Showing posts with label ஆக்டோவியா பாஸ். Show all posts
Showing posts with label ஆக்டோவியா பாஸ். Show all posts

அலையுடனான வாழ்க்கை - ஆக்டோவியா பாஸ்

>> Thursday, January 28, 2010

நான் கடலை விட்டு அகன்ற போது ஒரு அலை மட்டும் மற்ற அலைகளை விட முந்நோக்கி வந்தாள். உயரமாகவும் தக்கையாகவும் இருந்தாள். மிதக்கும் ஆடைகளை பற்றி இழுத்து மற்றவர்கள் அவளை கூக்குரலிட்டு அழைத்தும் என் கரங்களை பற்றிக்கொண்டு என்னோடு துள்ளிக்கொண்டு வந்துவிட்டாள். அவளது நண்பர்கள் முன்னிலையில் அவளை அவமானப்படுத்துவது என்னை சங்கடத்திலாழ்த்தும் என்பதால் ஒன்றும் சொல்ல வேண்டாமென்று இருந்துவிட்டேன். இருப்பினும் மூத்தவர்களின் கோபப்பார்வைகள் என்னை உறையச்செய்தது. நாங்கள் நகரை அடைந்த போது இங்கே இருப்பது சாத்தியமில்லை, நகர வாழ்க்கை கடலை வீட்டு அகலாத அலையின் கற்பனைக்கு எட்டாத அளவு மாறுபட்டது என்பதை விளக்கினேன். என்னை கூர்ந்து கவனித்தாள். நான் இனிமையாய், உறுதியாய் பரிகாசமாய் முயற்சித்தேன். அவள் அழுதாள், கத்தினாள், அனைத்தாள், பயமுறுத்தினாள். நான் மன்னிப்புகோற வேண்டியதாயிற்று.

அடுத்த நாள்முதல் தொல்லைகள் ஆரம்பமாகின. நடத்துனர், பயணிகள், காவலர்கள் பார்த்துவிடாமல் ரயிலுக்குள் எப்படி ஏறுவது. ஒரு அலையை தண்டவாளத்தில் ஏற்றி செல்வதற்கு எவ்வித விதிமுறைகளும் நிச்சயமாக கூறப்படவில்லையெனினும் சொல்லப்படாததே இச்செயல் எத்தனை தீவிரமாகக் கருத்தப்படுமென்பதற்கான ஒரு அறிகுறி. தீவிர யோசனைக்கு பிறகு வண்டி கிளம்ப ஒரு மணி நேரத்திற்கு முன்பாக ரயில்நிலையம் அடைந்தேன். இருக்கையை பிடித்தேன். யாரும் பார்க்காத தருணத்தில், பயணிகளுக்கான தண்ணீர் குவலையை காலி செய்து என் தோழியை பத்திரமாக அதில் ஊற்றினேன்.

அடுத்திருந்த தம்பதியரின் குழந்தை அவர்களின் அபார தாகத்தை கூறிய போது முதல் சம்பவம் ஆரம்பமானது. அவர்களை தடுத்து சிற்றூண்டிகளும் எலுமிச்சை சாறும் வாங்கித்தருவதாக உறுதியளித்தேன். அவர்கள் ஒப்புக்கொள்ளவரும் நேரத்தில் மற்றுமொரு பயணி தாகத்துடன் வந்தாள். அவளுக்கும் வாங்கித்தருவதாக சொல்லலாம் என்று நினைத்து பின் அவளுடன் வந்த நபரின் முறைப்பை பார்த்து சொல்லாமல் விட்டுவிட்டேன். அப்பெண்மணி ஒரு காகித கோப்பையை எடுத்துக்கொண்டு நீர்குவலையின் அருகில் சென்று குழாயை திறந்தாள். கோப்பை பாதி நிறைவதற்குள் என் தோழிக்கும் அவளுக்குமிடையில் தாவிச்சென்றேன். என்னை ஆச்சரியமாக பார்த்ததாள். அவளிடம் மன்னிப்பு கேட்கும் நேரத்தில் குழந்தைகளில் ஒன்று மறுபடியும் குழாயை திறந்து விட்டது. பெருங்கோபத்தோடு குழாயை மூடினேன். அப்பெண்மணி கோப்பையை தன் உதடுகளுக்கு கொண்டுசென்றாள்.

“ஆ…..இத்தண்ணீர் உப்புக்கரிக்கிறது”

அச்சிறுவனும் இதையே எதிரொலித்தான். பல பயணிகள் எழுந்தனர். அப்பெண்ணின் கணவர் நடத்துனரை அழைத்தார் :

“இந்த ஆள் தண்ணீரில் உப்பை கலந்துவிட்டார்”

நடத்துனர் கண்காணிப்பாளரை அழைத்தார்

“நீ தண்ணீரில் ஏதோ பொருளை கலந்துவிட்டாயா?’

கண்காணிப்பாளர் காவலரை அழைத்தார்

நீதான் தண்ணீரை விஷமாக்கினாயா?

காவலர் தலைவரை அழைத்தார்

நீ தானே விஷம் வைத்தவன்?

தலைவர் மூன்று காரியஸ்தர்களை அழைத்தார். பயணிகளின் பார்வைகளுக்கும் முணுமுணுப்புகளுக்கும் மத்தியில் அவர்கள் என்னை ஒரு காலியான பெட்டிக்கு அழைத்துச்சென்றனர். அடுத்த நிறுத்தத்தில் என்னை இழுத்துச்சென்று சிறையில் அடைத்தனர். சில நாட்களுக்கு நீண்ட விசாரனைகளை தவிர்த்து வேறெதுவும் யாரும் என்னிடம் பேசவில்லை. ‘இந்த வழக்கு மிகவும் கடுமையானது. உண்மையில் நீ குழந்தைகளுக்கு விஷம் கொடுக்க எண்ணவில்லையா? என்று தலையாட்டிக்கொண்டே சொன்ன சிறை அதிகாரி உட்பட என்கதையை நான் விளக்கினாலும் யாரும் நம்புவதாக இல்லை.

ஒரு நாள் என்னை நீதிபதி முன் ஆஜர் படுத்தினர்.

உன் வழக்கு மிகவும் கடுமையான ஒன்று என்று அவரும் சொன்னார். இவ்வழக்கை நான் குற்றவியல் நீதிபதிக்கு ஒப்புவிக்கிறேன் என்றார்.

ஒரு வருடம் கடந்தது. கடைசியாக என்னைப்பற்றின தீர்மானத்திற்கு வந்தனர். யாரும் என் செயலால் பாதிக்கப்படவில்லை என்பதால் எனக்கான தண்டனை மிதமானதாக இருந்தது. குறுகிய காலத்திற்கு பின் நான் விடுதலையாகும் நாளும் வந்தது.

சிறையின் உயர் அதிகாரி என்னை அழைத்தார். ‘இப்போது நீ விடுதலையாகிறாய், நீ பாக்கியசாலி. அதிர்ஷ்டவசமாக யாரும் உன் செயலால் பாதிக்கப்படவில்லை. ஆனால் இச்செயலை நீ மீண்டும் செய்ய முற்படாதே. அடுத்தமுறை இவ்விஷயம் இத்தனை எளிதில் முடிவடைந்துவிடாது என்றார். எல்லோரும் பார்த்த அதே சந்தேகப்பார்வையால் தான் அவரும் என்னை பார்த்தார்.

அன்று மதியமே நான் ரயிலை பிடித்தேன். ஒருமணி நேர அசௌகரியப்பயணத்திற்கு பிறகு நகரத்தை அடைந்து அங்கிருந்து ஒரு வண்டி பிடித்து வீட்டை அடைந்தேன். என் வீட்டு வாசலில் சிரிப்பொலியும் பாட்டு சத்தமும் கேட்டது. ஆச்சர்ய அலை இதயத்தை கடந்து செல்லும்போது ஏற்படுத்தும் ஆச்சர்ய அதிர்வைப்போல எனது இதயத்தில் ஓர் வலியை உணர்ந்தேன். அங்கு என் தோழி எப்போதும் போல் சிரித்துப்பாடிக்கொண்டிருந்தாள்.

நீ எப்படி திரும்பி வந்தாய்?

வெகு சாதாரணம். ரயில் வண்டியில் என்னை வெறும் உப்பு தண்ணீர் தான் என்று யாரோ உறுதி செய்த பின்னர் ரயில் இஞ்சினில் ஊற்றினர். மிகவும் கடினமான பயணமாக இருந்தது அது. வெகு விரைவில் நான் வெள்ளை ஆவியாகி மாறி பின் நல்மழையாகி விழுந்தேன். மிகவும் இளைத்தேன். என்னிலிருந்து பல துளிகளை இழந்தேன்.

அவளின் இருப்பு என் வாழ்கையை மாற்றியது. வீட்டின் இருண்ட தாழ்வாரங்களும், அழுக்கு இருக்கைகளும் சூரியனாலும் காற்றாலும் சப்தங்களாலும் பச்சை மற்றும் நீள நிற பிரதிபலிப்புக்களாலும் ஏராளமான சந்தோச செழிப்பு மிக்க முழக்கங்களாலும் எதிரொலிகளாலும் நிறைந்தன. ஒரு அலை என்பது எத்தனை அலைகள்? அவள் எப்படி ஒரு கடலை, பாறையை, அணைச்சுவரை, இதயத்தை, நெற்றியை தன் நுரைகளால் மகுடம் சூட்டுகிறாள்.

நிராகரிக்கப்பட்ட மூலைமுடுக்குகளும், தூசு தும்புகள் நிறைந்த இடங்களெல்லாமும் அவளின் மென்மையான கரங்களால் தீண்டப்பட்டன. எல்லாம் புன்னகைக்க துவங்கின. எல்லாம் பற்கள் மின்ன சிரித்தன. சூரியன் மகிழ்ச்சியோடு என் பழைய அறையில் நுழைந்து பிற வீடுகளை, நகரை, மாநிலத்தை, நாட்டை நிராகரித்து பல மணி நேரங்கள் என் வீட்டில் தங்கினான். இப்படி பதுங்கி நடப்பதை நேரம் கடந்த சில இரவுகளில் அதிர்ச்சியுடன் நட்சத்திரங்கள் பார்த்திருந்தன.

காதல் ஒரு விளையாட்டு. ஒரு முடிவற்ற படைப்பு. எங்கும் கடலாக, மணலாக, ஒரு படுக்கைவிரிப்பாக எப்போதும் புதிதாக இருந்தன. அவளை நான் அனைத்தால் பெருமிதத்தில் பூரித்து மிகவும் உயரமான நீர்த்தண்டைப்போல உயர்ந்தாள். விரைவில் நீறூற்றாக வெள்ளைச் சிறகுகளுடன் பூத்து அடர்சிரிப்போடு என் தலையிலும் முதுகிலும் வீழ்ந்து வெண்போர்வையால் என்னை மூடினாள். அல்லது என்முன்னே முடிவிலா அடிவானமாக விரிந்தாள்…..என்னையும் அவ்வாறாக மாறச்செய்தாள். சங்கீதத்தை போல அல்லது ராட்சத உதடுகளைப்போல முழுமையாகவும் வளைவு நெளிவுகளோடும் என்னை மூடினாள். மென் தொடுகைகளாலும் கிசுகிசுப்புக்களாலும் முத்தங்களாலும் அவளுடைய இருப்பு வந்துபோய்க்கொண்டிருந்தன. அவளின் நீரில் நுழைந்து முழுமையாக நனைந்து கண் இமைக்கும் நொடியில் மேல் எழுந்து உச்சமடைந்து தலைகிறுகிறுத்து அதிசயமாக தொங்கி கல்லை போல் கீழ் விழுந்து ஒரு இறகு உலர்ந்து மெல்லென இளைபாருவதைப்போல் உணர்ந்தேன். ஆயிரம் சந்தோஷ மென்னடிகளால் நொருங்கி விழிப்புற்று ஆயிரம் தாக்குதல்களால் புன்னகை பிடுங்கப்பட்டு நீரில் உறங்குவதற்கு ஈடில்லை வேறெதுவும்.

ஆனால் அவள் இருப்பின் மையத்தை என்னால் எட்டமுடியவில்லை. வலியின், இறப்பின் தெண்மையை என்றுமே தொட்டதில்லை. பெண்களை உறுதியற்றவர்களாகவும் புதிராகவுமாக்கும் அந்த ரகசிய தோற்றமும் எல்லாம் பிணைத்து துடித்து சமனாகி பின் மூர்ச்சிக்கும் அம்மின்சார புள்ளியும் அலைகளில் இல்லை. ஒரு பெண்ணை போன்றே இவளின் உணர்வுகள் நீர்த்திரைகளாக பரவுகிறது. ஆனால் அவை ஒரே மைய வட்டங்களாக அல்லாமல் கோணற்மானலாக, ஒவ்வொரு முறையும் பிற மண்டலங்களை தொடும்வரை நீள்கின்றது. இவளை காதலிப்பதென்பது நினைத்துப்பார்த்திராத மிகவொதுக்கானவற்றோடு தொடர்புற்று தூரத்து நட்சத்திரங்களுடன் துடிப்பதாகும். ஆனால் அவளின் மையம்….இல்லை, அவளுக்கு மையம் இல்லை. சுழற்காற்றில் இருப்பதுபோல் வெறுமனே வெட்ட வெளி மட்டுமே கொண்டவள் என்னை உள்ளிழுத்து திக்குமுக்காடவைக்கிறாள்.

அருகருகே படுத்து பரிமாறிக்கொண்டோம் நம்பிக்கைகளை, கிசுகிசுப்புக்களை, புன்னகைகளை. அனனத்துக்கொண்டோம். என் நெஞ்சில் பரந்து விரிந்தாள். என் காதுகளில் சிறிய நத்தைப்போல் பாடினாள். மிகவும் பணிவாகவும் வெளிப்படையாகவும் மாறினாள். சிறிய விலங்கைப்போல என் பாதங்களை பற்றிக்கொண்டாள் அமைதியான தண்ணீராக. அவளின் எல்லா எண்ணங்களையும் நான் வாசிக்கும்படியாக மிகவும் தெளிந்திருந்தாள். சில இரவுகளில் அவளின் தோள் பாஸ்பரஸால் போர்த்தப்பட்டிருப்பதை போலானாள், அவளை அனைப்பது இரவின் ஒரு துண்டில் பச்சைக்குத்திய நெருப்பை அனைப்பது போலிருந்தது. ஆனால் அவள் சமயங்களில் கருப்பாவும் கசப்பாகவும் கூட ஆனாள். எதிர்பாரா நேரத்தில் கத்தினால், துக்கித்தாள், சுருண்டுக்கொண்டாள். அவளின் உறுமல் சப்தங்கள் அண்டைவீட்டாரையெல்லாம் எழுப்பியது. இவளின் சப்தங்களை கேட்டு கடற்காற்று என் வீட்டின் கதவை பிராண்டியது. அல்லது மேல்கூரையில் உரக்க கத்தியது. மேகமூட்டமான நாட்கள் அவளை எரிச்சலூட்டியது. மேசை நாற்காலிகளை உடைத்தாள், மோசமான வார்த்தைகளை கூறினாள். என்னை பச்சை சாம்பல் நிற நுரைகளாலும் அவமானங்களாலும் மூடினாள். காறி உமிழ்ந்தாள், அழுதாள், தூற்றினாள், மிரட்டினாள். நிலவும், நட்சத்திரங்களும், உலகத்தின் பிற ஒளிகளுக்கேற்பவும் அவளின் தோற்றமும் குணமும் மாறிக்கொண்டே இருந்தன. நான் அற்புதமானவைகள் என்று நினைத்ததெல்லாம் மாறி ஒரு அபாயகரமான அலையை போலானாள்.

அவள் தனிமையை தவிர்த்தாள். வீடு முழுவதும் நத்தைகளும், சிப்பிகளும், அவளின் அதீத கோபத்தால் உடைக்கப்பட்ட சிறிய விசைப்படகும் இருந்தன. (இப்பிம்பங்களின் சுமைகள் ஒவ்வொரு இரவிலும் என்னை விட்டகன்று அவளின் கொடுமையான அல்லது மென்மையான சுழற்காற்றால் எல்லாவற்றுடன் சேர்ந்து நானும் மூழ்கினேன்.) எத்தனை சின்னஞ்சிறிய பொக்கிஷங்கள் அந்நேரத்தில் தொலைந்து போயின. ஆனால் என்னுடைய படகும், நத்தைகளின் மௌனமான பாடலும் போதுமானதாக இல்லை. மீன் கூட்டத்தை என் வீட்டிற்கு கொண்டுவர வேண்டியதாயிற்று. அவளின் மார்புகளை தடவிக்கொடுப்பதும், கால்களுக்கிடையில் உறங்குவதும், வண்ண நிறங்களை கொண்டு அவளின் முடிகளை பாராட்டுவதுமாக மீன்கள் அவளுடன் நீந்துவதை பொறாமையற்ற முறையில் நான் பார்த்துக்கொண்டிருக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

அம்மீன்களில் குறிப்பாக சில அருவருக்கத்தக்கதும் முரட்டுத்தனமிக்கதும் இருந்தன. மிகப்பெரிய நிலையான விழிகளுடனும் கூர்மையான இரத்தம்தாகித்த வாய்களுடனும் சிறியநீர்நிலைகளிலிருந்து (aquarium) வந்த சிறுபுலிகள் அவை. என் தோழி எதன் அடிப்படையில் அவர்களுடன் விளையாடுவதில் மகிழ்கிறாளென்றும், யாரை நான் நிராகரிக்க நினைக்கிறேனோ அவர்களுக்கு வெட்கமற்று ஏன் முக்கியத்துவம் கொடுக்க நினைக்கிறாள் என்றும் புரியவில்லை. மணிக்கணக்காக அக்கொடும் ஜீவன்களோடு ஒட்டிக்கொண்டிருக்கிறாள். ஒரு நாள் என்னால் தாளமுடியாமல் கதவை திறந்து அவற்றை பிடிக்கப் போனேன். வேகமாக என் கைகளை விட்டு வழுக்கிக்கொண்டு நழுவியபோது அவள் சிரித்து என்மேல் வேகமாக அலை அடித்து வீழ்த்தினாள். மூழ்கிக்கொண்டிருப்பதாக தோன்றியது. நீலநிறமாகி நான் மரணத்தை தொடும் நேரத்தில் என்னை கரையில் ஒதுக்கி முத்தமிடத்துவங்கினாள் எதுவும் தெரியவில்லை எனச்சொல்லி. நான் மிகவும் சோர்வானேன், களைப்புற்றேன், பைத்தியமாக்கப்பட்டேன். அதே சமயத்தில் அவள் என்னை கிளர்ச்சியூட்ட துவங்கியது என் கண்களை மூடச்செய்தது, அவளின் குரல் மிகவும் இனிமையாயிருந்தது, மூழ்கி சந்தோசமாக மரணிப்பதை பற்றி அவள் பேசினாள். நான் மீண்ட பிறகு பயம்கொள்ள துவங்கினேன், அவளை வெறுத்தேன்.

இத்தொடர்பை தவிர்த்தேன். என் நண்பர்களை சந்திக்க துவங்கினேன். என் பழைய நெருங்கிய உறவுகளை புதுபித்துக்கொண்டேன். என் பழைய தோழியை சந்தித்தேன். இந்த ரகசியத்தை யாரிடமும் சொல்லாமல் இருப்பதான வாங்குறுதியை அவளிடம் வாங்கிக்கொண்டு அலையுடனான எனது வாழ்க்கையை பற்றிச் சொன்னேன். ஒரு ஆணை காப்பாற்றுவதற்கான சாத்தியங்களை போன்று வேறெதுவும் ஒரு பெண்ணை நெகிழ்விப்பதில்லை. அவளின் எல்லா திறன்களையும் பயன்படுத்தினாள். ஆனால் ஒரு பெண்மணியால் அதுவும் ஒரு எல்லைக்குள்ளான உடலும் உயிரும் கொண்ட பெண்மணியால் என்ன செய்ய முடியும் நாளும் மாறிக்கொண்டிருக்கும் என் தோழியின் எதிரில் – அதுவும் எப்போதும் என்றும் தொடரும் உருமாற்றங்களில் அவளுக்கு நிகர் அவளாகவே இருக்கிறாள்.

பனிக்காலம் துவங்கியது. வான் சாம்பல்நிறம் பூண்டது. நகரங்களில் பனி பொழிந்து ஆலங்கட்டிமழை பெய்தது. என் தோழி இரவுகளில் அழுதாள். ஒரு வயதான மூதாட்டி மூலையில் ஒடுங்கிக்கிடப்பதை போல பகல் நேரங்களில் மௌனமாக மூலையில் முடங்கி தன்னை தனிமை படுத்திக்கொண்டு முணங்கினாள். மிகவும் சில்லென்றானாள், அவளுடன் உறங்குவதென்பது நடுக்கமுற்று, சிறிது சிறிதாக இரவுமுழுவதும் ரத்தம், எலும்பு, எண்ணம் எல்லாம் குளிரால் விரைப்புற செய்தது. கடந்து செல்ல முடியாமல் அமைதியற்று மிகவும் ஆழமானாள். அடிக்கடி அவளை விட்டு அகன்றேன். ஒவ்வொரு முறையும் பிரிவை நீடித்தேன். அவள் ஒரு மூலையில் படுத்து கத்தினாள், இரும்பான பற்களாலும் கொடும் நாவாலும் சுவற்றை பிராண்டி பொடியாக்கினாள். இரவுகளை துக்கங்களோடு என்மேல் பழிசுமத்தி கழித்தாள். பயங்கர கனவுகள் கண்டு சூரியனை பற்றியும் வெதுவெதுப்பான கடல்களை பற்றியும் பிணாத்தினால். மாதங்களாய் நீண்ட இரவுகளில் துருவங்கள் ஒரு மாபெரும் ஐஸ் கட்டியாக மாறி, கருநிற வானத்தின் கீழ் மிதப்பதாக கனவுகண்டாள். என்னை அவமானப்படுத்தினாள். எள்ளி நகைத்தாள். வீட்டை பரிகாசங்களிலும் மிரட்சியிலும் நிரப்பினாள். பாதாள குருட்டு பூதங்களை கூவி அழைத்தாள். மின்சாரம் பாயத்துவங்கியது, தொட்டதையெல்லாம் பொசுக்கினால். அமிலத்தால் நிரம்பினாள். தொட்டு செல்லும் அனைத்தையும் கரைத்தால். அவளின் இனிமையான அனைப்புகள் என்னை நெருக்கும் முடிச்சுகளாக மாறின. அவளின் உடல் பச்சையாக ஒடுங்கிவிரியுஞ்சக்தியோடு கருணையற்ற அடிகளாக கடுமையாக தாக்கியது. நான் தப்பி ஓடினேன். அக்கொடிய மீன் தனது குரூரமான புன்னகையால் என்னை பரிகசித்து சிரித்தது.

செங்குத்தான பாறைகளையும் பைன் மரங்களையும் கொண்ட மலையில் மெல்லிய குளிர்காற்றை சுவாசித்தேன் சுதந்திர எண்ணத்தைப்போல். மாதக் கடைசியில் வீடுதிரும்பினேன். தீர்மானித்திருந்தேன். பளிங்குகளாலான வெப்பமூட்டிக்கு அருகில் மிகவும் குளுமையாக இருந்தது. அனைந்திருந்த நெருப்பிற்கு அருகில் ஒரு ஐஸ் சிலையைக்கண்டேன். அவளின் சோர்வூட்டும் அழகில் நகரமுடியாமலானேன். பெரிய கோணிப்பையில் அவளை இட்டு என் தோளில் சுமந்தபடி தெருவிற்கு எடுத்து வந்தேன். புறநகர்பகுதியில் இருந்த ஒரு உணவு விடுதியில் பணிபுரியும் நண்பனுக்கு அவளை விற்றேன். அவன் உடனே அவளை சிறு துண்டுகளாக நறுக்கி குப்பிகளை குளுமையாக்க வைத்திருந்த வாளியில் பத்திரமாக நிரப்பினான்.

ஆங்கிலத்தில் வாசிக்க : My Life with the Wave by Octavio Paz

தமிழில் : நதியலை

நன்றி : உயிர்மை – நவம்பர் 2009

Read more...

தமிழ் மொழிபெயர்ப்பு 'மீட்சி'-யாளர் பிரம்மராஜன்

>> Monday, August 3, 2009

தமிழ் சிறுபத்திரிக்கைகள் மற்றும் புதிய சிந்தனைகளின் காலமாக கருதத்தக்க 80-களில் வெளிவந்த மிக முக்கிய சிறுபத்திரிக்கை மீட்சி. கலை மற்றும் கருத்துக்களை முன்னெடுக்கும் அறிவிப்புடன் வந்த மீட்சி, ஐரோப்பிய மற்றும் லத்தின் அமேரிக்க இலக்கியத்தை தமிழில் அறிமுகப்படுத்திய ஒரு முக்கிய சிற்றிதழ் ஆகும். ஒருவகையில் தமிழில் ஐரோப்பிய, லத்தின் அமேரிக்க இலக்கியங்களின் மொழிபெயர்ப்புகள் வழியாக மொழிபெயர்ப்பிற்கான ஒரு மீட்சியை ஏற்படுத்தியது அப்பத்திரிக்கை எனலாம். அதன் ஆசிரியர் பிரம்மராஜன் என தமிழ் இலக்கிய உலகில் அறியப்பட்ட ராஜாராம் பிரம்மராஜன். ஆங்கில இலக்கியப் பேராசிரியரான இவர் தமிழின் நவீனத்துவத்தின் மற்றும் நவீன கவிதையின் தவிர்க்கவியலா ஒரு படைப்பாளி ஆவார். டி.எஸ். எலியட் துவங்கி எண்ணற்ற கவிதைகளை இன்றுவரை தமிழில் மொழிபெயர்த்தும், அறிமுகப்படுத்தியும் பெரும்பணி ஆற்றிக்கொண்டிருப்பவர். தமிழ்க்கவிதையின் நவீனக்குரலை முன்வைத்து இவர் எழுதிய பல கவிதைகள் புதிய தமிழ்க் கவிஞர்கள் பலருக்கும் ஆதர்சமாக உள்ளது.

தருமபுரி அரசுக் கலைக் கல்லூரியில் ஆங்கிலத்துறைத் தலைவராக பணியாற்றிவருகிறார். அறிந்த நிரந்தரம், வலி உணரும் மனிதர்கள், ஞாபக சிற்பங்கள் மற்றும் புராதன இதயம் என்பன இவரது கவிதை நூல்கள் ஆகும். பல நவீன கவிதை உத்திகளையும், படிமங்களையும் தமிழுக்க அறிமுகப்படுத்தியவர் இவர். புதுக்கவிதை எனப்படும் நவீனக் கவிதைக்கான கோட்பாட்டு அடிப்படைகளை தந்த எஸ்ரா பவுண்டு பற்றி அறிமுகம், பதினைந்து ஐரோப்பிய நவீனத்துவவாதிகள் மற்றும் நாடோடி மனம் போன்ற முக்கியமான அறிமுக நூல்களை எழுதி உள்ளார். நவீன மனத்தின் இருத்தலியல் துயரங்களைச் சொன்ன ஆல்பர் காம்யூவின் எழுத்துக்கள், உலக கவிதைகள், உலக இலக்கிய முன்னோடியும், உலகின் தற்போதைய நவீன படைப்பாளிகள் பலரின் ஆதர்ச படைப்பாளியும் ஆன ஜார்ஜ் லூயிஸ் போர்ஹே கதைகள், நவீன நாவல்கள் பலவற்றை எழுதிய சிறந்த கதைசொல்லியான இடாலோ கால்வினோ கதைகள் மற்றும் ஐரோப்பிய இலக்கிய உலகை லத்தின்-அமேரிக்க மற்றும் கீழ்திசை நாடுகளின் இலக்கியங்கள், நம்பிக்கைகள் நோக்கி திருப்பிய காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் 'ஒரு நூறு வருசத்து தனிமை' (One Hundred years of Solitude) போன்றவை ஆங்கிலத்திலிருந்த தமிழில் இவரால் நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சமகால உலக கவிதைகள், வார்த்தையின் ரசவாதம் மற்றும் ஜென் மயில் இவரது சமீபத்திய படைப்புகள். ஐரொப்பிய மற்றும் லத்தின்-அமேரிக்க எழுத்தாளர்கள் பற்றிய இவரது சிறப்பான அறிமுகத்தையும், படைப்புகளையும் இவரது இந்த பதிவில் படிக்கலாம். பிரம்மராஜன் பற்றி தாஜ்

தொடர்ந்து தமிழில் நவீனக் குரலை, இலக்கியத்தை, கவிதையை ஒலித்துக் கொண்டிருக்கும் பிரம்மராஜன, தமிழ் இலக்கிய உலகிற்கு தனது மொழிபெயர்ப்புகள் மூலம் செய்துள்ள அளப்பரிய பணியை மனதில்கொண்டு எட்டுத்திக்கும் அவரது அறிமுகத்துடன் அவரது ஒரு மொழிபெயர்ப்பு கவிதையை முன்வைத்து தனது பயணத்தை தொடர்கிறது.

குறிப்பு - ஜமாலன் - 02/08/2009

************************************

ஸ்பரிசம்

எனது கைகள்
உனது உயிரின் திரைகளைத்திறந்து
உடுத்துகிறது உன்னை
இன்னும் கூடுதலாகும் நிர்வாணத்தில்
உனது உடல்களின் உடல்களைக் களைந்து
எனது கைகள்
கண்டுபிடிக்கின்றன உனது உடலுக்கென
வேறொரு உடலை
- பிரம்மராஜன்

Touch

My hands
open the curtains of your being
clothe you in a further nudity
uncover the bodies of your body
My hands
invent another body for your body

Octavio Paz

Translation by Eliot Weinberger

Read more...

எதற்காக இந்த வலைப்பதிவு...

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்“ என்கிற கனவினை மெய்ப்பிப்பதற்கான மொழிபெயர்ப்புகளுக்கான ஒரு வலைப்பதிவு இது.

மொழிபெயர்ப்புகள் பற்றி..

ஒரு மொழி தன்னை வளமானதாகவும் வனப்பானதாகவும் ஆக்கிக்கொள்ள மற்ற மொழிகளுடன் கொள்ளும் ஒரு உறவே மொழிபெயர்ப்பு.

  © Blogger template Digi-digi by Ourblogtemplates.com 2008

Back to TOP