Showing posts with label Siddharth. Show all posts
Showing posts with label Siddharth. Show all posts

அழைப்பு – ஓ. வி. விஜயன்

>> Wednesday, April 28, 2010

அவனது நினைவுகள் அந்த அழைப்பில் இருந்தே தொடங்கின, “போதவிரதா!”
அவன் பதில் கூறினான், “இதோ நான் வந்துவிட்டேன்!”

“போதவிரதா!”

தாய் அழைத்தார், தந்தை அழைத்தார், ஆசிரியர் அழைத்தார், தோழர்கள் அழைத்தனர். அப்போதெல்லாம் அவன் பதில் கூறினான், “இதோ வந்துவிட்டேன்!”

மனைவி அழைத்தாள், மகன் அழைத்தான், மகள் அழைத்தாள், அவருடைய மக்கள் அழைத்தனர். அந்த அழைப்புக்களனைத்தும் போதவிரதனின் அறிவை மேலும் பலப்படுத்தின – நான்!

ஒவ்வோர் இரவும் உறக்கத்திற்கு முன்பான கடைசி சிந்தையாக இது இருந்தது. இதுவே நான்.

இரவினைப் பகலும் பகலினை இரவும் பின்தொடர்ந்தன. நாட்கள் செல்லச்செல்ல இந்த சிந்தை போதவிரதனுக்கு பழக்கமான ஒன்றாக மாறியது.

இறுதியில் ஓர் இரவு மற்ற இரவுகளினின்று வேறுபட்டதென போதவிரதன் அறிந்தான். வெளியே புதரில் இருந்து அசாதாரணமான ஓர் குரல் அழைத்தது.

“போதவிரதா!”

போதவிரதன் பதிலேதும் கொடுக்கவில்லை.

இவ்விரவு விடியாதா என காத்திருந்தான். இரவு விடியவில்லை. புதரிடையே இருந்து அந்தக் குரல் மீண்டும் அழைத்தது.

சிலந்தி வலையினை போன்ற பட்டு நூல் போதவிரதனை சுற்றியது. அறுத்தெரிய முயன்று தோற்றான். புதரில் இருந்த அந்த அறிமுகமற்ற மனிதன் நூலினைப் பற்றி இழுக்க, தடுக்க வழியின்றி போதவிரதனும் புதரினுள் நுழைந்தான்.

நடுக்கத்துடம் போதவிரதன் அவனிடம் கூறினான் “இது நான் இல்லை”

அம்மனிதன் கனிவோடு சிரித்தான்.

“அதை புரியவைக்கவே உன்னை இங்கு அழைத்தேன்.”

**********

தமிழில் : சித்தார்த்

Read more...

ஓ.வி. விஜயன் – அறிமுகம்

>> Monday, April 19, 2010



ஓ. வி. விஜயன் (ஜூலை 2, 1930 - மார்ச் 30, 2005)




பரிணாம வளர்ச்சி என்பது எந்த ஒரு துறையிலும் நிகழ்வது தான். முன்னமே இருக்கும் நிலையை அடித்தலமாய் கொண்டு, அதை ஆதரித்தும் மறுத்தும் அதன் நீட்சியாய் வளர்ந்தபடி இருக்கும் அந்த துறை. ஆனால் எப்போதாவது ஒரு முறை ஒருவர் வந்து அந்த துறையை சட்டென நெடுந்தூரம் அழைத்துச்சென்றுவிடுவார். அப்போதிலிருந்து, அந்நிகழ்விற்கு முன் / அந்நிகழ்விற்கு பின் என இரண்டாக பிரித்துவிடலாம் அத்துறையை. காட்டாக, 1982ல் வெளிவந்த “ஜெ.ஜெ. சில குறிப்புகள்” மூலம் சுந்தர ராமசாமி தமிழ் நாவல் துறையை அப்படி ஒரு தூரத்திற்கு இட்டுச்சென்றார். கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு பாதிப்பை மலையாளத்தில் நிகழ்த்திய எழுத்தாளர் ஓ.வி. விஜயன். 1969ல் வெளிவந்த அவரது முதல் நாவலான “கசாக்கிண்டே இதிகாசம்”(கசாக்கின் இதிகாசம்) மலையாள நாவல் உலகில் ஓர் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியது. மலையாள நாவல் இயக்கத்தை கசாக்கிற்கு முன் / கசாக்கிற்கு பின் என பிரித்துவிடலாம் என்னும் அளவிற்கு.

ஓ.வி. விஜயன் 1930ஆம் ஆண்டு பாலக்காட்டில் பிறந்தார். 1953ல் இவர் எழுதிய “பாதிரியார் கோன்ஸாலெஸிடம் கூறுங்கள்” என்ற சிறுகதையே இவரது முதல் இலக்கிய முயற்சி. 9 சிறுகதை தொகுப்புகளும், 9 நாவல்களும் எழுதியுள்ளார். இவர் எழுத்தாளராக மட்டுமன்றி கேலிச்சித்திரக்காரராகவும், பத்திரிக்கையாளராகவும் விளங்கினார். ஹிந்து, ஸ்டேட்ஸ்மேன், பாட்ரியாட் உள்பட இந்தியாவின் தலைசிறந்த பல இதழ்களில் பணிபுரிந்துள்ள விஜயனின் கேலிச்சித்திரங்கள் மூன்று தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைகள் மற்றும் நாவல்கள் பலவற்றை இவரே ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தார்.

கசாக்கின் இதிகாசம் என்ற தனது முதல் நாவலை எழுத இவர் 12 ஆண்டு காலம் எடுத்துக்கொண்டார். கசாக் எனும் கற்பனை கிராமத்தை கதைக்களமாக கொண்ட நாவல் “கசாக்கின் இதிகாசம்”. கசாக்கில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பள்ளிக்கு ஆசிரியராக வரும் ரவி என்ற கதாபாத்திரத்தில் இருந்து தொடங்கும் இந்நாவல், ரவியின் இருத்தலியல் தேடல்களையும் அலைகழிப்புகளையும் அவரது வருகை கசாக்கில் நிகழ்த்தும் சலனங்களையும் விவரிக்கிறது. மனிதனின் இருப்பிற்கான காரணம் என்ன என்ற ஆதி கேள்விக்கு விடை தேடும் முயற்சியாகவும் இந்நாவலை கூறலாம். பாலக்காட்டின் தமிழ் கலந்த கொச்சை மலையாளம், காலத்தின் முன்னும் பின்னும் தங்குதடையற்று கதைசொல்லி உலாவும் விதம், மிகச்சிறிய வெளிநிகழ்வுகளின் மூலம் கதாபாத்திரங்களின் உள்போராட்டங்களை விளக்கிச்செல்லும் பாணி என நாவலின் பல பண்புகள் மலையாள இலக்கிய உலகின் மைல்கல்லாக இப்படைப்பை நிறுவின. “கசாக்கின் இதிகாசம்” மாத்ருபூமி வார இதழில் 1968ஆம் ஆண்டு தொடராக வந்து பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்த ஆண்டே புத்தக வடிவிலும் வெளிவந்தது. 1995ஆம் ஆண்டு இந்நாவல் ஓ. வி. விஜயனின் மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் பென்குயின் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

ஓ.வி. விஜயனின் மற்ற நாவல்கள் : தர்மபுராணம், குருசாகரம், மதுரம் காயந்தி, பிரவாசகண்டே வழி மற்றும் தலைமுறைகள்.

ஓ.வி. விஜயன், தேசிய அளவில் பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளையும் பல்வேறு கேரள மாநில இலக்கிய விருதுகளையும் வாங்கியுள்ளார்.

10 வருடங்கள் பார்கின்ஸன்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஓ.வி. விஜயன், மார்ச் 30, 2005ல் மறைந்தார்.

கஸாக்கிண்டே இதிகாசம் நாவலின் ஒரு சிறு பகுதி, தமிழில் :

…முன்பொரு காலத்தில், ராட்சஸ பல்லிகளுக்கும் டினோசர்களுக்கும் வெகு காலம் முன்பு, ஓர் அலாதியான பயணத்தை துவக்கிய இரு மகரந்தத் துகள்கள், சூர்ய அஸ்தமனத்தின் ஒளிவெள்ளத்தில் குளித்துக்கொண்டிருந்த ஒரு பள்ளத்தாக்கை வந்தடைந்தன.

“அக்கா, இதற்கும் அப்பால் என்ன இருக்கிறதென பார்க்கலாம் வா” என்றாள் இளைய துகள்.

“பசுமை நிறைந்த இந்த பள்ளத்தாக்கை விட்டு வேறெங்கும் நான் போகப்போவதில்லை” என்றாள் மூத்தவள்.

“எனக்கு பயணம் வேண்டும். அறிதலின் சுகம் வேண்டும்” என்றாள் இளையவள், நீண்டிருந்த பாதையை ஆச்சரியத்துடன் பார்த்தபடி.

“அக்காவை மறந்துவிடுவாயா?”

“மாட்டேன்”

“மறப்பாய், தங்கையே. அது தான் விதி. அதில் பிரிவும் துயரமும் மட்டுமே நிறைந்துள்ளன”

இளையவள் பயணத்தை தொடர்ந்தாள். மூத்த மகரந்தத் துகள் பள்ளத்தாக்கில் தங்கினாள். அவளது வேர் ஈர மண்ணை துளைத்துச்சென்று, மரணத்தையும் நினைவையும் உணவாய்க் கொண்டது. பசுமையும் நிறைவுமாய் அவள் பூமியெங்கும் முளைத்தாள்.

… வெள்ளிக்கொலுசும் மையிட்ட கண்ணுமாய் செதலி மலையின் அடிவாரத்தில் பூப்பறிக்க வந்தாள் அச்சிறுமி. அங்கு சாந்தமாய், தனிமையில் நின்றிருந்தது பூத்துக்குலுங்கும் ஒரு செண்பக மரம். பூப்பறிக்க அதன் சிறு கிளையொன்றை வளைத்தாள் சிறுமி. கிளை முறிகையில் செண்பகம் கூறியது, “தங்கையே, என்னை மறந்துவிட்டாய்!”


ஆக்கம் : சித்தார்த்

Read more...

இதயதேவி – வைக்கம் முகம்மது பஷீர்

>> Monday, April 5, 2010

வைக்கம் முகம்மது பஷீர் மலையாளத்தின் தலைசிறந்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவர். 1937 முதல் 1941 வரை இவர் எழுதிய கதைகள் அடங்கிய “விஷப்பு” (பசி) என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதை இது.



நினைவின் ஆழத்தில் புதைந்து போயிருந்த அது, நிலவொளியில் மூழ்கும் தாஜ்மஹாலென தெளிவடைகிறது இப்போது. இந்தக் காதல் கதை துக்கம் நிறைந்ததாய் இருக்கலாம். இல்லையெனில் வேறேதோ, அதன் சூட்சமத்தை பற்றி நான் ஒன்றும் விளக்கப்போவதில்லை.

பிரம்மாண்டமான கட்டிடங்கள் நிறைந்த தெருக்களின் வழியே தாய் தந்தையற்ற அனாதையாய் திரிந்துகொண்டிருந்தேன், அதன் விரிவைக் கண்டு ஆச்சரியப்படும் லட்சோபலட்சம் மனிதர்களை இடித்து உரசியபடி. சத்தங்கள் நிறைந்த, விசாலமான இந்நகரம் என்னை மிகவும் துன்புறுத்தியது. எவ்வளவு முயற்சித்தும் வேலை கிடைக்கவில்லை. எனக்கு மட்டும் ஓர் அடைக்கலமில்லை. உடலும் மனதும் ரணப்பட்டிருந்தன. உச்சிவெயிலில் இருந்து தப்பிக்க அருங்காட்சியகத்தினுள் நுழைந்தேன். அங்கிருந்த எதையும் நின்று பார்க்கவில்லை. மரநிழலிலிருந்த இருக்கையில் சென்றமர்ந்தேன். என்னருகில் ஓர் பெண் சிற்பம். வெண்பளிங்கில் செய்யப்பட்டது. உறைந்த நிலா பெண் உரு கொண்டதைப் போன்ற தோற்றம். அங்கங்கலெல்லாம் பூரண வளர்ச்சியடைந்திருந்தன. முந்திரி இலைகளைக் கொண்டு மானம் காத்துக்கொண்டிருந்தது அது.

என் கண்கள் கலையெழுச்சிமிக்க அந்த மௌன அழகில் பதிந்திருந்தன – ஆனால் சிந்தனை துக்கம் நிரம்பியதாய், மேகங்களினிடையே ஓடும் நதியினைப்போல் எங்கெங்கோ பாய்ந்துக்கொண்டிருந்தது. நான் இருப்பது நகரத்தின் இதயத்தில் எனும் நினைவே மறந்துபோனது. அப்போது தான் இடிமுழக்கம் போன்ற சத்தத்துடன் ஹிந்தியில் அந்த கேள்வி:

‘நீ யார்?’

சிவப்பேறிய இரு கண்கள் என்னை உற்றுநோக்கின. செம்மண் அப்பிய உடைகள் அணிந்த பார்ஸி இளைஞன். தூக்கலான வியர்வை நெடி – கூடவே ஏதோ வன மிருகத்தின் மேலிருந்தெழுவதைப் போன்ற கெட்ட வாடையும். அச்சமுற்றவனாய் திகைத்து நின்றுவிட்டேன் நான். இலக்கில்லாத அந்த கண்களில் ஒரு பிரகாசம் தோன்றியது. கோபம் கணன்ற அந்த முகத்தில் ஓர் புன்சிரிப்பு நிழலெனப் படர்ந்தது.

‘ஓ. நீ தானா?’ சிரித்துக்கொண்டே அவன் எனக்கு கைகொடுத்தான். அந்த முகமாற்றத்திற்கான காரணம் என்னவென்று ஆச்சரியப்பட்டேன். அந்த மனிதனை அப்போது தான் முதல்முறையாகக் காண்கிறேன்.

‘நீ அவனோ என்று நினைத்துவிட்டேன்’

‘எவன்?’

‘தெரியாதா?’ ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தான். உலகப்புகழ் பெற்ற அவனைப் பற்றிய எனது அறியாமையை எண்ணி சிரித்தான்.

‘என்னுடைய ஜட்காகாரன்!’

‘ஜட்காகாரன்?’

‘அவன் தான். என்னுடைய இதயதேவியை….’

‘இதயதேவியை?’

அந்த கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. அவன் எல்லாவற்றையும் மறந்துவிட்டான் என்றெனக்குத் தோன்றியது. துக்கம் நிறைந்த அசைவுகளுடன் காதலின் உணர்வெழுச்சியுடன் அச்சிலையருகே சென்றான். ஒரு நாற்பது ஐம்பது கண்கள் அவனை பின் தொடர்ந்தன. சிலது ஏளனப்புன்னைகை தூவியபடி. சிலது உணர்ச்சிகளற்று.

வெண்பளிங்குச் சிற்பம் புன்னகைக்கும் பாவனையுடன் நின்றது.

‘தில்பஹார்!’ உணர்ச்சிப்பொங்க அழைத்தான். வேதனையுடன் அக்கண்கள் உயர்ந்தன.

‘நான் தாமதித்து விட்டேனா?’ தீனமாய் எழுந்தது அந்த குரல்!

நிறைந்தொழுகிய கண்களுடன் அந்த முகத்தை பார்த்துக்கொண்டு அதன் பாதங்களில் விழுந்தான். பதிலேதும் கிடைக்காததால் மீண்டும் எழுந்து சிற்பத்தை கட்டிப்பிடித்தான். அதன் மார்பில் முகம் புதைத்து உடைந்தழுதான்:

‘தேவீ! இன்றாவது என்னோடு பேசு….’

தமிழில் : சித்தார்த்

Read more...

ஒளியை நோக்கி கிளிகள் - சித்தார்த்

>> Thursday, August 13, 2009

ஒளியை நோக்கி
- யோ ஃபெங் (சீனா)

விளக்கை மறைவிற்கு திருப்பிவிடு
இனி இருள்
யாரது, விட்டில் பூச்சியை தடுத்து
இருளில் வசிக்கப் பழக்குவது?

முடிவற்ற பயிற்சிக்குப் பின்
அதன் சிறகுகள் முறிகின்றன
பறக்கவியலாது
அந்தியை இழுத்தபடி
நத்தையென மெல்ல ஊர்ந்து செல்கிறது
ஒளியை நோக்கி


TOWARD THE LIGHT

Return light to the lampshade
and then it’s dark
Who is it that blocks out a moth
and trains it to stay in darkness?

After endless training
the moth eventually breaks its wings
and is unable to fly
Dragging the dusk
it creeps as slow as a snail toward light

**********


கிளிகள்
– ஆல்பர்ட்டோ ப்ளாங்கோ

நாளெல்லாம் பேசிக்கொண்டிருக்கின்றன.
இருட்டத்துவங்கியதும்
குரல் தாழ்த்தி
தம் நிழலுடனும்
மௌனத்துடனும்
உரையாடுகின்றன.

கிளிகளும்
அனைவரையும் போலத்தான்.
நாளெல்லாம் பேச்சு
இரவினில் துர்கனவுகள்.

அறிவார்ந்த முகத்தினில்
தங்க வளையங்களும்
அட்டகாசமான இறகுகளும்
இதயத்துள் ஓயாத பேச்சும்….

கிளிகளும்
அனைவரையும் போலத்தான்.
சிறப்பாய் பேசுபவை
தனி கூடுகளில்

The Parakeets என்ற மெக்ஸிக்க கவிதையின் ஆங்கிலம் வழியான மொழிபெயர்ப்பு.

The Parakeets
by Alberto Blanco
Translated by W. S. Merwin


They talk all day
and when it starts to get dark
they lower their voices
to converse with their own shadows
and with the silence.

They are like everybody
—the parakeets—
all day chatter,
and at night bad dreams.

With their gold rings
on their clever faces,
brilliant feathers
and the heart restless
with speech...

They are like everybody,
—the parakeets—
the ones that talk best
have separate cages.

தமிழில் : சித்தார்த்

Read more...

எதற்காக இந்த வலைப்பதிவு...

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்“ என்கிற கனவினை மெய்ப்பிப்பதற்கான மொழிபெயர்ப்புகளுக்கான ஒரு வலைப்பதிவு இது.

மொழிபெயர்ப்புகள் பற்றி..

ஒரு மொழி தன்னை வளமானதாகவும் வனப்பானதாகவும் ஆக்கிக்கொள்ள மற்ற மொழிகளுடன் கொள்ளும் ஒரு உறவே மொழிபெயர்ப்பு.

  © Blogger template Digi-digi by Ourblogtemplates.com 2008

Back to TOP