பாப்லோ நெரூதா கவிதைகள் - சுகுமாரன்

>> Wednesday, May 26, 2010

மாச்சு பிச்சுவின் சிகரங்கள் - ஒரு முன் குறிப்பு
- சுகுமாரன்

நெரூதாவின் 'கான்டோ ஜெனரல்' (Canto General - பொதுக் காண்டம்) தொகுப்பில் இடம்பெறும் நீள் கவிதையான 'மாச்சு பிச்சுவின் சிகரங்களின் மையம் - வரலாறு. புதையுண்டுபோன ஒரு நகரத்தின் இறந்த காலத்தை நிகழ்கால அனுபவமாக மீட்டுருவாக்கம் செய்கிறார் நெரூதா.

இன்கா இனத்தவரின் அழிந்துபோன நகரம் மாச்சு பிச்சு. ஆண்டீஸ் மலைத்தொடரில் உருபம்பா ஆற்றங்கரையில் மாச்சு பிச்சு, ஹ¤வாய்னா பிச்சு ஆகிய இரட்டை மலைகளுக்கிடையில் உருவான புராதன நகரம். கலைத் தேர்ச்சியுடனும் நீர்நிலைகளும் வழிபாட்டுத் தலங்களும் சதுக்கங்களும் வீடுகளும் வாயில்களும் படித்துறைகளுமாக நுட்பமான தொழில் திறனுடன் நகரம் நிர்மாணிக்கப்பட்டதாக வரலாறு சான்றளிக்கிறது.
  
காலத்தின் மறதிக்குள் புதையுண்டிருந்த இந்த மலைநகரமும் கோட்டை கொத்தளங்களும் 1910 ஆம் ஆண்டு அகழ்வாராய்ச்சியில் மீட்டெடுக்கப்பட்டது. காற்றின் உராய்வுக்கும் நீரின் அரிப்புக்கும் ஈடு கொடுத்து நின்ற நகரம், தொன்மைச் சின்னமாக இன்று பராமரிக்கப்பட்டு
வருகிறது. 1943 இல் நெரூதா இந்த நகரத்தைச் சென்று பார்வையிட்டார். மனித வாழ்வின் ஊற்றைத் தேடிய புனிதப் பயணம் என்று தனது அனுபவத்தைக் குறிப்பிடவும் செய்தார்.

ஸ்பானிய ஆக்கிரமிப்பால் இன்கா நாகரிகமும் மாச்சு பிச்சு நகரமும் அழிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. எனினும் அங்கு வாழ்ந்த மக்களினத்தின் மறைவு ஒரு புதிர். இந்தப் புதிரின் உண்மையை அறிய ஒரு கவிதைமனம் மேற்கொள்ளும் சாகசமான பன்முகப் பயணம் -'மாச்சு பிச்சுவின் சிகரங்கள்'.

மாச்சு பிச்சுவின் சிகரங்கள்
---------------------------------
ஒன்று

காற்றிலிருந்து காற்றுக்கு இழுபடும் வெற்றுவலைபோல
குளிர்காலத்தின் உச்சத்தில்
நாணயத்தாள்களாக இலைகள் உதிரும்போது
கட்டற்ற நேசம் கையுறையிலிருந்து கழன்று
நிலவின் நீண்ட விரல்களாக நம்மைத் தொடுகையில்
வசந்தத்துக்கும் கோதுமைக்கதிர்களுக்கும் இடையில்
இசைவான சூழ்நிலையில்
தெருக்களில் இழுபட்டு வந்தேன் நான்.

(ஒத்திசைவு இல்லாத பொருட்களில் உயிர்ப்பு ஒளிரும் நாட்கள்;
மௌனத்தின் அமிலத்தில் கரையும் இரும்பு
கடைசித் துகள்களாகக் கலையும் இரவுகள்
காதல் பிரதேசத்தில் குலைந்த மகரந்தகேசரங்கள்)

வயலின்களுக்கு இடையில் எனக்காக காத்திருந்த எவரோ,
இறுகிய கந்தக இலைகளுக்கடியில் தன்னைச் சுழற்றித் துளைத்துப்
புதைத்துக்கொண்ட கோபுரம்போன்ற ஓர் உலகைக் கண்டடைந்தார்.
வால் நட்சத்திரங்களின் உறையில் பாய்ச்சிய
விசையுள்ள வாளைப்போல
பூமியின் பொன் நாளங்களுக்குள்
அதன் மர்ம உறுப்புகளுக்குள்
எனது மென்மையான கையை நுழைத்தேன்.

ஆழம் காணமுடியாத அலைகளுக்குள் தலைசாய்த்து
கந்தகத்தின் உறக்கத்தில் ஒரு துளியாகச் சுருங்கினேன்.
ஒரு குருடனைப்போல
நமது களைத்துப்போன மனித வசந்தத்தின்
மல்லிகை மணத்தை மறுபடியும் கண்டடைந்தேன்.

-  பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)

நன்றி :  சுகுமாரன்

Read more...

இயற்கையும் மனிதனும்

>> Monday, May 24, 2010

இயற்கையும் மனிதனும்

-  பாவண்ணன்

கனவுகள் - தமிழாக்கப் பாடல்கள்
மொழியாக்கம் - தங்கப்பா
வானகப் பதிப்பகம்

எல்லா மொழிகளிலும் உள்ள பெரிய படைப்பாளிகள் அனைவரும் தம் படைப்பு முயற்சிகளோடு கூடவே தமக்குப் பிடித்த படைப்புகளைப் பிறமொழிகளிலிருந்து மொழிபெயர்ப்பதில் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். தமிழில் பாரதியார் முதல் புதுமைப்பித்தன் வரை இத்தகு முயற்சிகளில் ஈடுபட்டவர்களே. நாற்பதாண்டுகளுக்கும் மேலாகத் தம் வாழ்வனுபவத்தைக் கலையுணர்வோடு மரபுக்கவிதை வடிவில் முன்வைத்துவரும் ம.இலெ.தங்கப்பா தம் இளமைக்காலம் முதல் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்த கவிதைகள் 'கனவுகள் ' என்கிற பெயரில் வெளியாகியுள்ளன.


இத்தொகுப்பில் 60 கவிதைகள் உள்ளன. வோர்ட்ஸ்வொர்த், தாமஸ் ஹார்டி, தாமஸ் க்ரே, ஷெல்லி, டென்னிசன், ஆலிவர் கோல்ட்ஸ்மித், கீட்ஸ் ஆகிய ஆங்கிலக் கவிஞர்களின் கவிதைகளும் சில ஆப்பிரிக்கக் கவிதைகளும் ரசூல் கம்சுதேவின் ரஷ்யமொழிக் கவிதைகளும் தாகூரின் கவிதைகளும் இவற்றில் அடங்கும். சுவையும் பொருளும் குன்றாத வகையில் மிக அழகிய தமிழல் இக்கவிதைகளைத் தமிழாக்கியுள்ளார் தங்கப்பா. இவை அனைத்தையும் இனிய மரபுக்கவிதை வடிவில் செய்திருப்பது மேலுமொரு சிறப்பாகும். மொழிபெயர்ப்பு என்னும் குறிப்பு இல்லாவிடில் இக்கவிதைகள் அனைத்தும் தமிழிலேயே புனையப்பட்டவை என்று சொல்வதில் யாருக்கும் தடையிருக்காது. தங்கப்பாவின் சொல் தேர்வும் பொருத்தமாக அவற்றைக் கையாளும் விதமும் கவிதைகளுக்கு அழகைச் சேர்க்கின்றன. எளிமையும் தெளிவும் அழகும் இவரது சொந்தக் கவிதைகளுக்கு எப்போதும் பெரும் வலிமையாக இருப்பவை. மொழிபெயர்ப்புகளுக்கும் இவையே வலிமையாகத் திகழ்கின்றன.


மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கவிஞர்கள் அனைவரும் நவீன யுகத்துக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவர்கள். அழகின் வழியே இயற்கையையும் இயற்கையின் வழியே இறைவனையும் தரிசிக்கும் ஆசையும் ஆற்றலும் மிகுந்தவர்கள் அவர்கள். அழகான ஒரு மலரைப் பாடினாலும் தும்பியைப் பாடினாலும் இயற்கையின் தரிசனத்தை மானுடர்க்கு நுட்பமாகச் சுட்டிக்காட்டும் புள்ளிகளாக அவற்றை மாற்றிவிடும் வலிமை மிகுந்தவர்கள் . அக்கவிதைகளின் மூல வடிவத்தில் படிந்திருந்த அதே பரவசத்தோடும் துடிப்போடும் எழுச்சியோடும் தமிழிலும் முன்வைத்திருக்கும் தங்கப்பாவின் சொல்லாட்சித் திறமை பாராட்டுக்குரிய ஒன்றாகும்.


இம்மொழிபெயர்ப்புத் தொகுதியில் இடம்பெற்றுள்ள தாமஸ் ஹார்டியின் 'வாலாட்டிக்குருவியும் குழந்தையும் ' என்ற கவிதை மிக முக்கியமான ஒன்றாகும். மொத்தத் தொகுப்பின் தொனிப்பொருளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கவிதையாக இதைக்கொள்வதில் தவறில்லை. மிக எளிய சித்தரிப்புத்தன்மையை உடைய இக்கவிதை முடியும் போது உருவாகும் மனஅலைகள் எளிதில் அடங்குவதில்லை. கவிதையில் ஒரு வாய்க்கால் இடம்பெறுகிறது. ஒருபுறம் ஒரு குழந்தை வேடிக்கை பார்க்கிறது. மறுபுறம் வாலாட்டிக்குருவியொன்று உட்கார்ந்திருக்கிறது. முதலில் அந்த வாய்க்கால் வழியாக ஒரு முரட்டுக்காளை செல்கிறது. காட்சியில் எந்தவிதமான சலனமும் இல்லை. இரண்டாவதாக அவ்வாய்க்கால் வழியாக ஒரு குதிரை செல்கிறது. அப்போதும் காட்சியில் எவ்விதமான சலனமும் இல்லை. மூன்றாவதாக நாயொன்று வருகிறது. அப்போதும் அக்காட்சியில் எவ்விதமான மாற்றமும் நேர்வதில்லை. இறுதியாக ஒரு மனிதன் வருகிறான். சட்டென காட்சியில் சலனமெழுகிறது. பயத்துடனும் பதற்றத்துடனும் குருவி பறந்து விடுகிறது. இவ்வளவுதான் விவரணை. இவ்விவரங்கள் வழியாக உருவாகும் மனச்சித்திரத்தில் கவிதை உன்னதம் எய்துகிறது. விலங்குகள் இயற்கையோடும் காற்றோடும் சேற்றோடும் பயிர்பச்சைகளோடும் மாறாத உறவுகொண்டு நடமாடுகின்றன. ஒன்றின் வரவை மற்றொன்று அறிந்தாலும் அச்சம் கொள்வதில்லை. அவற்றிடையே இயங்கும் சமன்பாட்டில் எந்தவிதமான குழப்பமும் இல்லை. குழந்தையைக்கூட அவை மனத்தளவில் எவ்விதமான வேறுபாடும் பாராட்டாமல் ஏற்றுக்கொள்கின்றன. ஆனால் அவை ஏற்கத்தயங்கி அஞ்சி ஒதுங்குவது மனிதர்களை மட்டுமே.


இயற்கையின் படைப்பில் மனிதர்களும் விலங்குகளும் குழந்தைகளே. ஆனால் ஒரு குழந்தையைக் கண்டு மற்றொரு குழந்தை ஏன் அஞ்சவேண்டும் ? அதுதான் நம் துயரங்கள் அனைத்துக்குமான காரணப்புள்ளி. மனிதன் தன்னைச்சுற்றியுள்ள எல்லாவற்றைக் காட்டிலும் மேலானவனாகவும் வலிமையானவனாகவும் தன்னை நினைத்துக் கொள்கிறான். அன்போடும் அனுசரணையோடும் அணுகவேண்டிய இயற்கையை வென்றெடுக்க வேண்டிய ஒரு கோட்டையாக எண்ணி விடுகிறான். வெற்றிக்கொடி நாட்டி எல்லாவற்றையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டுவர எண்ணுகிறான். அரவணைத்தல் அல்ல, அடிமைப்படுத்துவதே அவன் இயல்பாகிறது. முதலில் இயற்கையை நுகர்கிறவனாக இருக்கிற மனிதன், ஆசையின் காரணமாக அதை அடிமைப்படுத்துகிறான். பின்னர் பேராசையின் காரணமாக அதை நாசப்படுத்திச் சிதைக்கிறான். உச்சியில் தன் வெற்றிக்கொடி பட்டொளிவிசிப் பறக்கவேண்டும் என்கிற வெறியில் காலடி மணணையும் சிதைத்துப் பள்ளமாக்குகிறான். தன் தாயின் இதயத்தையே அறுத்து எடுக்கிற வெறிகொண்ட பிள்ளையைப்போல இயற்கையைக் குலைக்கவும் தயங்காதவனாகிறான். தாயின் இதயகீதத்தைக் கேட்க அவனுக்குக் காதுகளில்லை. அவள் கண்களில் ஒளிரும் தரிசனக்காட்சியைக் காணக் கண்களுமில்லை. மாறாக, எல்லாமே வெற்றிகொள்ளத்தக்க கோட்டைகளாகவே தென்படுகின்றன. தன் மீட்சிக்கான பாதை மிக அருகிலேயே இருந்தும் அதைக் காணவியலாத மனிதன் தன் அழிவுப்பாதையைத் தானே தேடிக்கொள்கிறான் என்பதே இயற்கையுகக் கவிஞர்கள் அனைவருடைய ஒட்டுமொத்தச் செய்தி. தங்கப்பாவின் சொந்தக் கவிதைகளின் உள்ளடக்கத்தைப்போலவே அவர் தேர்ந்தெடுத்திருக்கும் மொழிபெயர்ப்புக் கவிதைகளும் அமைந்திருப்பதைச் சிறப்பான ஒற்றுமையாகச் சொல்லவேண்டும்.


இத்தொகுப்பின் முக்கியமான இன்னொரு பகுதி தாகூரின் கதையொன்றை அடிப்படையாகக்கொண்டு தங்கப்பா யாத்துள்ள 'வெற்றிஓசை ' என்கிற கவிதைநாடகப் பிரதியாகும். அங்கதச் சுவை மிகுந்த இந்த நாடகம் அரசு எந்திரத்தின் அபத்தமான திட்டமுறைகளைக் கிண்டல்களுடன் முன்வைக்கிறது. கிளிக்கும் பாடக் கற்றுக்கொடுக்கும் முயற்சி படிக்கக் கற்பிக்கும் முயற்சியாக மாறுவதும் பிறகு நுால்களைக் கரைத்துக் குடிப்பாட்டும் முயற்சியாக மாறுவதும் நகைச்சுவை ததும்ப எழுதப்பட்டுள்ளன. இறுதியில் தொண்டை அடைத்த கிளியைக் காட்டி அறிவின் ஆழ்ந்த அமைதிநிலை என்று அதிகாரிகள் உரைத்து முழக்கமிடும் போது கிண்டல் உச்சம் பெறுகிறது. நுண்ணுணர்வில்லாத ஆட்சியில் நடைபெறும் அபத்தக் கோலங்களை உணரும் விதத்தில் ஒவ்வொரு வரியும் அமைந்திருக்கிறது.

நன்றி :  திண்ணை

Read more...

வெள்ளிநிலவு

>> Monday, May 17, 2010

வெள்ளிநிலவு

சத்தங்கள் இல்லை அவசரம் இல்லை
வெள்ளிக் காலெடுத்து நிலவும்
இரவைக் கடக்கிறாள்

அங்கும் இங்கும் அவள் பார்வை பட்டதும்
அடவெள்ளி மரங்களில் விளைந்தன வெள்ளிக்கனிகள்

கூரைகள் மேல் அவள் தொட்டுப் பார்த்து
ஓலைக் கீற்றிலும் வெள்ளிகள்
வேய்ந்து போனாள்

காவலின் களைப்பில் உறங்கும் நாய்க்கும்
அசைவற்ற உறக்கத்தில் நீளும்
வெள்ளிக் கால்கள்

இருளில் ஒளித்த கூட்டில் தெரியும்
வெள்ளி இறகுகள் சுமந்துறங்கும்
வெள்ளை புறாக்கள்

வயலில் திரியும் குட்டி எலிக்கும்
இருட்டில் மிளிரும்
வெள்ளிக் காலும் கண்ணும்

நிலவில் குளித்த
வெள்ளி ஓடையில் மின்னும்
வெள்ளி நாணல்கலுள் வெள்ளி மீன்களும்

தமிழில் :  பூங்குழலி

Silver by Walter de la Mare

Slowly, silently, now the moon
Walks the night in her silver shoon;
This way, and that, she peers, and sees
Silver fruit upon silver trees;
One by one the casements catch
Her beams beneath the silvery thatch;
Couched in his kennel, like a log,
With paws of silver sleeps the dog;
From their shadowy cote the white breasts peep
Of doves in silver feathered sleep
A harvest mouse goes scampering by,
With silver claws, and silver eye;
And moveless fish in the water gleam,
By silver reeds in a silver stream

Read more...

மலையாளக் கவிதைகள் - எஸ். ஜோஸப்

>> Wednesday, May 12, 2010

மலையாளக் கவிதைகள் -  எஸ். ஜோஸப்


தமிழில் : சுகுமாரன



அக்காவின் பைபிள்

அக்காவின் பைபிளில் இருப்பவை:

தையல் விட்ட ரேஷன் கார்டு

கடனுதவி பெறுவதற்கான விண்ணப்பங்கள்

கந்துவட்டிக்காரர்களின் அட்டை

திருவிழா, பண்டிகை நோட்டீசுகள்

அண்ணன் குழந்தையின் போட்டோ

குட்டித் தொப்பிக்கான தையல் குறிப்பெழுதிய காகிதம்

ஒரு நூறு ரூபாய் நோட்டு

எஸ்எஸ்எல்சி புத்தகம்.



அக்காவின் பைபிளில் இல்லாதவை:

முன்னுரை

பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு

நிலப்படங்கள்

சிவப்பு மேலட்டை.


மீன்காரன் / பக். 20/ 2003

****

காதலிக்கும்போது...


ஒருத்தியை மட்டுமாகக் காதலிக்கக் கூடாது

அவளுடைய மணம்,

நிறம், சிரிப்பையெல்லாம்

வெறுமே நினைத்துக்கொண்டு நடக்கக் கூடாது

எப்போதும்



அவளுடைய பவுடர்

சுவர்க்கண்ணாடியில் அசையும் மரக்கிளை

அவள் பத்திரப்படுத்திய பழைய பாட்டுகள்

கதைப் புத்தகங்கள்

அவுன்சு குப்பியில் நிரப்பிய மணல்



வெளியில் ரோஜா

பலரகமானவை.



ஜன்னலினூடே இருளும் அந்தியை

வெறுமே அவள் பார்த்தபடியிருப்பதையெல்லாம்

மனதில் நினைத்துக்கொண்டு நடக்கக் கூடாது

எப்போதும்



அவள் எப்போதும் இறந்துபோகலாம்

அவள் இல்லாத ஒரு பெரும் உலகம்

இங்கிருக்கும் எப்போதும் இதுபோலவே.



அவளில்லாமலும் வழிகள் நீளும்

திறந்திருக்கிறது ஒப்பனைப் பொருள்

சுவர்க்கண்ணாடியில் மரமசைகிறது

வழக்கம்போல இதோ

பறவைகள் வந்து

செடிகளுக்கு மேலே

சலசலத்து நிற்கின்றன



அப்படியே இருக்கையில் பொழுதும் இருளும்



ஒருத்தியை மட்டுமாகக் காதலிக்கக் கூடாது

அவளை நினைத்து அவன் தலை குனிந்து

நசிந்தவனைப் போல நடக்க நேரும்



இருட்டுக்குள் அவன் ஜன்னலாவானே

அவளை எப்போதும் கனவில் காண்பானே

கனவினூடவன்

அவளையும் தேடி

மரணத்தை நோக்கி

நடந்து போவானே.


மீன்காரன் / பக். 47 / 2003

**

படகைப் பற்றி ஒரு கவிதை



புத்தகத்தில் ஒரு கவிதை எழுதிவைத்தேன்

எடைக்கு விற்ற காகிதங்களில் அதுவும் இருந்தது.



கடைக்காரன் மிளகாயமோ வெங்காயமோ பொட்டலம் கட்டியிருப்பானோ?

குடிசையிலே குழந்தைக்கு அது கிடைத்திருக்குமோ?

அவனால் எழுத்துக் கூட்டிப் படிக்க முடிந்திருக்காதே?

அவன் தங்கைக்குப் படகு செய்து கொடுத்திருப்பானோ?

தோணியில் அவர்கள் எங்கே போக?



ஏனென்றால்

ஏராளமான கவிதைகள் அங்கும் இங்கும்

எழுதிப் போட்டிருக்கிறேன்

கடையிலிருந்து மிளகாயும் வெங்காயமும்

பொட்டலம் கட்டிய காகிதங்கள் வாசித்திருக்கிறேன்

எழுத்துக் கூட்டிப் படிப்பது சில வேளைகளில் கடினந்தான்

தங்கைகளுக்குப் படகு செய்து கொடுத்திருக்கிறேன்

தோணியில் அவர்கள் ஏறியதுமில்லை.



புத்தகத்தில் எழுதிவைத்த கவிதை

எதைப் பற்றியதாக இருந்தது?

எதைப் பற்றியதாக இருக்க வேண்டும்?

படகைப் பற்றி.

சரி, அது படகைப் பற்றியதுதான்.


மீன்காரன் / பக். 37 / 2003

**



மீன்காரன்

கொஞ்சமே நீரோட்டமுள்ள வாய்க்காலில்

மீன்காரன் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தான்.



தாழைகள் தென்படவில்லை

வாய்க்கால் நேராகப் போய் முட்டித் திரும்பும் இடம்

ஒரு ஒர்க்ஷாப்பாக இருந்தது.

அதன் கற்சுவரும் தெரியவில்லை.



வாய்க்காலுக்கு இணையாக

தெற்கும் வடக்குமாக

எம்.சி.ரோடு பாய்ந்து போனது.



நாங்கள், குழந்தைகள்தாம் பார்த்தோம்

அரையடிகூட உயரமில்லாத நீரில்

கவிழ்ந்து கிடக்கும் மீன்காரனின் உடல்

பாத்திரம், தராசும் படிக்கல்லும்.



இவனை வலிப்பு சுழற்றிப்போட்டிருக்கிறது

தலையில் தண்ணீர் விளையாடுகிறது

தண்ணீரில் தாழை மடல்

குத்திக் கிழித்து விளையாடுகிறது.



வாய்க்காலின் ஓய்ந்துபோன மூலையில்

நீர்ப்பூச்சி சுழல்கிறது.



இப்போது அதே இடத்தையடையும்போது

தெரிபவை:



ஒரு கோழிக்கடை

சிமெண்ட் பூசிய ஒர்க்ஷாப்

மண்கொட்டி உயர்த்திய வயல்



மீன்காரனைப் பார்க்கவே முடிவதில்லை.


மீன்காரன் / பக். 54 / 2003


**

இந்த வரிகளுக்கிடையில்


இந்த வரிகளுக்கிடையில்

சில சமயம் நானும் சிலசமயம் நீங்களும்

இல்லாமற் போகலாம்.

நமக்கிடையில் அறிமுகமில்லை.

பட்டணத்திலோ கடற்கரையிலோ பார்த்திருக்கலாம்

பாலத்தின் கைப்பிடிச் சுவரைப் பற்றிக்கொண்டு

கீழே ஒருவன் தூண்டில்போடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தது

நீங்களாக இருக்கலாம்

அல்லது

இறைச்சியோ மருந்தோ வாங்கப்

போகும்போது பார்த்திருக்கலாம்

நாமெல்லாம் எத்தனை சாதாரணர்கள், இல்லையா?

அசாதாரணமான காரியங்கள் செய்ய முயல்கிறோம்

நீங்கள் ஒரு வண்டி ஓட்டுகிறீர்கள்

அல்லது லோன் வாங்கி ஒரு கடை தொடங்குகிறீர்கள்

பரீட்சையில் தேறுகிறீர்கள் பாட்டுப் பாடுகிறீர்கள்

நான் கவிதைகள் எழுத முயல்கிறேன்

நமது செயல்கள் நம்மைத்தாண்டி நீண்டு நிற்கலாம்

எழுத்துக்களுக்கிடையில் நான் இல்லாமற் போகலாம்

வாசிப்புக்கிடையில் நீங்களும்.


ஐடென்டிட்டி கார்ட் / பக். 21 / 2005

**


ஐடென்டிட்டி கார்டு


படித்துக்கொண்டிருந்த காலத்தில்

ஒரு பெண் சிரித்துக்கொண்டு வந்தாள்



அவளுடைய சோற்றுக்கும் சூரைமீன் கறிக்கும் மேலாக

எங்களுடைய கைகள் குழைந்தன



நாங்கள் ஒரே பெஞ்சில்

இந்து கிறித்துவக் குடும்பமானோம்



நான் நெரூதாவின் கவிதைகள் வாசித்து நடந்தேன்

அதற்கிடையில் என் ஐடென்டிட்டி கார்டு காணாமற் போனது



நான் பார்த்தேன். கார்டைக் கொடுத்தவள் சொன்னாள்:

சிவப்புப் பேனாவால் குறித்திருக்கிறதே

ஸ்டைபெண்ட் வாங்கிய கணக்கு.



இந்தக் காலத்தில் ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் உட்கார்ந்து

தம்மை மறப்பதைப் பார்ப்பதேயில்லை

சற்றுக் கழிந்து அவர்கள் பிரிந்து போவார்கள்

இனி அவர்கள் சேர்ந்தாலும் வியப்பில்லை

அவர்களுடைய ஐடென்டிட்டி கார்டுகளில் செந்நிறக் குறிகள் இருக்காது.



ஐடென்டிட்டி கார்டு / பக். 28 / 2005

***


நிலவை நேசித்த பெண்


வீடுவாசல் பெருக்கி, செருப்பணிந்த

கோழிக்குத் தீனிவைத்து, சிரிக்கின்ற

பூனைக்குப் பால்வார்த்து, காலையுணவுண்டு

நேசம் பரிமாறி நிலவை நேசித்து

இரவுக்குப் பயந்து நீ உறங்குகிறாயோ?



சோஃபீ, பிஞ்சுமனமே, உனக்கானவை என்

கவிதைக் குருவிகள் எல்லாமும்.



நிலவை நேசித்த குழந்தாய், தனிமையால்

உருவாக்கப்பட்டாயோ நீ, பள்ளியின்

வாசலில் கூட்டாளிகள் ஓடியாட

பேசாமல் பார்த்து நிற்கிறாய் சோஃபியா, நீ,

பேசாதிருப்பதேன் பசித்ததோ?



கூட்டாளிகளில்லாத பெண்ணே, ஒருமுறை நீ

பாட்டுப் பாடக் கேட்டேன், உன் நீள்முடி

காற்றிலவிழ்த்து வட்டமிட்டு நீ

விழுந்து சிரிப்பதைப் பார்த்தேன், வழிகளில்

தனக்குத்தானே மெதுவாகப் பேசி

மெல்ல நடந்து நீ போவதைப் பார்த்தேன்.



வீட்டருகில் ஒருமுறை காணாமற்போக

வாய்க்கால் கரைவரை தேடித் திரும்பிய

நீ வளர்க்கும் நாய், குரைத்தபடி

கேட்டதென்ன? பதிலுக்கு என்ன சொன்னாய் நீ?

ஆந்தைகள் முனகும் இரவில்

பெட்டைப் பூனையும் நீயும் உறங்குகிறீர்கள்

பிரார்த்தனைபோல குறுக்கும் நெடுக்குமாய்.



குட்டிச் சிறுத்தைகள்போல வெய்யில்

துள்ளி விளையாடிக் களிக்கும் புலரியில்

வீட்டின் கதவை விரியத் திறந்து நீ

சிந்தும் புன்னகை வாழ்வின் நீர்.



தாயிழந்த குழந்தாய், உனக்கு நான்

என்ன கொடுக்க, பசிக்கும், நேசத்துக்கும்?

என் கை வெறுமை, இதயம் விஷமயம்

இல்லை, சேற்றில் மலர்கிறது பவளமல்லி.



என் கவிதை காட்டு நாவல் பழம்

என் கவிதை தாயின் உதடுகள்

என் கவிதையின் ஞானஸ்நானத்தால்

உன்னைச் சகோதரியாக்குகிறேன் நான்.



துக்கங்களையெல்லாம் கவிதைகளாக்க

துக்கமே, நீ என்னுடனே இருக்க வேண்டும்.


கறுத்த கல் / பக். 16 / 2000

***
கறுத்த கல்


கறுத்த கல்லின் மேலமர்ந்து

சிறுவயதில் விளையாடியதை நினைக்கிறேன்.

எனக்கு முன்பே பிறந்த கல்லிது

கறுத்தவன் என் கடுமையுள்ள கல்

வெய்யிலிலும் கொடும் மழையிலும்

ஒரு வருத்தமுமில்லாமல்

உணர்ச்சியில்லாமல் கிடந்திருந்த கல்

அதன் யானைமுதுகிலமர்ந்து

சடசடவென்று மண்ணப்பம் சுட்டு விளையாடியதை நினைக்கிறேன்.



அரண்ட காற்றின் சன்னலில்

அம்மா வருவதைப் பார்த்து

கறுத்த கல்லின் தாழ்வாரத்தில்

தனித்திருந்தேன்

மகர வயல்கள் கடந்து பணியிடங்களிலிருந்தோ

தலையில் ரேஷனும் பயிறுமாக

தூரத்து நாற்சந்தியிலிருந்தோ

அம்மா வருகிறாள்.



பசிக்கு மேலாகச் சாரல் மழை.



இருள் மூடிய விளைநிலங்கள்

இருட்டில் பாடும் மலைப் பறவை

இருட்டினூடே வரும் அண்டை வீட்டான்

ஓரினச் சேர்க்கையாளனுக்கு நிறமில்லை.



இவையெல்லாம் பால்யத்தின் குப்பைக்கூடை

இவையெல்லாம் மொத்தமாய் எறிந்து தொலைவில் போகிறேன்

எனினும்

ஆய்வகத்தைக் குடைந்து போயின பிரவாகங்கள்.



கறுத்த பாதைகள்

கறுத்த வேசிகள்

கறுத்த குழந்தைகள்

கறுத்த புத்தகத்தைத் திறக்கையில் காலாட்படைகள்

கறுப்புக்கு என் கறுப்புக்கு

நான் திரும்பி வருகிறேன்.

கருங்கல் உடைத்து எனக்கு

உணவு தந்த தகப்பனை

மரணத்திலிருந்து அழுகையால்

நாங்கள் மீட்ட அன்னையை

சிரட்டை எரித்து

உடைகளைத் தேய்த்துத் தந்த சகோதரிகளை

மறந்தாலும் உன்னை மறவேன் நான்.



போதாது எனக்கு, கருங்கல்லே,

உன் உள்ளம் குடைந்து போகணும் நான்

தூர வனங்களில்

இறந்த நண்பர்கள் கிடக்கும் கல்லறையின்

மூடி திறந்து பார்க்கணும் நான்

தெருவிலலையும் நாடோடிக்கு இசைந்தவன் ஆகணும்

அவளுடன் சேர்ந்து மழையில் நனையணும்

வானில் ஒரு புலியை

விழிகளால் தோண்டி வரையணும்.



கடும் குளிரில் கறுத்த வெறுமை

அதற்குள்ளிருக்கிறது கல்

கதவு மூடாத மௌனத்துக்குள்ளே

மறு வாக்கு இல்லாமல் உறங்குகிறதோ?

கருங்கல் முன்பு ஆழத்திலிருந்து எழுந்து வந்ததோ?

முடிவின்மைக்குள்ளே உருண்டு போகுமோ?


கறுத்த கல் / பக்.36 / 2000


எஸ். ஜோசப் என்ற செபாஸ்டியன் ஜோசப் 1965ஆம் ஆண்டு கோட்டயம் மாவட்டம் பட்டித்தானத்தில் பிறந்தார். பதினாறாவது வயது முதல் கவிதை எழுதி வருகிறார். இப்போது எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரியில் மலையாள விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். கோட்டயத்தில் வசிக்கிறார்.


தொண்ணூறுகளில் வாசக கவனத்துக்கு வந்த புதிய தலைமுறையின் நம்பிக்கைக்குரிய கவிஞர்களில் ஜோசப்பும் ஒருவர். இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. அவை - கறுத்த கல் (2000), மீன்காரன் (2003), ஐடண்டிட்டி கார்டு (2005), உப்பன்டெ கூவல் வரைக்குன்னு (2009). இதில் ‘கறுத்த கல்’ தொகுதி கேரள சாகித்திய அக்காதெமியின் கனகஸ்ரீ விருதும் ‘உப்பன்டெ கூவல் வரைக்குன்னு’ தொகுதி திருவனந்தபுரம் புத்தக் கண்காட்சி விருதும் பெற்றவை. ‘புலரியியிலெ மூந்நு தெங்ஙுகள்’ என்ற நாவலும் எழுதியிருக்கிறார். இங்கே இடம் பெறும் கவிதைகள் ஜோசப்பின் மேற்குறிப்பிட்ட தொகுதிகளிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. 2008 மே மாதம் ஜெயமோகன் உதகை நாராயண குருகுலத்தில் நடத்திய தமிழ் மலையாளக் கவிஞர்கள் சந்திப்பில் விவாதிப்பதற்காக இவற்றுள் பெரும்பான்மையும் தமிழாக்கம் செய்யப்பட்டன.
 
நன்றி : சுகுமாரன் & காலச்சுவடு
 

Read more...

ஜாவேத் அக்தர் கவிதைகள்

>> Tuesday, May 4, 2010

எனது முற்றமும், எனது மரமும்


விரிந்து பரந்திருந்தது
முற்றம்

அதில்தான் அத்தனை
விளையாட்டுகளும்

முற்றத்தின் முன்னேயிருந்தது
அந்த மரம்
என்னைவிட உயரமாயிருந்தது

நான் பெரியவனானதும்
அதன் உச்சியை தொடுவேன்
என்ற நம்பிக்கையிருந்தது

வருடங்கள் கழிந்து
வீடு திரும்பினேன்

முற்றம் சின்னதாயிருந்தது
மரம் முன்னைவிட உயரமாயிருந்தது



கஜல் - 1 -

நம் விருப்பத்தின் சோதனை தானிது
அடி எடுத்தோம் இலக்கு பாதையானது

பிரிவின் அச்சில் சர-சரவென சுழன்றவன்
மானுக்கு அதன் கஸ்தூரியே தண்டனையானது

ஆசையாயிருந்தது கை கூடியது-ஆனால்
தொலைந்து போனதே அது என்னவாயிருந்தது

மழலையில் பொம்மைகளை உடைத்திருக்கிறேன்
துயர முடிவுகளுக்கு அது ஆரம்பமாயிருந்தது

காதல் செத்துவிட்டதால் கவலைதான் எனக்கும்
அதுவே நல்ல காலத்திற்கான மாற்றமாயிருந்தது

தொடுவதெல்லாம் பொன்னாக வேண்டுமென்றிருந்தேன்
உன்னைப் பார்த்தப்பின்னதை சாபமாக உணர்ந்தேன்

கனவெனும் நோய்க்கினி விடுதலை தான்
உலகமொரு கசப்பான மருந்தாய் இருந்தது.



கஜல் - 2 -


மழலைப் பருவத்தில் நாளும் தனித்திருந்தேன்
மனதின் முடுக்கில் மட்டுமே விளையாடித் திரிந்தேன்

ஒருபுறம் இமைகளின் பாதுகாப்பு போராட்டம்
மறுபுறம் வழியும் கண்ணீரின் நீரோட்டம்

வாழ்க்கை சந்தை மாறுபட்ட மருட்கையானது
அங்காடியில் ஆசைகள் அடுக்கப்பட்ட அலங்காரமானது

வலிகளுக்கு நிவாரணம் கொடுப்பது தற்கொலையாகுமா
மரணத்தின் பேரிடரும் பெருங்குழப்பமும் நீங்குமா

வலியையும் பிணியையும் உணர்ந்திருக்கிறோம்
மனமும் இதயமும் சாகிறது இன்று பசியால்



குழப்பம்

கோடி முகங்கள்
அதன் பின்னே
கோடி முகங்கள்
இவை பாதையா
முட்களின் கூடா
பூமி மூடப் பட்டிருக்கிறது
உடல்களால்
எள் வைக்கவே இடமில்லை
எங்கே வைப்பது காலை
இதைப் பார்க்கும் போது
நிற்குமிடத்திலேயே
வேரூன்றி விடலாமென
எண்ணுகிறேன்
என்ன செய்ய முடியும்?
எனக்குத் தெரியும்
இங்கேயே நின்று விட்டாலும்
பின்னாலிருக்கும் பெருங்கூட்டம்
பாய்ந்து வந்து, அதன் பாதங்களால்
என்னை பசையாக்கிவிடுமென்று
அதனால், நடக்கிறேன்
என் பாதத்தின் அடியிலிருக்கும்
பரப்பில் மட்டும்

யாரோ ஒருவரின் மார்பில்
யாரோ ஒருவரின் புஜத்தில்
யாரோ ஒருவரின் முகத்தில்
நடந்தால் பிறரை
மிதிக்கிறேன்
நின்றால்
மிதிக்கப் படுகிறேன்

ஏ மனமே,
பெருமைப்பட்டுக் கொள்வாயே
உன் முடிவுகளுக்காய்
அப்படியானால் சொல்:
என்ன முடிவெடுத்துள்ளாய் இன்று


- ஜாவேத் அக்தர்


தமிழில் : மதியழகன் சுப்பையா
தொகுப்பு : அம்பறாத்தூணி
 நன்றி : வார்ப்பு

Read more...

எதற்காக இந்த வலைப்பதிவு...

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்“ என்கிற கனவினை மெய்ப்பிப்பதற்கான மொழிபெயர்ப்புகளுக்கான ஒரு வலைப்பதிவு இது.

மொழிபெயர்ப்புகள் பற்றி..

ஒரு மொழி தன்னை வளமானதாகவும் வனப்பானதாகவும் ஆக்கிக்கொள்ள மற்ற மொழிகளுடன் கொள்ளும் ஒரு உறவே மொழிபெயர்ப்பு.

  © Blogger template Digi-digi by Ourblogtemplates.com 2008

Back to TOP