அழைப்பு – ஓ. வி. விஜயன்

>> Wednesday, April 28, 2010

அவனது நினைவுகள் அந்த அழைப்பில் இருந்தே தொடங்கின, “போதவிரதா!”
அவன் பதில் கூறினான், “இதோ நான் வந்துவிட்டேன்!”

“போதவிரதா!”

தாய் அழைத்தார், தந்தை அழைத்தார், ஆசிரியர் அழைத்தார், தோழர்கள் அழைத்தனர். அப்போதெல்லாம் அவன் பதில் கூறினான், “இதோ வந்துவிட்டேன்!”

மனைவி அழைத்தாள், மகன் அழைத்தான், மகள் அழைத்தாள், அவருடைய மக்கள் அழைத்தனர். அந்த அழைப்புக்களனைத்தும் போதவிரதனின் அறிவை மேலும் பலப்படுத்தின – நான்!

ஒவ்வோர் இரவும் உறக்கத்திற்கு முன்பான கடைசி சிந்தையாக இது இருந்தது. இதுவே நான்.

இரவினைப் பகலும் பகலினை இரவும் பின்தொடர்ந்தன. நாட்கள் செல்லச்செல்ல இந்த சிந்தை போதவிரதனுக்கு பழக்கமான ஒன்றாக மாறியது.

இறுதியில் ஓர் இரவு மற்ற இரவுகளினின்று வேறுபட்டதென போதவிரதன் அறிந்தான். வெளியே புதரில் இருந்து அசாதாரணமான ஓர் குரல் அழைத்தது.

“போதவிரதா!”

போதவிரதன் பதிலேதும் கொடுக்கவில்லை.

இவ்விரவு விடியாதா என காத்திருந்தான். இரவு விடியவில்லை. புதரிடையே இருந்து அந்தக் குரல் மீண்டும் அழைத்தது.

சிலந்தி வலையினை போன்ற பட்டு நூல் போதவிரதனை சுற்றியது. அறுத்தெரிய முயன்று தோற்றான். புதரில் இருந்த அந்த அறிமுகமற்ற மனிதன் நூலினைப் பற்றி இழுக்க, தடுக்க வழியின்றி போதவிரதனும் புதரினுள் நுழைந்தான்.

நடுக்கத்துடம் போதவிரதன் அவனிடம் கூறினான் “இது நான் இல்லை”

அம்மனிதன் கனிவோடு சிரித்தான்.

“அதை புரியவைக்கவே உன்னை இங்கு அழைத்தேன்.”

**********

தமிழில் : சித்தார்த்

Read more...

சஷ்மலிற்கான வினோத இரவு – சத்யஜித்ரே

>> Monday, April 26, 2010

சாய்வு நாற்காலியில் அமர்ந்து நிம்மதிப் பெருமூச்செறிந்தார் சஷ்மல்.

மிகவும் உகந்த இடமான வடக்கு பீஹாரில் இருக்கும் காட்டு பங்களாவை தேர்வுசெய்திருந்தார். வேறு எந்த இடமும் அத்தனை நிம்மதியாய் அமைதியாய் பாதுகாப்பாய் இருந்திருக்க முடியாது. அறையும் கூட வெகு திருப்திகரமாய் இருந்தது. ராஜா காலத்து பழைய திடமான வீட்டுச்சாமான்களால் ஈர்க்கும்விதத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பெரிய கட்டிலில் தூய்மையான, துளியும் கறைகளில்லாத படுக்கை விரிப்புகள் சீராக விரிக்கப்பட்டிருந்தன. குளியலறையும் வசதியாகவும் சுத்தமாகவும் இருந்தது. திறந்திருந்த ஜன்னல் வழியாக குளிர் காற்று மென்மையாய் வீசியது, அதனுடன் சில்வண்டின் ரீங்காரமும் சேர்ந்துக்கொண்டது. மின்சாரம் தடைபட்டிருந்தும் கூட அஃதொரு பெரிய குறையாகத் தெரியவில்லை. கல்கத்தாவில் அடிக்கடி தடைபடும் மின்சாரம் மண்ணெண்ணெய் விளக்குகளின் அருகில் அமர்ந்து வாசிக்க அவருக்கு கற்றுத்தந்திருந்தது. அவர் அப்படி வாசிப்பதற்கு மிகவும் பழகிவிட்டிருந்தார். பங்களாவில் இருக்கும் விளக்குகள் சாதாரண கண்ணாடிகளை கொண்டிருந்தாலோ என்னமோ அவருக்கு தன் வீட்டிலுள்ள விளக்குகளை விட அது அதிக வெளிச்சம் தருவதைப்போலிருந்தது. மிகவும் பிடித்தமான துப்பறியும் நாவல்களை தன்னுடன் நிறைய கொண்டுவந்திருந்தார்.

அப்பங்களாவில் ஒரே ஒரு பணியாளைத் தவிர வேறு யாருமில்லை. யாரையும் சந்திக்கவோ பேசவோ அவசியமிருக்காதென்பதால் இதுவும் அவருக்கு மிகவும் உகந்ததாகவே இருந்தது. பத்து நாட்களுக்கு முன்பு கல்கத்தாவிலுள்ள ஒரு சுற்றுலாத்துறை அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்திருந்தார். நான்கு நாட்களுக்கு முன்பு அவர்களிடமிருந்து வந்த ஓர் கடிதம் பதிவை உறுதி செய்தது. அங்கிருந்து வேறெங்கேனும் மாற்றலாக வேண்டுமெனில் குறைந்தது மூன்று நாட்களேனும் அங்கு தங்கியிருக்கவேண்டும். தாராளமாக ஒருமாதம் தங்குமளவிற்கு தேவையான பணம் அவரிடமிருந்தது. கல்கத்தாவிலிருந்து 550 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் இவ்விடத்திற்கு தன் சொந்த காரில் தானே காரோட்டிக்கொண்டு வந்து சேர்ந்தார்.

சப்பாத்தி, தால் மற்றும் சில காய்கறிகளுடன் கோழிக்கறியும் கொண்ட இரவு உணவை சொன்னபடியே ஒன்பதரை மணிக்கு பணியாள் பரிமாறினார். உணவறை ராஜா காலத்து அம்சங்கள் நிறைந்ததாகவும் உணவு மேஜை, நாற்காலிகள், வேலைப்பாடுகள் மிகுந்த அலமாரிகள் அனைத்தும் ஆங்கிலேயர் காலத்தவையாகவும் தோன்றின.

இங்கு கொசுக்கள் உண்டா? என்று சஷ்மல் சாப்பிடும் போது வினவினார். கல்கத்தாவில் அவர் வசிக்குமிடத்தில் கொசுக்கள் அறவே கிடையாது. கடந்த பத்து ஆண்டுகளில் கொசுவலையை பயன்படுத்தும் அவசியமும் ஏற்படவில்லை. இங்கும் கொசுவலை பயன்படுத்தவேண்டிய அவசியம் இருக்காதெனில் அவருடைய ஆனந்தம் முழுமையடையும்.

குளிர் காலத்தில் கொசுக்கள் உண்டெனவும் இது ஏப்ரல் மாதமாதலால் கொசுத்தொல்லை இருக்காதென்றார் பணியாள். மேலும் தனக்கு கொசு வலை வைத்திருக்கும் இடம் தெரியுமென்றும் அவசியம் ஏற்பட்டால் எடுத்து இடுவதாகவும் கூறினார். காட்டுக்கு நடுவில் தாங்கள் இருப்பதால் கதவுகள் திறந்திருந்தால் நரியோ அல்லது வேறு விலங்குகளோ உள்நுழையக்கூடும் அபாயம் உள்ளதால் இரவில் கதைவுகளை சாத்திவிட்டு உறங்குவது நல்லதென்றார். உறங்கப்போவதற்கு முன்பு கதவுகளை மூடிவிடுவதென ஏற்கெனவே தீர்மானித்திருந்த சஷ்மல் சரியென்றார்.

சாப்பிட்டு முடித்த பின்னர் உணவறைக்கு வெளியிலிருந்த வராந்தாவிற்கு கையிலொரு டார்சுடன் வந்தார். காட்டை நோக்கி டார்ச் வெளிச்சத்தை அடித்தபோது அது ஷால் மரத்தின் அடிப்பாகத்தில் விழுந்தது. சுற்றிமுற்றி எதாவது விலங்கு தென்படுகின்றதாவென பார்த்தும் ஒன்றும் காணக்கிடைக்கவில்லை. ஓயாமல் ரீங்கரித்துக்கொண்டிருக்கும் சில்வண்டை தவிர முழு காடும் அமைதியில் மூழ்கி இருந்தது.

உணவறைக்கு திரும்பியவுடன் இப்பங்களாவில் பேய்கள் இல்லையென நம்புகிறேன் என்றார் சஷ்மல் சாதாரணமாக. பணியாள் மேஜையை சுத்தம் செய்துக்கொண்டிருந்தார். கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக அங்கு பணிபுரிவதாகவும் ஏராளமான நபர்கள் அக்காலக்கட்டங்களில் வந்து தங்கியிருந்ததாகவும் யாரும் இதுவரை பேயை பார்த்ததில்லையெனவும் சமயலறைக்கும் செல்லும் வழியில் நின்று புன்னகைத்தபடியே கூறினார். சஷ்மலின் மனதை இப்பதில் லேசாக்கியது.

உணவறையிலிருந்து இரண்டாவது அறை அவருடையது. சாப்பிட வரும்முன்னர் அறைகதவை மூடிவிட்டு வரவேண்டுமென அவருக்கு தோன்றவில்லை. திரும்பி வந்தப்பின்னர் திறந்து வைத்துவிட்டு வந்திருக்கக்கூடாதென தோன்றியது. மெலிதான வெள்ளை உடலில் ப்ரௌன் புள்ளிகளை கொண்ட ஒரு தெருநாய் எப்படியோ உள் நுழைந்துவிட்டிருந்தது.

ஏ வெளியே போ…ஷூ ஹூ வெளியே போ என கத்தினார். அறையின் ஓர் மூலையில் நகராமல் அவ்விரவை அங்கு கழிப்பதற்கான முடிவோடு அது பார்த்துக்கொண்டிருந்தது.

வெளியே போன்றேன்

இம்முறை நாய் தன் கோரப்பற்களை காட்டியது. சஷ்மல் பின்நகர்ந்தார். சிறுவனாக இருந்தபோது அவரின் பக்கத்து வீட்டுக்காரரின் மகன் வெறிநாயால் கடிக்கப்பட்டான். நாய்க்கடி நோயிலிருந்து அவனைக் காப்பாற்ற முடியவில்லை. சஷ்மலுக்கு அச்சிறுவன் துயறுற்றுத் தவித்த ஒவ்வொரு பயங்கர சம்பவமும் ஞாபகத்திலிருந்தது. உறுமும் நாயை எதிர்க்கொள்ள அவருக்குத் தைரியமில்லை. பக்கவாட்டில் அதை பார்த்தபடியே மீண்டும் வராண்டாவிற்கு வந்தார்.

பணியாளை அழைத்தார்.

‘சொல்லுங்க ஐயா’

‘ஒருநிமிடம் இங்கு வரியா?’

கையை துண்டால் துடைத்தபடியே வந்தார்.

‘என்னறையில் ஒரு நாய் உள்ளது, அதை வெளியில் துரத்துகிறாயா?’

‘நாயா? பணியாள் ஆச்சரியத்தில் வினவினார் .’

“ஆமாம். ஏன், இப்பகுதியில் ஒரு நாய் கூட இல்லையென்கிறாயா? இதில் இவ்வளவு ஆச்சரியப்பட என்ன இருக்கின்றது. என்னுடன் வா காண்பிக்கின்றேன்.”

பணியாள் சஷ்மலை சந்தேகமாக பார்த்துக்கொண்டே அறையில் நுழைந்தார். ‘எங்க ஐயா நாய்?’ சஷ்மல் அவரை தொடர்ந்து உள்நுழைந்தார். நாய் இருப்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை. பணியாளை அழைக்கச்சென்ற சில நிமிடங்களில் அது சென்றுவிட்டிருக்கின்றது. இருந்தும் உறுதிசெய்துக்கொள்ள பணியாள் கட்டிலிற்கடியில் பார்த்தார், குளியலறையையும் சோதித்தார்.

‘இல்லை ஐயா, நாய் எதுவும் இங்கில்லை’

‘இப்போது இல்லாமலிருக்கலாம், ஆனால் சில நிமிடங்களுக்கு முன்பு இருந்தது.’

சஷ்மலால் கொஞ்சம் அசட்டுத்தனமாக உணராமல் இருக்கமுடியவில்லை. பணியாளை அனுப்பிவிட்டு மீண்டும் சாய்வு நாற்காலியில் அமர்ந்தார். சிகரெட்டை புகைத்து முடித்த பின்னர் ஜன்னல் வழியாக மிச்சமிருந்த துண்டை எரிந்துவிட்டு கைகளை உயர்த்தி சோம்பல் முறிக்கும் போது நாய் சென்றிருக்கவில்லை என்பதை கவனித்தார். அல்லது சென்றிருந்தாலும் மீண்டும் வந்து அதே மூலையில் நின்றுக்கொண்டிருக்கின்றது.

அவருக்கு எரிச்சலூட்டியது. அதை அங்கு தங்க அனுமதித்தால் இரவில் அவர் பாட்டாவில் வாங்கிய புதிய செருப்பை மென்று தூள்தூளாக்கிவிடும். உபயோகிக்கப்படாத செருப்பிற்கு நாய் கொண்டிருக்கும் மோகத்தை பற்றி நன்கு அறிவார் சஷ்மல். தரையிலிருந்த செருப்பை எடுத்து மேஜையில் வைத்தார்.

இப்போது அறையில் அவருடன் இன்னொரு உயிரினமும் சேர்ந்தாயிற்று. பரவாயில்லை தற்சமயம் இருந்துவிட்டு போகட்டும். அவர் படுக்கச்செல்லுமுன் மீண்டும் அதை வெளியில் துரத்த முயற்சிக்கலாம்.

மேஜையில் வைத்திருந்த இந்தியவிமானப்பையிலிருந்து நாவலை எடுத்து மடக்கிய பக்கத்திலிருந்து மீண்டும் வாசிக்க புத்தகத்தை திறந்தபோது நாய் இருந்த எதிர் மூலையில் தற்செயலாக சஷ்மலின் பார்வை சென்றது. அவருக்கு தெரியாமல் மற்றொரு உயிரினமும் அறையில் நுழைந்துவிட்டிருக்கின்றது.

புலியை போன்றே உடல் முழுவதும் கோடுகள் கொண்ட பூனை அது. ஒரு பந்தைப்போன்று சுருண்டு மங்கிய மஞ்சள் கண்களுடன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தது. இதே போன்றதொரு பூனையை வேறு எங்கு பார்த்திருக்கின்றார்?

ஆம்!. பக்கத்து வீட்டிலிருந்த குதூஸ் வளர்த்த ஏழு பூனைகளில் ஒன்று இதைபோன்றே இருக்கும். அவ்விரவில் எல்லாம் வேகமாக நினைவிற்கு வந்தது சஷ்மலிற்கு.

ஆறு மாதத்திற்கு முன்பு தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்த பூனையின் பெரும் ஓலத்தால் எழுப்பப்பட்ட அன்று ஏற்கெனவே அவரின் தொழில் துணைவர் அதீருடன் வாக்குவாதம் முற்றியதால் பயங்கர கடுப்பில் இருந்தார். இவரின் செயல்களை அம்பலப்படுத்த காவல்துறையிடன் செல்லப்போவதாக அதீர் பயமுறுத்தவே அது பெரும் சண்டையாகிவிட்டிருந்தது. அதனால் சஷ்மலுக்கு அன்றிரவு நிம்மதியாக உறங்கமுடியவில்லை. பூனையும் ஓலமிட்டுக்கொண்டடிருந்தது. அரைமணிநேர சகிப்பிற்கு பின்பு தன் பொறுமையை இழந்ததால் காகித கனத்தை மேஜையிலிருந்து எடுத்து சத்தம் வந்த திசை நோக்கி ஜன்னல் வழியாக வீசி எறிந்தார். சத்தம் அடங்கியது.

அடுத்தநாள் காலை குதூஸின் வீட்டிலிருந்த அனைவரும் கூச்சலிட்டனர். யாரோ அவர்களிடமிருந்த உடலில் வரிகள் கொண்ட ஆண் பூனை ஒன்றை கொடூரமான முறையில் கொலை செய்து விட்டார்கள் என்று சொல்லப்பட்டது. பூனையின் கொலையா? சஷ்மலுக்கு வேடிக்கையாக இருந்தது. இதை கொலை என்று சொன்னால் பிறகு தினம்தினம்தான் மக்கள் கொலை செய்து கொண்டுள்ளனர் அதை பற்றிய பிரக்ஞையே இல்லாமல். பலவருடங்களுக்கு முன் நடந்த வேறொரு சம்பவத்தின் நினைவும் வந்தது. அப்போது அவர் கல்லூரியின் விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்தார். ஒரு நாள் அவரின் அறைச்சுவரில் எறும்புகள் நீண்ட வரிசையில் ஊர்ந்துக்கொண்டிருந்தன. சஷ்மல் செய்திதாளை எடுத்து ஒரு முனையில் பற்றவைத்து அதை அப்படியே எறும்புகளின் வரிசையின் மேல் இழுத்தார். பார்த்துக்கொண்டிருக்கும்போதே அச்சிறு எறும்புகள் கருகி தரையில் விழுமுன்னரே மடிந்தன. அதை கொலை என்று சொல்லிவிடமுடியுமா?

சஷ்மல் கைகடிகாரத்தை பார்த்தார். பத்துமணியாவதற்கு பத்து நிமிடங்கள் இருந்தன. கடந்த ஒருமாதமாகவே தொடர்ந்து ஏற்பட்ட தலைவலி இப்போது இல்லாமல் போயிருந்தது. எப்போதுமே உடல் உஷ்ணமாக உணர்ந்ததால் ஒருநாளிற்கு மூன்று முறை குளித்துக்கொண்டிருந்தார். அவ்வுணர்வும் இப்போது காணமால் போயிருந்தது.

புத்தகத்தை பிரித்து வாசிக்க ஆரம்பித்தார். இரண்டு வரி வாசிப்பதற்குள்ளாகவே அவரின் பார்வை மீண்டும் பூனையின் மேல் விழுந்தது. எதனால் அவரை அது அத்தனை தீவிரமாக முறைத்துக்கொண்டிருக்கின்றது?

அவருடைய இஷ்டம்போல் அவ்விரவை கழிக்க இயலாதென புரிந்தது. ஒரே நல்ல விஷயம் அவருடன் தங்கியிருக்கும் மற்ற இரண்டு ஜீவன்களும் மனிதர்கள் அல்ல. அவை சத்தம் போடாமல் ஒழுங்காக நடந்துக்கொண்டால் அமைதியான உறக்கம் வாய்க்காமல் போவதற்கான சாத்தியங்களில்லை. உறக்கம் அவருக்கு மிக முக்கியமான ஒன்று. பல காரணங்களால் கடந்த சில நாட்களாக அவர் சரியாக உறங்கியிருக்கவில்லை. நவீன முறைகளான தூக்கமாத்திரைகளை விழுங்கும் பழக்கத்தில் சஷ்மலுக்கு நாட்டமில்லை.

விளக்கை எடுத்து கட்டிலிற்கு அருகிலிருந்த சிறிய மேஜையில் வைத்தார். சட்டையை கழட்டி மாட்டிவிட்டு கொஞ்சம் தண்ணீர் அருந்திவிட்டு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டே படுக்கச்சென்றார். கட்டிலின் காலுக்கருகில் அமர்ந்திருந்த நாய் இப்போது எழுந்து நின்றது. அதன் கண்கள் சஷ்மலை பார்த்தபடியே இருந்தன.

நாயின் கொலையா?

சஷ்மலின் இதயம் ஒரு துடிப்பை தவரியது. ஆமாம் ஒருவகையில் கொலைதான். அச்சம்பவம் அவருக்கு நன்றாக நினைவிலிருந்தது. 1973ஆம் ஆண்டு காரை வாங்கி சில நாட்களே ஆகியிருந்தன. எப்போதுமே அவர் ஒரு முரட்டுத்தனமான வேகத்துடன் காரோட்டுபவர். கல்கத்தாவில் மக்கள் அதிகமாக இருக்கும் நெரிசலான சாலைகளில் வேகமாக கார் ஓட்ட முடியாததால் புறநகர் பகுதிக்கு சென்றுவிடுவார். வேக மானியின் முள் தானாக உயரும். மணிக்கு எழுபது மைல் வேகத்திலேனும் செல்லாவிட்டால் அவருக்கு திருப்தியாக இருக்காது. கோலகாட் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அன்றும் அதே வேகத்தில் சென்றுக்கொண்டிருந்தபோது ஒரு நாய் அவர் காரின் இடையில் சிக்கியது. அது வெண்ணிற உடலில் பரௌன் புள்ளிகளை கொண்ட சாதாரண தெருநாய்.

என்ன நிகழ்ந்ததென்று அறிந்தும் அதை சிறிதும் பொருட்படுத்தாமல் சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து அச்சம்பவம் நினைவில் உறுத்திக்கொண்டிருந்தது. அதனால் என்ன பரவாயில்லையென்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டார். அது ஒரு தெரு நாய் தானே. எலும்புகளை எண்ணிவிடுமளவுக்கு ஒல்லியாக இருந்தது. அது உயிரோடு இருந்துதான் என்ன பயன்? யாருக்கு என்ன நன்மை செய்திருக்கபோகிறது? தன்னிலிருந்த சிறு குற்ற உணர்வையும் அழித்துவிட அப்போது நினைத்துக்கொண்டதையெல்லாம் இப்போது ஞாபகப்படுத்திக்கொண்டார். அப்போது அவரால் அதிலிருந்து தப்பிக்க முடிந்தது. ஆனால் இன்றிரவு எல்லாம் தீடீரென்று நினைவிற்கு வந்து அவரின் மன அமைதியை முழுவதுமாக குலைத்தது.

இதுவரை எத்தனை விலங்குகளை அவர் வாழ்நாளில் கொன்றிருக்கிறார்? அவை அனைத்தும் இங்கு வந்து விடப்போகின்றதா? அப்படியானால் ஒரு வினோத பெயர் தெரியாத கருப்புப் பறவையை சிறுவயதில் தன் முதல் விளையாட்டுத்துப்பாக்கியால் கொன்றது? அப்பறவையின் பெயர் கூட அவருக்கு தெரியாது. பிறகு அவரின் மாமா வீட்டிற்கு சென்றபோது ஒரு பெரிய கல்லை பயன்படுத்தவில்லையா? ஆமாம் அதுவும் அங்கு ஆஜராகியிருக்கின்றது.

ஜன்னல் பக்கமாக தன் பார்வையை செலுத்திய போது சஷ்மல் பாம்பை கண்டார். மென்மையான வளைந்து நெளியும் உடல் கொண்ட எட்டடி நீளமுள்ள நாகப் பாம்பு ஜன்னல் வழியாக உள் நுழைந்து சுவரை ஒட்டிப் போடப்பட்டிருந்த மேஜையின் மேல் ஏறிக்கொண்டிருந்தது. சாதாரணமாக பாம்புகள் ஏப்ரல் மாதத்தில் தென்படாதெனினும் இது வந்திருக்கின்றது. மூன்றில் இரண்டு பகுதி மேஜையில் சுருண்டும் ஒரு பகுதி தலை தூக்கி படமெடுத்தது. விளக்கின் வெளிச்சத்தில் அதன் நிலையான கொடுங்கண்கள் பிரகாசித்தன.

ஜார்கிரமிலிருந்த அவரின் மாமா வீட்டில் சஷ்மல் இதுபோன்றதொரு பாம்பின் தலையில் கல்லைப் போட்டு கொன்றிருக்கிறார். யாருக்கும் எவ்வித கெடுதலும் செய்யாத பாம்பு அக்குடும்பத்தினர் அனைவரும் நன்கு அறிந்த மூத்த உறுப்பினராக இருந்தது.

தன் நாக்கு உலர்ந்துவிட்டிருந்ததை உணர்ந்தார் சஷ்மல். பணியாளை அழைக்கக்கூட நா எழவில்லை.

வெளியில் சில்வண்டுகளின் ரீங்காரம் அடங்கிவிட்டிருந்தது. எங்கும் அச்சுறுத்தும் அமைதி சூழ்ந்திருந்தது. கைகடிகாரத்தின் முற்கள் அமைதியாக நகர்ந்துக்கொண்டிருந்தன அல்லது அதன் ஓசையையும் அவர் கேட்டிருக்கக் கூடும். ஒருநிமிடம் கனவு காண்கிறோமோவென நினைத்தார். அவருக்கு சமீபகாலமாக இப்படி தோன்றுகின்றது. படுக்கையில் படுத்துக் கொண்டிருந்த போதிலும் வேறு எங்கோ அறியாத மொழியில் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் அந்நிய மக்களுக்கு மத்தியில் இருப்பதை போல் உணரந்தார். இதுவரை அந்த வினோத எண்ணங்கள் சில நொடிகளுக்கு மேல் நீடித்ததில்லை. ஒருவர் உறங்கச்செல்வதற்கு முன் இதுபோன்ற நிகழ்வுகளையெல்லாம் கற்பனை செய்துக்கொண்டால் அதற்கான சாத்தியங்கள் உண்டு.

ஆனால் இன்று காண்பது கனவில்லை. நிச்சயமாக அவர் முழித்துக்கொண்டிருப்பதை முன்நிமிடத்தில்தான் தன்னை கிள்ளிப்பார்த்து உறுதிபடுத்திக்கொண்டார். என்னவெல்லாம் இப்போது நடக்கின்றதோ அவையெல்லாம் நிஜமாகவும் காரணத்தோடும் தான் நடக்கின்றன. இவையெல்லாம் அவருக்கு மட்டுமே உரித்தானது.

அசையாமல் ஒரு மணி நேரம் படுக்கையில் அப்படியே படுத்திருந்தார். சில கொசுக்கள் வீட்டினுள் பிரவேசித்தன. அவரை கடிக்காமல் கட்டிலைச் சுற்றி மொய்த்துக்கொண்டிருந்தன. எத்தனைக் கொசுகளைத் தன் வாழ்நாளில் கொன்றிருப்பார். எவ்வளவென்று யாரால் சொல்ல முடியும்?

ஒரு மணி நேரத்திற்கு பிறகு எந்த விலங்கும் எவ்வித அபாயத்தையும் விளைவிக்கும் அறிகுறி இல்லாததால் சஷ்மல் இளைப்பாற ஆரம்பித்தார். இப்போது அவர் தூங்க முயற்சிக்க கூடும்.

விளக்கின் திரியை சிறிதாக்க கையை நீட்டிய போது சத்தம் கேட்டது. நுழைவாயிலிலிருந்து வராந்தாவிற்கு வரும் படிகள்வரையுள்ள பாதையில் கூழாங்கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. அந்த வழியாக யாரோ நடந்து வருகிறார்கள். இம்முறை நான்கு கால்கள் கொண்ட விலங்கில்லை. மாறாக இரண்டு கால்களைக் கொண்டது.

இப்போது சஷ்மல் தனக்கு பயங்கரமாக வேர்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தார். இதயம் வேகமாக துடிப்பதையும் கேட்க முடிந்தது.

நாயும் பூனையும் அவரையே பார்த்துக்கொண்டிருந்தன. கொசுவும் மொய்ப்பதை நிறுத்தவில்லை. விழிபுலனுக்கு புலப்படாத செவிபுலனுக்கும் எட்டாத பாம்பாட்டியின் மகுடிக்கு மயங்கி ஆடுவதைப்போன்று பாம்பும் படமெடுத்து ஆடிக்கொண்டிருந்தது.

காலடி ஓசை வராண்டாவை அடைந்தது. அருகில் வந்துவிட்டனர். சிறிய கருப்புப்பறவை ஜன்னலின் வழியாக உள்நுழைந்து மேஜையில் அமர்ந்தது. அன்று துப்பாக்கியால் சுட்ட போது, அமர்ந்திருந்த சுவரின் அருகிலிருந்த பூங்காவின் தரையில் விழுந்து இறந்த அதே பறவைதான் இது.

அறைக்கு வெளியில் காலடி ஓசை வந்தடங்கியது. அது யாரென்று சஷ்மலுக்கு தெரியும். அதீர். அவரின் தொழில் துணைவர் அதீர் சக்கரவர்த்தி. ஒருகாலத்தில் நண்பர்களாக இருந்தவர்கள் சமீபகாலமாக ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதைக்கூட நிறுத்திக்கொண்டனர். நேர்மையற்ற வழிகளில் சஷ்மல் தொழில் நடத்தும் முறைகள் அதீருக்கு பிடிக்கவில்லை. காவல் துறைக்கு புகார் கொடுத்துவிடப்போவதாக மிரட்டினார். தொழிலில் நேர்மையாக நடந்துக்கொள்வது பைத்தியக்காரத்தனம் என்றார் சஷ்மல். அதீரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதீரின் இத்தகைய அறங்களை பற்றி முன்பே அறிந்திருந்தால் சஷ்மல் அவரை துணையாகவே சேர்த்துக்கொண்டிருக்க மாட்டார். அதீர் அவருக்குப் பரம எதிரியாக மாறிவிட்டதை உணர்ந்துக்கொள்ள அதிக நாள் எடுக்கவில்லை. எதிரி என்றால் அழிக்கப்படவேண்டியவன் தானே. சுருக்கமாக அதைதான் சஷ்மலும் செய்தார்.

முந்தினநாள் இரவு அதீரின் வீட்டில் இருவரும் நேரெதிராக அமர்ந்திருந்தனர். தன் தொழில் துணைவரை கொலை செய்யும் நோக்கத்துடன் சஷ்மல் பாக்கெட்டில் துப்பாக்கியுடன் வந்திருந்தார். சில அடிகள் தள்ளி அதீர் அமர்ந்திருந்தார், மீண்டுமொருமுறை விவாதித்தனர். அதீரின் குரல் உயர்ந்தபோது சஷ்மல் தன் துப்பாக்கியால் அவரை சுட்டார். எப்போதோ தனக்கு நெருக்கமான நண்பனாக இருந்த அதீரின் முகம் நினைவிலாடியபோது அவரால் புன்னகைக்காமல் இருக்கமுடியவில்லை. அவர் கையில் துப்பாக்கியிருக்குமென அதீர் கொஞ்சம் கூட எதிர்ப்பாக்கவேயில்லை.

சம்பவம் நடந்த பத்து நிமிடத்திற்குள்ளாகவே சஷ்மல் காரை கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டார். அந்த இரவை பர்த்யான் ரயில் நிலைய காத்திருப்பு அறையில் கழித்துவிட்டு இன்று காலையில் ஏற்கெனவே பதிவு செய்து வைத்திருந்த இக்காட்டுபங்களாவை நோக்கி தன் பயணத்தை தொடர்ந்தார்.

யாரோ கதவை தட்டினார்கள். ஒருமுறை, இரண்டுமுறை, மூன்றாவது முறையாக.

சஷ்மலால் கதவை வெறித்துப்பார்க்க மட்டுமே முடிந்தது. அவரின் முழு உடலும் நடுங்கத் தொடங்கியது. மூச்சு முட்டியது. ‘கதவை திற, அதீர் வந்திருக்கிறேன், கதவை திற’.

முந்தின நாள் துப்பாக்கியால் சுடப்பட்ட அதே அதீர். அங்கிருந்து கிளம்பும் போது அதீர் இறந்துவிட்டிருப்பாரென்று சஷ்மலுக்கு அவ்வளவு உறுதியாக தெறிந்திருக்கவில்லை. ஆனால் இப்போது சந்தேகமே இல்லை. அந்த நாய், பூனை, அந்த பாம்பு, பறவை இப்போது அதீர் கதவிற்கு வெளியில் நிற்கிறார். மற்ற எல்லா ஜீவன்களும் இறப்பிற்கு பின்னர் அங்கு ஆஜராகியிருக்கின்றன என்றால் அதீரும் இறந்துவிட்டதாக எண்ணுவது நியாயமானதே.

திரும்பவும் யாரோ கதைவை தட்டினார்கள். தட்டிக்கொண்டே இருந்தார்கள்.

சஷ்மலின் பார்வை மங்கியது. அப்படியிருந்தும் நாய் அவரை நோக்கி வருவதை கண்டார். பூனையின் கண்கள் அவரின் கண்களுக்கு வெகு அருகில் இருந்தன. பாம்பும் அவரை நோக்கி வரும் எண்ணத்தில் மேஜையிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தது. பறவையும் பறந்து வந்து அவரின் கட்டிலில் அமர்ந்தது. அவருடைய வெள்ளை பனியனை மறைத்தபடி நெஞ்சம் முழுவதும் எண்ணில் அடங்கா எறும்புகள் ஊர்ந்துக்கொண்டிருந்தன.

இறுதியில் இரண்டு ஏட்டுகள் கதவை உடைக்க வேண்டியதாயிற்று.

அதீர் கல்கத்தாவிலிருந்து காவல் அதிகாரியை அழைத்து வந்திருந்தார். சஷ்மலின் காகிதங்களுக்கு இடையில் சுற்றுலாத் துறையிலிருந்து வந்த கடிதம் காணக்கிடைத்தது. அதிலிருந்துதான் காட்டு பங்களாவில் அவர் பதிவு செய்துவைத்திருப்பதை அறிந்தார்.

சஷ்மல் படுக்கையில் இறந்திருப்பதை அறிந்தவுடன் இன்ஸ்பெக்டர் சமந்த் அதீரின் பக்கம் திரும்பி ‘உங்கள் தொழில் துணைவர் பலகீனமான இதயம் கொண்டவரா?’ என்று கேட்டார்.

‘அவரின் இதயம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் சமீபகாலமாக அவரின் நடத்தை எனக்கு விசித்திரமாக தோன்றியது. எந்த ஒரு சாதாரண மனிதனும் கூட்டுப் பணத்தை கையாடியிருக்க மாட்டான், என்னை ஏமாற்றவும் முயற்சித்திருக்க மாட்டான் அவர் செய்ததை போல. அவரின் கையில் துப்பாக்கியைப் பார்த்தபோது நிஜமாகவே கிறுக்கனாகிவிட்டார் என்பது உறுதியானது. உண்மையைச் சொல்லவேண்டுமானால் அவர் துப்பாக்கியை கையில் எடுத்த போது என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை. அவர் சுட்டுவிட்டு ஓடிய பிறகு அந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவர பத்து நிமிடத்திற்கு மேல் ஆனதெனக்கு. அதற்கு பிறகு தான் அந்தக் கிறுக்கனை காவல் துறையிடம் ஒப்படைக்கவேண்டும் என்று முடிவெடுத்தேன். இன்று நான் உயிரோடிருக்கிறேனென்றால் அது சந்தர்ப்பவசமாகத்தான்.’

ஆனால் எப்படி இத்தனை அருகிலிருந்தும் அவர் குறி தவறினார் என்று சமந்த் கறுவினார்.

அதீர் புன்னகைத்தார், ‘சாகவேண்டிய நேரம் வராமல் எவராலும் எப்படி சாக முடியும்? தோட்டா என்னை துளைக்காமல் இருக்கையின் ஓர் மூலையில் பாய்ந்தது. எத்தனை பேரால் இருட்டில் சரியாக குறிபார்க்க முடியும்? அவர் துப்பாக்கியை எடுத்த நிமிடத்தில் எங்கள் குடியிருப்புப் பகுதியில் மின்தடை ஏற்பட்டு எல்லா விளக்குகளும் அணைந்தன!

(1979)

பெங்காலியில் : சத்யஜித்ரே

ஆங்கிலம் வழி தமிழில் : நதியலை

From the book : The Best of Satyajit Ray, First Edition : 2001

Read more...

பதில் சொல்லுங்கள் அம்மா

>> Wednesday, April 21, 2010

பதில் சொல்லுங்கள் அம்மா ....


பார்ட்டிக்கு போனேன் அம்மா
நீ சொன்னதை மறக்கவே இல்லை
குடிக்க வேண்டாம் என்று சொன்னாய் என்று
சோடா மட்டும் குடித்துக் கொண்டேன்


நீ சொன்னதை போலவே அம்மா ,
பெருமையாய் இருந்தது எனக்கு.
குடித்து விட்டு ஓட்டவில்லை அம்மா
செய் ,என்று பிறர் தூண்டிய போதும்


சரியாகவே செய்தேன் தெரியும் அம்மா,
நீ சரியாகவே சொல்வாய்,அதுவும் தெரியும்
பார்ட்டி முடிந்து கொண்டிருக்கிறது அம்மா
எல்லாரும் கலைந்து கொண்டிருக்கிறார்கள்


காருக்குள் ஏறும் போது தெரியும் அம்மா,
பத்திரமாய் வந்து சேர்வேன் என்று
பொறுப்பும் அன்பும் சொல்லி
எனை நீ வளர்த்தது அப்படி அம்மாஓட்டத் துவங்கிவிட்டேன் அம்மா,
ஆனால் சாலைக்குள் வந்த போது
அடுத்த கார் என்னை கவனிக்காமல்
இடியாக மோதிக் கடந்தது


ரோட்டோரம் கிடந்த போது அம்மா
போலீஸார் பேசிக் கொண்டார் ,
"அடுத்த காரிலிருந்தவன் குடித்திருக்கிறான் "
ஆனால் விலை கொடுக்கப்போவது நான்தான்


நான் இறந்து கொண்டிருக்கிறேன் அம்மா
நீசீக்கிரம்வரமாட்டாயாஎன்றுஏங்கிக்கொண்டே..
இது எப்படி எனக்கு நடக்கலாம் அம்மா ?
வெறும்பலூனைப்போல்வெடித்ததுஎன்வாழ்க்கை


எனை சுற்றிலும் எங்கும் ரத்தம் அம்மா,
அதில் அதிகம் என்னுடையது தான் .
டாக்டர் சொன்னதை கேட்டேன் அம்மா
சிறிது நேரத்தில் நான் இறந்து விடுவேன்.


இதை மட்டும் உன்னிடம் சொல்ல வேண்டும்அம்மா,
நான் சத்தியமாக குடிக்கவில்லை .
அவர்கள் குடித்திருந்தார்கள் அம்மா
அவர்கள் எதையும் நினைக்கவில்லை


நான்போனபார்ட்டிக்கேகூடஅவனும்வந்திருக்கக் கூடும்
ஒரே ஓர் வித்தியாசம் தான்
அவன் குடித்தான்
நான் இறக்கப் போகிறேன் .


எதற்காக குடிக்கிறார்கள் அம்மா?
வாழ்க்கை வீணாக போகக் கூடுமே.
அம்மா, வலிகள் உணர்கிறேன் இந்நேரம் ,
கத்திப் போல் கூர்மையாக


என்னைமோதியவன்நடந்துகொண்டிருக்கிறான் அம்மா
இது கொஞ்சமும் நியாயமில்லை
இங்கே நான் இறந்து கொண்டிருக்கிறேன்
வெறித்துப்பார்க்கிறான் அவன், வேறு என்னசெய்ய முடியும்


தம்பியை அழ வேண்டாம்என்றுசொல்லுங்கள் அம்மா,
அப்பாவை தைரியமாக இருக்கசொல்லுங்கள் .
நான் சொர்க்கம் சேர்ந்த பின்னால்
"நல்ல பையன்" என்று என்கல்லறையில் எழுதி வையுங்கள்.


எவரேனும்அவனுக்குசொல்லியிருக்கவேண்டும் அம்மா
குடித்து விட்டு ஓட்ட வேண்டாம் என்று
எவரேனும் சொல்லிமட்டுமிருந்தால் அம்மா
நான் இன்னமும் உன் மகனாயிருந்திருப்பேன்


என் மூச்சடைக்கிறது அம்மா
ரொம்ப பயமாய் இருக்கிறது
எனக்காக அழாதே அம்மா..
எனக்காக எப்போதும் நீ இருந்தாய் ...

ஒரே ஒரு கேள்வி தான் அம்மா
நான் விடை பெற்றுக் கொள்ளும் முன்னால்
குடித்துவிட்டு ஒட்டியது நானில்லை
இறப்பது மட்டும் ஏன் நானாகவேண்டும் ?

தமிழில் : பூங்குழலி


I went to a party Mom,
I remembered what you said.
You told me not to drink, Mom,
So I drank soda instead.


I really felt proud inside, Mom,
The way you said I would.
I didn't drink and drive, Mom,
Even though the others said I should.


I know I did the right thing, Mom,
I know you are always right.
Now the party is finally ending, Mom,
As everyone is driving out of sight.


As I got into my car, Mom,
I knew I'd get home in one piece.
Because of the way you raised me,
So responsible and sweet.


I started to drive away, Mom,
But as I pulled out into the road, The other car didn't see me, Mom,
And hit me like a load..


As I lay there on the pavement, Mom,
I hear the policeman say,
"The other guy is drunk," Mom,
And now I'm the one who will pay.


I'm lying here dying, Mom....
I wish you'd get here soon.
How could this happen to me, Mom?
My life just burst like a balloon.


There is blood all around me, Mom,
And most of it is mine.
I hear the medic say, Mom,
I'll die in a short time.


I just wanted to tell you, Mom,
I swear I didn't drink.
It was the others, Mom.
The others didn't think. He was probably at the same party as I.
The only difference is, he drank
And I will die.


Why do people drink, Mom?
It can ruin your whole life.
I'm feeling sharp pains now.
Pains just like a knife.


The guy who hit me is walking, Mom,
And I don't think it's fair.
I'm lying here dying
And all he can do is stare.

Tell my brother not to cry, Mom.
Tell Daddy to be brave.
And when I go to heaven, Mom,
Put "GOOD BOY " on my grave.


Someone should have told him, Mom,
Not to drink and drive.
If only they had told him, Mom, I would still be alive.


My breath is getting shorter, Mom.
I'm becoming very scared.
Please don't cry for me, Mom.
When I needed you, you were always there.


I have one last question, Mom.
Before I say good bye.
I didn't drink and drive,
So why am I the one to die?

பிகு : இந்த கவிதையை ஷன்வேல் என்ற சகோதரர் எனக்கு அனுப்பி மொழிபெயர்க்கும் படி கேட்டுக் கொண்டார். ஆங்கிலக் கவிதையை எழுதியது யார் எனத் தெரியவில்லை. இணையத்தில் தேடிய போது இதே கவிதை பல தளங்களில் சிற்சில மாற்றங்களுடன் இருந்தது. ஆனால் எழுதியது யார் என அறிய முடியவில்லை.

Read more...

ஓ.வி. விஜயன் – அறிமுகம்

>> Monday, April 19, 2010



ஓ. வி. விஜயன் (ஜூலை 2, 1930 - மார்ச் 30, 2005)




பரிணாம வளர்ச்சி என்பது எந்த ஒரு துறையிலும் நிகழ்வது தான். முன்னமே இருக்கும் நிலையை அடித்தலமாய் கொண்டு, அதை ஆதரித்தும் மறுத்தும் அதன் நீட்சியாய் வளர்ந்தபடி இருக்கும் அந்த துறை. ஆனால் எப்போதாவது ஒரு முறை ஒருவர் வந்து அந்த துறையை சட்டென நெடுந்தூரம் அழைத்துச்சென்றுவிடுவார். அப்போதிலிருந்து, அந்நிகழ்விற்கு முன் / அந்நிகழ்விற்கு பின் என இரண்டாக பிரித்துவிடலாம் அத்துறையை. காட்டாக, 1982ல் வெளிவந்த “ஜெ.ஜெ. சில குறிப்புகள்” மூலம் சுந்தர ராமசாமி தமிழ் நாவல் துறையை அப்படி ஒரு தூரத்திற்கு இட்டுச்சென்றார். கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு பாதிப்பை மலையாளத்தில் நிகழ்த்திய எழுத்தாளர் ஓ.வி. விஜயன். 1969ல் வெளிவந்த அவரது முதல் நாவலான “கசாக்கிண்டே இதிகாசம்”(கசாக்கின் இதிகாசம்) மலையாள நாவல் உலகில் ஓர் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியது. மலையாள நாவல் இயக்கத்தை கசாக்கிற்கு முன் / கசாக்கிற்கு பின் என பிரித்துவிடலாம் என்னும் அளவிற்கு.

ஓ.வி. விஜயன் 1930ஆம் ஆண்டு பாலக்காட்டில் பிறந்தார். 1953ல் இவர் எழுதிய “பாதிரியார் கோன்ஸாலெஸிடம் கூறுங்கள்” என்ற சிறுகதையே இவரது முதல் இலக்கிய முயற்சி. 9 சிறுகதை தொகுப்புகளும், 9 நாவல்களும் எழுதியுள்ளார். இவர் எழுத்தாளராக மட்டுமன்றி கேலிச்சித்திரக்காரராகவும், பத்திரிக்கையாளராகவும் விளங்கினார். ஹிந்து, ஸ்டேட்ஸ்மேன், பாட்ரியாட் உள்பட இந்தியாவின் தலைசிறந்த பல இதழ்களில் பணிபுரிந்துள்ள விஜயனின் கேலிச்சித்திரங்கள் மூன்று தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைகள் மற்றும் நாவல்கள் பலவற்றை இவரே ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தார்.

கசாக்கின் இதிகாசம் என்ற தனது முதல் நாவலை எழுத இவர் 12 ஆண்டு காலம் எடுத்துக்கொண்டார். கசாக் எனும் கற்பனை கிராமத்தை கதைக்களமாக கொண்ட நாவல் “கசாக்கின் இதிகாசம்”. கசாக்கில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பள்ளிக்கு ஆசிரியராக வரும் ரவி என்ற கதாபாத்திரத்தில் இருந்து தொடங்கும் இந்நாவல், ரவியின் இருத்தலியல் தேடல்களையும் அலைகழிப்புகளையும் அவரது வருகை கசாக்கில் நிகழ்த்தும் சலனங்களையும் விவரிக்கிறது. மனிதனின் இருப்பிற்கான காரணம் என்ன என்ற ஆதி கேள்விக்கு விடை தேடும் முயற்சியாகவும் இந்நாவலை கூறலாம். பாலக்காட்டின் தமிழ் கலந்த கொச்சை மலையாளம், காலத்தின் முன்னும் பின்னும் தங்குதடையற்று கதைசொல்லி உலாவும் விதம், மிகச்சிறிய வெளிநிகழ்வுகளின் மூலம் கதாபாத்திரங்களின் உள்போராட்டங்களை விளக்கிச்செல்லும் பாணி என நாவலின் பல பண்புகள் மலையாள இலக்கிய உலகின் மைல்கல்லாக இப்படைப்பை நிறுவின. “கசாக்கின் இதிகாசம்” மாத்ருபூமி வார இதழில் 1968ஆம் ஆண்டு தொடராக வந்து பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்த ஆண்டே புத்தக வடிவிலும் வெளிவந்தது. 1995ஆம் ஆண்டு இந்நாவல் ஓ. வி. விஜயனின் மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் பென்குயின் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

ஓ.வி. விஜயனின் மற்ற நாவல்கள் : தர்மபுராணம், குருசாகரம், மதுரம் காயந்தி, பிரவாசகண்டே வழி மற்றும் தலைமுறைகள்.

ஓ.வி. விஜயன், தேசிய அளவில் பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளையும் பல்வேறு கேரள மாநில இலக்கிய விருதுகளையும் வாங்கியுள்ளார்.

10 வருடங்கள் பார்கின்ஸன்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஓ.வி. விஜயன், மார்ச் 30, 2005ல் மறைந்தார்.

கஸாக்கிண்டே இதிகாசம் நாவலின் ஒரு சிறு பகுதி, தமிழில் :

…முன்பொரு காலத்தில், ராட்சஸ பல்லிகளுக்கும் டினோசர்களுக்கும் வெகு காலம் முன்பு, ஓர் அலாதியான பயணத்தை துவக்கிய இரு மகரந்தத் துகள்கள், சூர்ய அஸ்தமனத்தின் ஒளிவெள்ளத்தில் குளித்துக்கொண்டிருந்த ஒரு பள்ளத்தாக்கை வந்தடைந்தன.

“அக்கா, இதற்கும் அப்பால் என்ன இருக்கிறதென பார்க்கலாம் வா” என்றாள் இளைய துகள்.

“பசுமை நிறைந்த இந்த பள்ளத்தாக்கை விட்டு வேறெங்கும் நான் போகப்போவதில்லை” என்றாள் மூத்தவள்.

“எனக்கு பயணம் வேண்டும். அறிதலின் சுகம் வேண்டும்” என்றாள் இளையவள், நீண்டிருந்த பாதையை ஆச்சரியத்துடன் பார்த்தபடி.

“அக்காவை மறந்துவிடுவாயா?”

“மாட்டேன்”

“மறப்பாய், தங்கையே. அது தான் விதி. அதில் பிரிவும் துயரமும் மட்டுமே நிறைந்துள்ளன”

இளையவள் பயணத்தை தொடர்ந்தாள். மூத்த மகரந்தத் துகள் பள்ளத்தாக்கில் தங்கினாள். அவளது வேர் ஈர மண்ணை துளைத்துச்சென்று, மரணத்தையும் நினைவையும் உணவாய்க் கொண்டது. பசுமையும் நிறைவுமாய் அவள் பூமியெங்கும் முளைத்தாள்.

… வெள்ளிக்கொலுசும் மையிட்ட கண்ணுமாய் செதலி மலையின் அடிவாரத்தில் பூப்பறிக்க வந்தாள் அச்சிறுமி. அங்கு சாந்தமாய், தனிமையில் நின்றிருந்தது பூத்துக்குலுங்கும் ஒரு செண்பக மரம். பூப்பறிக்க அதன் சிறு கிளையொன்றை வளைத்தாள் சிறுமி. கிளை முறிகையில் செண்பகம் கூறியது, “தங்கையே, என்னை மறந்துவிட்டாய்!”


ஆக்கம் : சித்தார்த்

Read more...

மேலும் சில இரத்தக் குறிப்புகள் - அனார்

>> Sunday, April 18, 2010

மேலும் சில இரத்தக் குறிப்புகள்

-அனார்-


மாதம் தவறாமல் இரத்தத்தைப் பார்த்து
பழக்கப்பட்டிருந்தும்
குழந்தை விரலை அறுத்துக் கொண்டு
அலறி வருகையில்
நான் இன்னும் அதிர்ச்சியுற்றுப் பதறுகின்றேன்
இப்போது தான் முதல் தடவையாக காண்பதுபோன்று

“இரத்தம்” கருணையை, பரிதவிப்பினை
அவாவுகின்றது
இயலாமையை வெளிப்படுத்துகின்றது

வன் கலவி புரியப்பட்ட பெண்ணின் இரத்தம்
செத்த கொட்டுப் பூச்சியின் அருவருப்பூட்டும் இரத்தமாயும்
குமுறும் அவளுயிரின் பிசுபிசுத்த நிறமாயும்
குளிர்ந்து வழியக் கூடும்

கொல்லப்பட்ட குழந்தையின்
உடலிலிருந்து கொட்டுகின்றது இரத்தம்
மிக நிசப்தமாக
மிக குழந்தைத் தனமாக

களத்தில்
இரத்தம் அதிகம் சிந்தியவர்கள்
அதிக இரத்தத்தை சிந்த வைத்தவர்கள்
தலைவர்களால் கௌரவிக்கப்பட்டும்
பதவி உயர்த்தப்பட்டும் உள்ளார்கள்

சித்திரவதை முகாம்களின்
இரத்தக் கறைபடிந்திருக்கும் சுவர்களில்
மன்றாடும் மனிதாத்மாவின் உணர்வுகள்
தண்டனைகளின் உக்கிரத்தில்
தெறித்துச் சிதறியிருக்கின்றன

வன்மத்தின் இரத்த வாடை
வேட்டையின் இரத்த நெடி
வெறிபிடித்த தெருக்களில் உறையும் அதே இரத்தம்
கல்லறைகளில் கசிந்து காய்ந்திருக்கும் அதே இரத்தம்
சாவின் தடயமாய்
என்னைப் பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது


(தமிழ் வழி ஆங்கிலத்தில் தவ சஜிதரன்)


Some more notes of blood

Even though I've got used
To seeing blood each month
I turn dizzy and shocked
When my child comes to me
Screaming with a cut finger
As if it was the first time to see

Blood vies for love and anxiety
Manifests incapacity

The cold blood of
A sexually assaulted woman
May slither down
As the disgusting blood of a dead tarantula
As the sticky colour of her rumbling soul

The blood from the body
Of a murdered infant
Oozes out
So silently
So childishly

Those who shed and cause to shed
More blood on the battlefield
Have been honoured by the leaders
Elevated by them

The entreating senses of human souls
Have got scattered on the blood-stained walls
Of torture camps in the zeal of punishment

The bloody smell of malevolence
The bloody odor of the hunt
The same blood freezing in the boisterous streets
The blood diffused from and dried on the tombs
Continues to follow me

As the print of death

- Anar

(Translated from Tamil by Thava Sajitharan)

Read more...

சுபாஷிதம் - மஹாகவி பர்த்ருஹரி

>> Tuesday, April 13, 2010


சமஸ்கிருதத்தில் உள்ள செவ்வியல் நூல்களில் மிகச் சிறந்தவைகளில் ஒன்றாக மதிக்கப்படும் மகாகவி பர்த்ருஹரியால் இயற்றப்பட்ட ‘சுபாஷிதம்’ என்ற இணையற்ற நூல் தமிழில் மதுமிதாவால் மொழியாக்கம் செய்யப்பட்டு 2005ஆம் ஆண்டில் வெளியானது. அவரை பற்றிய குறிப்புகளை இங்கு வாசிக்கலாம். சுபாஷிதம் தொகுப்பிலிருந்து சில கவிதைகளை இங்கு இடுகின்றோம்.





கிறக்கத்தில்
மூடிய விழிகளுடன்
இணைதலின்
அனுபவ ஞானம்
எவரிடம் பிரகாசிக்கிறதோ

இந்த ஞானமே
இருவரும் பரஸ்பரம்
இணைந்து இன்பம் நுகர
நிச்சயித்து
நிறைவேற்றிக் கொள்கிறது

(சிருங்கார சதகம் – இன்ப வர்ணனை)

*******************
ஒருவனிடம் பேசுகின்றனர்
இன்னொருவனைப் பார்க்கின்றனர்
வேறொருவனை நினைக்கின்றனர்

அழகிய பெண்களுக்கு
பிரியமானவன் யார்?


(சிருங்கார சதகம் – பெண்ணில் இருமை)


*******************

முழு மதியின் ஒளியினை அபகரித்த
மெல்லிய மேனியாளின்
தாமரை முகத்திலுள்ள
இதழமுது
விஷக்கனியின் சாறு

அருந்துகையில் அமுது

அருந்திய பின்
துன்பமளிக்கும் விஷமே.


(சிருங்கார சதகம் – பெண்ணில் இருமை)

*******************


கூந்தலை கலைத்து
கண்களை மூடச் செய்து

உடையினை வலிமையாய் வீசி எறிந்து
உடலை சிலிர்க்கச் செய்து
மெல்ல மேனியினை நடுங்கச் செய்து
உதடுகள் குவித்து மகிழ்வின் ஒலியினை
அடிக்கடி உச்சரிக்க வைத்து

இப்போது
குளிர் காலக் காற்று

நங்கையிடம்
நாயகன் போல் நடந்து கொள்கிறது


(சிருங்கார சதகம் – பனி மழை காலம்)

சமஸ்கிருதத்திலிருந்து தமிழில் – மதுமிதா


சுபாஷிதம் மொழிபெயர்ப்பு நூல் பற்றிய குறிப்புகளை கீழ்கண்ட தளங்களில் வாசிக்கலாம்






Read more...

பிரதிபா நந்தகுமார் கவிதைகள்

>> Monday, April 12, 2010

காணவில்லை
-----------------

உனக்கு
எல்லாம் தெரியும்
என்னை
என் முதுகிலிருக்கும் மச்சத்தை
இடது காதில் மறைவாக இருக்கும் தழும்பை
பெருவிரலில் நைந்துப்போன நகக்கணுவை.

அடர்ந்த இருளிலும்
உன்னால் அடையாளம் காணமுடியும்
என் பட்டுப்போன்ற மேனியின்
ஒவ்வொரு வளைவுகளையும்.

ஆனால் நீ அறிந்திருக்கவில்லை
அந்த ஏழு கடல்களைத் தாண்டிய போது
என் பெருமூச்சில்
எரிந்துபோன ஆகாயத்தை.
உன் அணைப்பில் புதைந்து
இதழ் நனைத்த முத்தத்தில்
சரிந்து விழுந்த நான்
காணாமல் போனதை.


ஆபிஸில் மதிய உணவு நேரம்
--------------------------------

அவன் நிறுத்தாமல்
பேசிக்கொண்டே இருந்தான்.
திறந்திருந்தது அவன் பெரிய டிபன் கேரியர்
அறுசுவை உணவு வகைகள்
அவியல், பொறியல்
சட்னி, சாம்பார் சாதம், தயிர்ச்சாதம்,
அப்பளம் தொட்டுக்கொள்ள ஊறுகாய்
இத்துடன்
தித்திக்கும் இனிப்பில்
இரண்டொரு மாங்கனித் துண்டுகளின் மணம்.

சாப்பிட்டுக்கொண்டே
அவன்
அவன் மனைவியைப் பற்றிக்
குறைபட்டுக்கொள்கிறான்.
அவள் - அறிவிலியாம்.
சோம்பேறியாம்
குண்டாம்
பார்க்க சகிக்கலையாம்
முட்டாளாம்
நடனங்கள் கண்டதில்லையாம்
சங்கீதக்கச்சேரி கேட்டதில்லையாம்
ஏன்..
மாசாலா டீ னா கூட
என்னவென்று தெரியாதாம்
அவளுடன் வாழும் வாழ்க்கை
வெறுத்துவிட்டதாம்
ஆனாலும் ஆனாலும்
என்ன செய்வது
குழந்தைகளுக்காக
குடும்ப கவுரவத்திற்காக..
என்றவன்..

என்னைப் பார்த்து
சொன்னான்..

நான் புத்திசாலியாம்
அறிவுஜீவியாம்
ஆபிஸ் வேலை
வீட்டு வேலை
இரண்டிலும் கெட்டிக்காரியாம்
சம்பாதிக்கிறேனாம்
கவிதை கூட எழுதுகிறேனாம்
என் கணவர் ரொம்பவே
கொடுத்து வைத்தவராம்...

நான் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன்..

அன்றுமாலை
என் கணவருக்குப் பிடித்தமானதை
சமைத்துக் கொண்டிருக்கும்போது
அவர் ஆபிஸ் பையன்
கழுவப்படாத டிபன் பாக்ஸை
என்னிடன் நீட்டிவிட்டு
சொல்லிச்சென்றான்
'பாஸ் இன்று லேட்டாக வருவார் என்று'



கதைச் சொல்லு

-----------------

கதைச் சொல்லு
எனக்கொரு கதைச் சொல்லு.
உன் கதையில்..
ஏழு கடல்கள்
இடியுடன் கூடிய புயல்
தீ கக்கும் டிராகன்
இவர்களுடன் இருக்கட்டும்
அரக்கனைப் பரிகாசம் செய்யும்
ஒரு சின்னப் பச்சைக்கிளி
முத்துக்களைக் கொறித்துக்கொண்டு.
இருக்கட்டும்
முடிவில்லாத சிக்கலான பாதை
வெளிவரமுடியாமல்
ஒவ்வொரு படியிலும்
தடைக்கற்கள்
பயப்படவில்லை.
இந்த மாதிரிக் கதைகளை
எனக்குத் தெரியும்.
எல்லா கதைகளிலும்
எப்போதும்
கடைசியில்
இனிமையாக வாழ்ந்ததாக
சுபமாக முடியும் என்று.

கதைச் சொல்லு
எனக்கு.
மூச்சுத் திணறும் அணைப்பில்
வேப்பமரத்தடியில்
அவன் கனவுகள் விழித்தெழுந்ததை..
கதைச் சொல்லு எனக்கு.

உன் கதைக் கேட்டு
அடிப்பட்ட மான் போல
துடிதுடித்து அழவேண்டும்.
கதை முடிவில்
தொலைந்து போன குழந்தைகள்
சந்தர்ப்பவசத்தால்
ஒருவரை ஒருவர் சந்திக்கட்டும்..
கதைச் சொல்லு எனக்கு.

ஒரே ஒரு ஊரில்
ஓர் இளவரசியாம்
அவளைக் காதலித்தானாம்
துணிகளை வெளுக்கும் அவன்..

இந்தக் கதையில் கற்பனை இருக்காதே..
கதைச் சொல்லு எனக்கு.
கதைச் சொல்லு.


- பிரதிபா நந்தகுமார் (கன்னடக்கவிதைகள்)


Prathibha Nandakumar's Poems.
-----------------------------------------
From Indian literature - sahitya akademi's bi-monthly journal,
No 215, 2003. pg 56, 63, 67


மொழியாக்கம்: புதியமாதவி

Read more...

பேரரளிப் பூக்கள்

>> Saturday, April 10, 2010

மலையின் சிகரம்தொட்டு மிதந்தலையும் மேகம்
தனியே திரிந்தலைந்தேன் மேகம்போல் நானும்
தங்கக் குவியலாய் கண்முன்னே
விரிந்து கிடந்தது பேரரளிக் கூட்டம்
குளக்கரை நிரப்பியும் மரநிழலில் அடர்ந்தும்
காற்றில் படபடத்து நடனமாடியும்


பால்வீதியெங்கும் பரவிப் பதிந்து
மின்னிக் கிடக்கும் நட்சத்திரங்கள் போல்
எல்லையில்லா நீர்க்கரை ஓரம்
எல்லையும் தாண்டி படர்ந்து கிடந்தன
காற்றின் ஜதிக்கு தலையாட்டும் மலர்கள்
ஒரே பார்வையில் பத்தாயிரம் கண்டேன்


கடலில் மிதந்து அலைகள் ஆடின
மலர்களோ அலைகளை மிஞ்சி ஆடின
இத்தனை களிப்பில் தோழமை கிட்டினால்
கவிஞன் உணர்வுகள் துள்ளாதிருக்குமோ ?
பார்த்தேன்பார்த்தேன்பார்த்துக்கொண்டேயிருந்தேன்
கிட்டிய செல்வங்கள் பற்றி உணர்வில்லாமல்..


பாரங்கள் சுமந்தோ சுமைகள் துறந்தோ
படுக்கையில் என்னுடல் கிடத்திடும் நேரம்
தனிமையின் சுகமாம் மனக்கண் திரையில்
பளிச் மின்னல்களாய் இவை தோன்றி நிறைய
என் உள்ளமும் உவகையில் நிறைந்துபோகும்
பேரரளிப் பூக்களுடன் இசைந்தும் ஆடும்

தமிழில் - பூங்குழலி


"The Daffodils" by William Wordsworth

I wandered lonely as a cloud
That floats on high o'er vales and hills,
When all at once I saw a crowd,
A host of golden daffodils;
Beside the lake, beneath the trees,
Fluttering and dancing in the breeze.


Continuous as the stars
that shineand twinkle on the Milky Way,
They stretched in never-ending line
along the margin of a bay:
Ten thousand saw I at a glance,
tossing their heads in sprightly dance.


The waves beside them danced;
but theyOut-did the sparkling waves in glee:
A poet could not but be gay,
in such a jocund company:
I gazed - and gazed - but little thought
what wealth the show to me had brought:


For oft, when on my couch I lie
In vacant or in pensive mood,
They flash upon that inward eye
Which is the bliss of solitude;
And then my heart with pleasure fills,
And dances with the daffodils.

Read more...

இதயதேவி – வைக்கம் முகம்மது பஷீர்

>> Monday, April 5, 2010

வைக்கம் முகம்மது பஷீர் மலையாளத்தின் தலைசிறந்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவர். 1937 முதல் 1941 வரை இவர் எழுதிய கதைகள் அடங்கிய “விஷப்பு” (பசி) என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதை இது.



நினைவின் ஆழத்தில் புதைந்து போயிருந்த அது, நிலவொளியில் மூழ்கும் தாஜ்மஹாலென தெளிவடைகிறது இப்போது. இந்தக் காதல் கதை துக்கம் நிறைந்ததாய் இருக்கலாம். இல்லையெனில் வேறேதோ, அதன் சூட்சமத்தை பற்றி நான் ஒன்றும் விளக்கப்போவதில்லை.

பிரம்மாண்டமான கட்டிடங்கள் நிறைந்த தெருக்களின் வழியே தாய் தந்தையற்ற அனாதையாய் திரிந்துகொண்டிருந்தேன், அதன் விரிவைக் கண்டு ஆச்சரியப்படும் லட்சோபலட்சம் மனிதர்களை இடித்து உரசியபடி. சத்தங்கள் நிறைந்த, விசாலமான இந்நகரம் என்னை மிகவும் துன்புறுத்தியது. எவ்வளவு முயற்சித்தும் வேலை கிடைக்கவில்லை. எனக்கு மட்டும் ஓர் அடைக்கலமில்லை. உடலும் மனதும் ரணப்பட்டிருந்தன. உச்சிவெயிலில் இருந்து தப்பிக்க அருங்காட்சியகத்தினுள் நுழைந்தேன். அங்கிருந்த எதையும் நின்று பார்க்கவில்லை. மரநிழலிலிருந்த இருக்கையில் சென்றமர்ந்தேன். என்னருகில் ஓர் பெண் சிற்பம். வெண்பளிங்கில் செய்யப்பட்டது. உறைந்த நிலா பெண் உரு கொண்டதைப் போன்ற தோற்றம். அங்கங்கலெல்லாம் பூரண வளர்ச்சியடைந்திருந்தன. முந்திரி இலைகளைக் கொண்டு மானம் காத்துக்கொண்டிருந்தது அது.

என் கண்கள் கலையெழுச்சிமிக்க அந்த மௌன அழகில் பதிந்திருந்தன – ஆனால் சிந்தனை துக்கம் நிரம்பியதாய், மேகங்களினிடையே ஓடும் நதியினைப்போல் எங்கெங்கோ பாய்ந்துக்கொண்டிருந்தது. நான் இருப்பது நகரத்தின் இதயத்தில் எனும் நினைவே மறந்துபோனது. அப்போது தான் இடிமுழக்கம் போன்ற சத்தத்துடன் ஹிந்தியில் அந்த கேள்வி:

‘நீ யார்?’

சிவப்பேறிய இரு கண்கள் என்னை உற்றுநோக்கின. செம்மண் அப்பிய உடைகள் அணிந்த பார்ஸி இளைஞன். தூக்கலான வியர்வை நெடி – கூடவே ஏதோ வன மிருகத்தின் மேலிருந்தெழுவதைப் போன்ற கெட்ட வாடையும். அச்சமுற்றவனாய் திகைத்து நின்றுவிட்டேன் நான். இலக்கில்லாத அந்த கண்களில் ஒரு பிரகாசம் தோன்றியது. கோபம் கணன்ற அந்த முகத்தில் ஓர் புன்சிரிப்பு நிழலெனப் படர்ந்தது.

‘ஓ. நீ தானா?’ சிரித்துக்கொண்டே அவன் எனக்கு கைகொடுத்தான். அந்த முகமாற்றத்திற்கான காரணம் என்னவென்று ஆச்சரியப்பட்டேன். அந்த மனிதனை அப்போது தான் முதல்முறையாகக் காண்கிறேன்.

‘நீ அவனோ என்று நினைத்துவிட்டேன்’

‘எவன்?’

‘தெரியாதா?’ ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தான். உலகப்புகழ் பெற்ற அவனைப் பற்றிய எனது அறியாமையை எண்ணி சிரித்தான்.

‘என்னுடைய ஜட்காகாரன்!’

‘ஜட்காகாரன்?’

‘அவன் தான். என்னுடைய இதயதேவியை….’

‘இதயதேவியை?’

அந்த கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. அவன் எல்லாவற்றையும் மறந்துவிட்டான் என்றெனக்குத் தோன்றியது. துக்கம் நிறைந்த அசைவுகளுடன் காதலின் உணர்வெழுச்சியுடன் அச்சிலையருகே சென்றான். ஒரு நாற்பது ஐம்பது கண்கள் அவனை பின் தொடர்ந்தன. சிலது ஏளனப்புன்னைகை தூவியபடி. சிலது உணர்ச்சிகளற்று.

வெண்பளிங்குச் சிற்பம் புன்னகைக்கும் பாவனையுடன் நின்றது.

‘தில்பஹார்!’ உணர்ச்சிப்பொங்க அழைத்தான். வேதனையுடன் அக்கண்கள் உயர்ந்தன.

‘நான் தாமதித்து விட்டேனா?’ தீனமாய் எழுந்தது அந்த குரல்!

நிறைந்தொழுகிய கண்களுடன் அந்த முகத்தை பார்த்துக்கொண்டு அதன் பாதங்களில் விழுந்தான். பதிலேதும் கிடைக்காததால் மீண்டும் எழுந்து சிற்பத்தை கட்டிப்பிடித்தான். அதன் மார்பில் முகம் புதைத்து உடைந்தழுதான்:

‘தேவீ! இன்றாவது என்னோடு பேசு….’

தமிழில் : சித்தார்த்

Read more...

எதற்காக இந்த வலைப்பதிவு...

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்“ என்கிற கனவினை மெய்ப்பிப்பதற்கான மொழிபெயர்ப்புகளுக்கான ஒரு வலைப்பதிவு இது.

மொழிபெயர்ப்புகள் பற்றி..

ஒரு மொழி தன்னை வளமானதாகவும் வனப்பானதாகவும் ஆக்கிக்கொள்ள மற்ற மொழிகளுடன் கொள்ளும் ஒரு உறவே மொழிபெயர்ப்பு.

  © Blogger template Digi-digi by Ourblogtemplates.com 2008

Back to TOP