ்மல். அதீரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதீரின் இத்தகைய அறங்களை பற்றி முன்பே அறிந்திருந்தால் சஷ்மல் அவரை துணையாகவே சேர்த்துக்கொண்டிருக்க மாட்டார். அதீர் அவருக்குப் பரம எதிரியாக மாறிவிட்டதை உணர்ந்துக்கொள்ள அதிக நாள் எடுக்கவில்லை. எதிரி என்றால் அழிக்கப்படவேண்டியவன் தானே. சுருக்கமாக அதைதான் சஷ்மலும் செய்தார்.

முந்தினநாள் இரவு அதீரின் வீட்டில் இருவரும் நேரெதிராக அமர்ந்திருந்தனர். தன் தொழில் துணைவரை கொலை செய்யும் நோக்கத்துடன் சஷ்மல் பாக்கெட்டில் துப்பாக்கியுடன் வந்திருந்தார். சில அடிகள் தள்ளி அதீர் அமர்ந்திருந்தார், மீண்டுமொருமுறை விவாதித்தனர். அதீரின் குரல் உயர்ந்தபோது சஷ்மல் தன் துப்பாக்கியால் அவரை சுட்டார். எப்போதோ தனக்கு நெருக்கமான நண்பனாக இருந்த அதீரின் முகம் நினைவிலாடியபோது அவரால் புன்னகைக்காமல் இருக்கமுடியவில்லை. அவர் கையில் துப்பாக்கியிருக்குமென அதீர் கொஞ்சம் கூட எதிர்ப்பாக்கவேயில்லை.

சம்பவம் நடந்த பத்து நிமிடத்திற்குள்ளாகவே சஷ்மல் காரை கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டார். அந்த இரவை பர்த்யான் ரயில் நிலைய காத்திருப்பு அறையில் கழித்துவிட்டு இன்று காலையில் ஏற்கெனவே பதிவு செய்து வைத்திருந்த இக்காட்டுபங்களாவை நோக்கி தன் பயணத்தை தொடர்ந்தார்.

யாரோ கதவை தட்டினார்கள். ஒருமுறை, இரண்டுமுறை, மூன்றாவது முறையாக.

சஷ்மலால் கதவை வெறித்துப்பார்க்க மட்டுமே முடிந்தது. அவரின் முழு உடலும் நடுங்கத் தொடங்கியது. மூச்சு முட்டியது. ‘கதவை திற, அதீர் வந்திருக்கிறேன், கதவை திற’.

முந்தின நாள் துப்பாக்கியால் சுடப்பட்ட அதே அதீர். அங்கிருந்து கிளம்பும் போது அதீர் இறந்துவிட்டிருப்பாரென்று சஷ்மலுக்கு அவ்வளவு உறுதியாக தெறிந்திருக்கவில்லை. ஆனால் இப்போது சந்தேகமே இல்லை. அந்த நாய், பூனை, அந்த பாம்பு, பறவை இப்போது அதீர் கதவிற்கு வெளியில் நிற்கிறார். மற்ற எல்லா ஜீவன்களும் இறப்பிற்கு பின்னர் அங்கு ஆஜராகியிருக்கின்றன என்றால் அதீரும் இறந்துவிட்டதாக எண்ணுவது நியாயமானதே.

திரும்பவும் யாரோ கதைவை தட்டினார்கள். தட்டிக்கொண்டே இருந்தார்கள்.

சஷ்மலின் பார்வை மங்கியது. அப்படியிருந்தும் நாய் அவரை நோக்கி வருவதை கண்டார். பூனையின் கண்கள் அவரின் கண்களுக்கு வெகு அருகில் இருந்தன. பாம்பும் அவரை நோக்கி வரும் எண்ணத்தில் மேஜையிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தது. பறவையும் பறந்து வந்து அவரின் கட்டிலில் அமர்ந்தது. அவருடைய வெள்ளை பனியனை மறைத்தபடி நெஞ்சம் முழுவதும் எண்ணில் அடங்கா எறும்புகள் ஊர்ந்துக்கொண்டிருந்தன.

இறுதியில் இரண்டு ஏட்டுகள் கதவை உடைக்க வேண்டியதாயிற்று.

அதீர் கல்கத்தாவிலிருந்து காவல் அதிகாரியை அழைத்து வந்திருந்தார். சஷ்மலின் காகிதங்களுக்கு இடையில் சுற்றுலாத் துறையிலிருந்து வந்த கடிதம் காணக்கிடைத்தது. அதிலிருந்துதான் காட்டு பங்களாவில் அவர் பதிவு செய்துவைத்திருப்பதை அறிந்தார்.

சஷ்மல் படுக்கையில் இறந்திருப்பதை அறிந்தவுடன் இன்ஸ்பெக்டர் சமந்த் அதீரின் பக்கம் திரும்பி ‘உங்கள் தொழில் துணைவர் பலகீனமான இதயம் கொண்டவரா?’ என்று கேட்டார்.

‘அவரின் இதயம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் சமீபகாலமாக அவரின் நடத்தை எனக்கு விசித்திரமாக தோன்றியது. எந்த ஒரு சாதாரண மனிதனும் கூட்டுப் பணத்தை கையாடியிருக்க மாட்டான், என்னை ஏமாற்றவும் முயற்சித்திருக்க மாட்டான் அவர் செய்ததை போல. அவரின் கையில் துப்பாக்கியைப் பார்த்தபோது நிஜமாகவே கிறுக்கனாகிவிட்டார் என்பது உறுதியானது. உண்மையைச் சொல்லவேண்டுமானால் அவர் துப்பாக்கியை கையில் எடுத்த போது என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை. அவர் சுட்டுவிட்டு ஓடிய பிறகு அந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவர பத்து நிமிடத்திற்கு மேல் ஆனதெனக்கு. அதற்கு பிறகு தான் அந்தக் கிறுக்கனை காவல் துறையிடம் ஒப்படைக்கவேண்டும் என்று முடிவெடுத்தேன். இன்று நான் உயிரோடிருக்கிறேனென்றால் அது சந்தர்ப்பவசமாகத்தான்.’

ஆனால் எப்படி இத்தனை அருகிலிருந்தும் அவர் குறி தவறினார் என்று சமந்த் கறுவினார்.

அதீர் புன்னகைத்தார், ‘சாகவேண்டிய நேரம் வராமல் எவராலும் எப்படி சாக முடியும்? தோட்டா என்னை துளைக்காமல் இருக்கையின் ஓர் மூலையில் பாய்ந்தது. எத்தனை பேரால் இருட்டில் சரியாக குறிபார்க்க முடியும்? அவர் துப்பாக்கியை எடுத்த நிமிடத்தில் எங்கள் குடியிருப்புப் பகுதியில் மின்தடை ஏற்பட்டு எல்லா விளக்குகளும் அணைந்தன!

(1979)

பெங்காலியில் : சத்யஜித்ரே

ஆங்கிலம் வழி தமிழில் : நதியலை

From the book : The Best of Satyajit Ray, First Edition : 2001

Read more...

பதில் சொல்லுங்கள் அம்மா

>> Wednesday, April 21, 2010

பதில் சொல்லுங்கள் அம்மா ....


பார்ட்டிக்கு போனேன் அம்மா
நீ சொன்னதை மறக்கவே இல்லை
குடிக்க வேண்டாம் என்று சொன்னாய் என்று
சோடா மட்டும் குடித்துக் கொண்டேன்


நீ சொன்னதை போலவே அம்மா ,
பெருமையாய் இருந்தது எனக்கு.
குடித்து விட்டு ஓட்டவில்லை அம்மா
செய் ,என்று பிறர் தூண்டிய போதும்


சரியாகவே செய்தேன் தெரியும் அம்மா,
நீ சரியாகவே சொல்வாய்,அதுவும் தெரியும்
பார்ட்டி முடிந்து கொண்டிருக்கிறது அம்மா
எல்லாரும் கலைந்து கொண்டிருக்கிறார்கள்


காருக்குள் ஏறும் போது தெரியும் அம்மா,
பத்திரமாய் வந்து சேர்வேன் என்று
பொறுப்பும் அன்பும் சொல்லி
எனை நீ வளர்த்தது அப்படி அம்மாஓட்டத் துவங்கிவிட்டேன் அம்மா,
ஆனால் சாலைக்குள் வந்த போது
அடுத்த கார் என்னை கவனிக்காமல்
இடியாக மோதிக் கடந்தது


ரோட்டோரம் கிடந்த போது அம்மா
போலீஸார் பேசிக் கொண்டார் ,
"அடுத்த காரிலிருந்தவன் குடித்திருக்கிறான் "
ஆனால் விலை கொடுக்கப்போவது நான்தான்


நான் இறந்து கொண்டிருக்கிறேன் அம்மா
நீசீக்கிரம்வரமாட்டாயாஎன்றுஏங்கிக்கொண்டே..
இது எப்படி எனக்கு நடக்கலாம் அம்மா ?
வெறும்பலூனைப்போல்வெடித்ததுஎன்வாழ்க்கை


எனை சுற்றிலும் எங்கும் ரத்தம் அம்மா,
அதில் அதிகம் என்னுடையது தான் .
டாக்டர் சொன்னதை கேட்டேன் அம்மா
சிறிது நேரத்தில் நான் இறந்து விடுவேன்.


இதை மட்டும் உன்னிடம் சொல்ல வேண்டும்அம்மா,
நான் சத்தியமாக குடிக்கவில்லை .
அவர்கள் குடித்திருந்தார்கள் அம்மா
அவர்கள் எதையும் நினைக்கவில்லை


நான்போனபார்ட்டிக்கேகூடஅவனும்வந்திருக்கக் கூடும்
ஒரே ஓர் வித்தியாசம் தான்
அவன் குடித்தான்
நான் இறக்கப் போகிறேன் .


எதற்காக குடிக்கிறார்கள் அம்மா?
வாழ்க்கை வீணாக போகக் கூடுமே.
அம்மா, வலிகள் உணர்கிறேன் இந்நேரம் ,
கத்திப் போல் கூர்மையாக


என்னைமோதியவன்நடந்துகொண்டிருக்கிறான் அம்மா
இது கொஞ்சமும் நியாயமில்லை
இங்கே நான் இறந்து கொண்டிருக்கிறேன்
வெறித்துப்பார்க்கிறான் அவன், வேறு என்னசெய்ய முடியும்


தம்பியை அழ வேண்டாம்என்றுசொல்லுங்கள் அம்மா,
அப்பாவை தைரியமாக இருக்கசொல்லுங்கள் .
நான் சொர்க்கம் சேர்ந்த பின்னால்
"நல்ல பையன்" என்று என்கல்லறையில் எழுதி வையுங்கள்.


எவரேனும்அவனுக்குசொல்லியிருக்கவேண்டும் அம்மா
குடித்து விட்டு ஓட்ட வேண்டாம் என்று
எவரேனும் சொல்லிமட்டுமிருந்தால் அம்மா
நான் இன்னமும் உன் மகனாயிருந்திருப்பேன்


என் மூச்சடைக்கிறது அம்மா
ரொம்ப பயமாய் இருக்கிறது
எனக்காக அழாதே அம்மா..
எனக்காக எப்போதும் நீ இருந்தாய் ...

ஒரே ஒரு கேள்வி தான் அம்மா
நான் விடை பெற்றுக் கொள்ளும் முன்னால்
குடித்துவிட்டு ஒட்டியது நானில்லை
இறப்பது மட்டும் ஏன் நானாகவேண்டும் ?

தமிழில் : பூங்குழலி


I went to a party Mom,
I remembered what you said.
You told me not to drink, Mom,
So I drank soda instead.


I really felt proud inside, Mom,
The way you said I would.
I didn't drink and drive, Mom,
Even though the others said I should.


I know I did the right thing, Mom,
I know you are always right.
Now the party is finally ending, Mom,
As everyone is driving out of sight.


As I got into my car, Mom,
I knew I'd get home in one piece.
Because of the way you raised me,
So responsible and sweet.


I started to drive away, Mom,
But as I pulled out into the road, The other car didn't see me, Mom,
And hit me like a load..


As I lay there on the pavement, Mom,
I hear the policeman say,
"The other guy is drunk," Mom,
And now I'm the one who will pay.


I'm lying here dying, Mom....
I wish you'd get here soon.
How could this happen to me, Mom?
My life just burst like a balloon.


There is blood all around me, Mom,
And most of it is mine.
I hear the medic say, Mom,
I'll die in a short time.


I just wanted to tell you, Mom,
I swear I didn't drink.
It was the others, Mom.
The others didn't think. He was probably at the same party as I.
The only difference is, he drank
And I will die.


Why do people drink, Mom?
It can ruin your whole life.
I'm feeling sharp pains now.
Pains just like a knife.


The guy who hit me is walking, Mom,
And I don't think it's fair.
I'm lying here dying
And all he can do is stare.

Tell my brother not to cry, Mom.
Tell Daddy to be brave.
And when I go to heaven, Mom,
Put "GOOD BOY " on my grave.


Someone should have told him, Mom,
Not to drink and drive.
If only they had told him, Mom, I would still be alive.


My breath is getting shorter, Mom.
I'm becoming very scared.
Please don't cry for me, Mom.
When I needed you, you were always there.


I have one last question, Mom.
Before I say good bye.
I didn't drink and drive,
So why am I the one to die?

பிகு : இந்த கவிதையை ஷன்வேல் என்ற சகோதரர் எனக்கு அனுப்பி மொழிபெயர்க்கும் படி கேட்டுக் கொண்டார். ஆங்கிலக் கவிதையை எழுதியது யார் எனத் தெரியவில்லை. இணையத்தில் தேடிய போது இதே கவிதை பல தளங்களில் சிற்சில மாற்றங்களுடன் இருந்தது. ஆனால் எழுதியது யார் என அறிய முடியவில்லை.

Read more...

ஓ.வி. விஜயன் – அறிமுகம்

>> Monday, April 19, 2010



ஓ. வி. விஜயன் (ஜூலை 2, 1930 - மார்ச் 30, 2005)




பரிணாம வளர்ச்சி என்பது எந்த ஒரு துறையிலும் நிகழ்வது தான். முன்னமே இருக்கும் நிலையை அடித்தலமாய் கொண்டு, அதை ஆதரித்தும் மறுத்தும் அதன் நீட்சியாய் வளர்ந்தபடி இருக்கும் அந்த துறை. ஆனால் எப்போதாவது ஒரு முறை ஒருவர் வந்து அந்த துறையை சட்டென நெடுந்தூரம் அழைத்துச்சென்றுவிடுவார். அப்போதிலிருந்து, அந்நிகழ்விற்கு முன் / அந்நிகழ்விற்கு பின் என இரண்டாக பிரித்துவிடலாம் அத்துறையை. காட்டாக, 1982ல் வெளிவந்த “ஜெ.ஜெ. சில குறிப்புகள்” மூலம் சுந்தர ராமசாமி தமிழ் நாவல் துறையை அப்படி ஒரு தூரத்திற்கு இட்டுச்சென்றார். கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு பாதிப்பை மலையாளத்தில் நிகழ்த்திய எழுத்தாளர் ஓ.வி. விஜயன். 1969ல் வெளிவந்த அவரது முதல் நாவலான “கசாக்கிண்டே இதிகாசம்”(கசாக்கின் இதிகாசம்) மலையாள நாவல் உலகில் ஓர் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியது. மலையாள நாவல் இயக்கத்தை கசாக்கிற்கு முன் / கசாக்கிற்கு பின் என பிரித்துவிடலாம் என்னும் அளவிற்கு.

ஓ.வி. விஜயன் 1930ஆம் ஆண்டு பாலக்காட்டில் பிறந்தார். 1953ல் இவர் எழுதிய “பாதிரியார் கோன்ஸாலெஸிடம் கூறுங்கள்” என்ற சிறுகதையே இவரது முதல் இலக்கிய முயற்சி. 9 சிறுகதை தொகுப்புகளும், 9 நாவல்களும் எழுதியுள்ளார். இவர் எழுத்தாளராக மட்டுமன்றி கேலிச்சித்திரக்காரராகவும், பத்திரிக்கையாளராகவும் விளங்கினார். ஹிந்து, ஸ்டேட்ஸ்மேன், பாட்ரியாட் உள்பட இந்தியாவின் தலைசிறந்த பல இதழ்களில் பணிபுரிந்துள்ள விஜயனின் கேலிச்சித்திரங்கள் மூன்று தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைகள் மற்றும் நாவல்கள் பலவற்றை இவரே ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தார்.

கசாக்கின் இதிகாசம் என்ற தனது முதல் நாவலை எழுத இவர் 12 ஆண்டு காலம் எடுத்துக்கொண்டார். கசாக் எனும் கற்பனை கிராமத்தை கதைக்களமாக கொண்ட நாவல் “கசாக்கின் இதிகாசம்”. கசாக்கில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பள்ளிக்கு ஆசிரியராக வரும் ரவி என்ற கதாபாத்திரத்தில் இருந்து தொடங்கும் இந்நாவல், ரவியின் இருத்தலியல் தேடல்களையும் அலைகழிப்புகளையும் அவரது வருகை கசாக்கில் நிகழ்த்தும் சலனங்களையும் விவரிக்கிறது. மனிதனின் இருப்பிற்கான காரணம் என்ன என்ற ஆதி கேள்விக்கு விடை தேடும் முயற்சியாகவும் இந்நாவலை கூறலாம். பாலக்காட்டின் தமிழ் கலந்த கொச்சை மலையாளம், காலத்தின் முன்னும் பின்னும் தங்குதடையற்று கதைசொல்லி உலாவும் விதம், மிகச்சிறிய வெளிநிகழ்வுகளின் மூலம் கதாபாத்திரங்களின் உள்போராட்டங்களை விளக்கிச்செல்லும் பாணி என நாவலின் பல பண்புகள் மலையாள இலக்கிய உலகின் மைல்கல்லாக இப்படைப்பை நிறுவின. “கசாக்கின் இதிகாசம்” மாத்ருபூமி வார இதழில் 1968ஆம் ஆண்டு தொடராக வந்து பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்த ஆண்டே புத்தக வடிவிலும் வெளிவந்தது. 1995ஆம் ஆண்டு இந்நாவல் ஓ. வி. விஜயனின் மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் பென்குயின் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

ஓ.வி. விஜயனின் மற்ற நாவல்கள் : தர்மபுராணம், குருசாகரம், மதுரம் காயந்தி, பிரவாசகண்டே வழி மற்றும் தலைமுறைகள்.

ஓ.வி. விஜயன், தேசிய அளவில் பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளையும் பல்வேறு கேரள மாநில இலக்கிய விருதுகளையும் வாங்கியுள்ளார்.

10 வருடங்கள் பார்கின்ஸன்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஓ.வி. விஜயன், மார்ச் 30, 2005ல் மறைந்தார்.

கஸாக்கிண்டே இதிகாசம் நாவலின் ஒரு சிறு பகுதி, தமிழில் :

…முன்பொரு காலத்தில், ராட்சஸ பல்லிகளுக்கும் டினோசர்களுக்கும் வெகு காலம் முன்பு, ஓர் அலாதியான பயணத்தை துவக்கிய இரு மகரந்தத் துகள்கள், சூர்ய அஸ்தமனத்தின் ஒளிவெள்ளத்தில் குளித்துக்கொண்டிருந்த ஒரு பள்ளத்தாக்கை வந்தடைந்தன.

“அக்கா, இதற்கும் அப்பால் என்ன இருக்கிறதென பார்க்கலாம் வா” என்றாள் இளைய துகள்.

“பசுமை நிறைந்த இந்த பள்ளத்தாக்கை விட்டு வேறெங்கும் நான் போகப்போவதில்லை” என்றாள் மூத்தவள்.

“எனக்கு பயணம் வேண்டும். அறிதலின் சுகம் வேண்டும்” என்றாள் இளையவள், நீண்டிருந்த பாதையை ஆச்சரியத்துடன் பார்த்தபடி.

“அக்காவை மறந்துவிடுவாயா?”

“மாட்டேன்”

“மறப்பாய், தங்கையே. அது தான் விதி. அதில் பிரிவும் துயரமும் மட்டுமே நிறைந்துள்ளன”

இளையவள் பயணத்தை தொடர்ந்தாள். மூத்த மகரந்தத் துகள் பள்ளத்தாக்கில் தங்கினாள். அவளது வேர் ஈர மண்ணை துளைத்துச்சென்று, மரணத்தையும் நினைவையும் உணவாய்க் கொண்டது. பசுமையும் நிறைவுமாய் அவள் பூமியெங்கும் முளைத்தாள்.

… வெள்ளிக்கொலுசும் மையிட்ட கண்ணுமாய் செதலி மலையின் அடிவாரத்தில் பூப்பறிக்க வந்தாள் அச்சிறுமி. அங்கு சாந்தமாய், தனிமையில் நின்றிருந்தது பூத்துக்குலுங்கும் ஒரு செண்பக மரம். பூப்பறிக்க அதன் சிறு கிளையொன்றை வளைத்தாள் சிறுமி. கிளை முறிகையில் செண்பகம் கூறியது, “தங்கையே, என்னை மறந்துவிட்டாய்!”


ஆக்கம் : சித்தார்த்

Read more...

மேலும் சில இரத்தக் குறிப்புகள் - அனார்

>> Sunday, April 18, 2010

மேலும் சில இரத்தக் குறிப்புகள்

-அனார்-


மாதம் தவறாமல் இரத்தத்தைப் பார்த்து
பழக்கப்பட்டிருந்தும்
குழந்தை விரலை அறுத்துக் கொண்டு
அலறி வருகையில்
நான் இன்னும் அதிர்ச்சியுற்றுப் பதறுகின்றேன்
இப்போது தான் முதல் தடவையாக காண்பதுபோன்று

“இரத்தம்” கருணையை, பரிதவிப்பினை
அவாவுகின்றது
இயலாமையை வெளிப்படுத்துகின்றது

வன் கலவி புரியப்பட்ட பெண்ணின் இரத்தம்
செத்த கொட்டுப் பூச்சியின் அருவருப்பூட்டும் இரத்தமாயும்
குமுறும் அவளுயிரின் பிசுபிசுத்த நிறமாயும்
குளிர்ந்து வழியக் கூடும்

கொல்லப்பட்ட குழந்தையின்
உடலிலிருந்து கொட்டுகின்றது இரத்தம்
மிக நிசப்தமாக
மிக குழந்தைத் தனமாக

களத்தில்
இரத்தம் அதிகம் சிந்தியவர்கள்
அதிக இரத்தத்தை சிந்த வைத்தவர்கள்
தலைவர்களால் கௌரவிக்கப்பட்டும்
பதவி உயர்த்தப்பட்டும் உள்ளார்கள்

சித்திரவதை முகாம்களின்
இரத்தக் கறைபடிந்திருக்கும் சுவர்களில்
மன்றாடும் மனிதாத்மாவின் உணர்வுகள்
தண்டனைகளின் உக்கிரத்தில்
தெறித்துச் சிதறியிருக்கின்றன

வன்மத்தின் இரத்த வாடை
வேட்டையின் இரத்த நெடி
வெறிபிடித்த தெருக்களில் உறையும் அதே இரத்தம்
கல்லறைகளில் கசிந்து காய்ந்திருக்கும் அதே இரத்தம்
சாவின் தடயமாய்
என்னைப் பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது


(தமிழ் வழி ஆங்கிலத்தில் தவ சஜிதரன்)


Some more notes of blood

Even though I've got used
To seeing blood each month
I turn dizzy and shocked
When my child comes to me
Screaming with a cut finger
As if it was the first time to see

Blood vies for love and anxiety
Manifests incapacity

The cold blood of
A sexually assaulted woman
May slither down
As the disgusting blood of a dead tarantula
As the sticky colour of her rumbling soul

The blood from the body
Of a murdered infant
Oozes out
So silently
So childishly

Those who shed and cause to shed
More blood on the battlefield
Have been honoured by the leaders
Elevated by them

The entreating senses of human souls
Have got scattered on the blood-stained walls
Of torture camps in the zeal of punishment

The bloody smell of malevolence
The bloody odor of the hunt
The same blood freezing in the boisterous streets
The blood diffused from and dried on the tombs
Continues to follow me

As the print of death

- Anar

(Translated from Tamil by Thava Sajitharan)

Read more...

எதற்காக இந்த வலைப்பதிவு...

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்“ என்கிற கனவினை மெய்ப்பிப்பதற்கான மொழிபெயர்ப்புகளுக்கான ஒரு வலைப்பதிவு இது.

மொழிபெயர்ப்புகள் பற்றி..

ஒரு மொழி தன்னை வளமானதாகவும் வனப்பானதாகவும் ஆக்கிக்கொள்ள மற்ற மொழிகளுடன் கொள்ளும் ஒரு உறவே மொழிபெயர்ப்பு.

  © Blogger template Digi-digi by Ourblogtemplates.com 2008

Back to TOP