சலவை - குழூர் வில்சன்
>> Monday, September 27, 2010
வளர்ந்து வரும் இளம் மலையாளக் கவிஞர்களில் குழூர் வில்சன் மிக முக்கியமானவர். மலையாள - தமிழ்க்கவிஞர்கள் சந்தித்துக் கவிதை பற்றி உரையாட குற்றாலத்தில் கூடியபோது கேரளத்தில் இருந்து கலந்து கொண்டார் இவர்.தமிழ்க்கவிதைகளை மிக விரும்பி வாசிப்பவர். மனுஷ்யபுத்திரன், கல்யாண்ஜி என்று மிகச் சில கவிஞர்களையே வாசித்திருக்கும் குழூருக்கு தமிழ்க்கவிதைகளை தொடர்ந்து பரவலாக வாசிக்க முடியவில்லையே என்ற வருத்தமும் உண்டு
கொச்சியைச் சேர்ந்த குழூரின் தகப்பனார் அவரின் மொழியிலேயே சொல்வதானல் ‘கெடா வெட்டுக்காரன்’ எனவே மலையாள மொழிசார்ந்த கிராமியப்பாடல்களில் நல்ல தேர்ச்சியும் அது குறித்த தெளிவான பார்வையும் குழூரின் எழுத்துக்களில் தென்படும்
ஏசியாநெட்டில் செய்திப்பிரிவில் பணியாற்றிய வில்ஸன் தற்போது அமீரகத்தில் அஜ்மானில் இயங்கும் பண்பலை ஒன்றின் செய்திப்பிரிவுக்கு தலைமையேற்றிருக்கிறார். அன்றாடச் செய்திகளின் நெருக்கடிகளுக்கிடையிலும் புனைவுக்காகவும் தனது சொந்த மண்ணின் கலை இலக்கியம் சார்ந்த பின்புலங்களுக்காகவும் இயங்கும் எளிய மனது இவருக்குண்டு
***********************
சலவை
சட்டையாகவோ
ஜட்டியாகவோ
இருந்திருந்தால்
அந்த மூலையை நோக்கி
எடுத்தெறிந்திருக்கலாம்
இது
உடம்பு
குளியல் அறையில்
சாதாரணமாய் கழுவினால் போதாது
மிக மோசமான
துணிகளை
சலவைக்காரரிடம்
வெளுக்கக்
கொடுப்பது போல
ஆற்றிற்கோ
கடலுக்கோ சலவைக்குக்
கொடுக்க வேண்டும்
ஒருவேளை
திரும்பத் தந்தாலும்
தரக்கூடும் அது.
*********************************************
பயமாயிருக்கிறது எனக்கு
பணமில்லாத என்னை
வட்டிக்காரனின்
'உள்ளாடைகளற்ற' வசை
கஞ்சி பரிமாறும்
அம்மாவின் கஞ்சத்தனம்
தேய்ந்த செறுப்பின் மீது
அந்தப் பெண்ணின் பார்வை
பிச்சைக்காரனின்
ஏளனச் சிரிப்பு
பேருந்துக்கு பணம் கொடுக்கும்
நண்பனின் நகைச்சுவை
தேநீர்கடை
குமாரன் அண்ணாச்சியின் துர்முகம்
பயமாயிருக்கிறது எனக்கு
பணம் வைத்திருக்கும் உன்னை
தமிழில் : ஆசிப் மீரான் Read more...
